Friday, December 31, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


பதிவுலகில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

வாழ்க்கை நதியில் இன்னொரு பயணம். நிறைய புத்துணர்வோடு ஆரம்பிக்கட்டும்.. 

வரும் ஆண்டு அனைவர் வாழ்விலும் வளமையை கொணரட்டும்...

Sunday, October 31, 2010

திரும்பி பார்க்கிறேன்


திருமணம், அதற்கு பின்னான இடைவெளியில் வெகு நாட்கள் வரை பதிவுலகம் பக்கம் ஒதுங்க முடியவில்லை. இதோ சற்றே கிடைத்த இடைவெளியில் சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றேன். திருமணம் - வாழ்வில் அறிய திருப்பு முனையாய் இருந்தது.  பால்யம் முதல் இது நாள் வரையில் நிறைய மனிதர்களை கடந்து போகின்றோம். சிலரை வாழ்வின் நதி எங்கும் ஞாபகத்தில் வைத்திருக்கிறோம். சிலர் ரயில் பயண பயணியாய், மறந்தும் மறைந்தும் போகின்றனர்.

திருமண அழைப்பிதல் தரும் பொருட்டு, நிறைய நண்பர்களை, என் ஆசிரிய பெருந்தகைகளை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். அந்த வகையில், அந்த நிமிடங்கள் தித்திபானவையே. நிறைய மனிதர்களின் மனங்களில் இருந்து நான் மறைந்து போயிருந்தேன். ஆசிரியர்களில் பலருக்கு என்னை அடையாளம் தெரிவதில் பிரச்சனை இருந்தது. அவர்களுடன் கடந்த நாள் நிகழ்வுகளை சொல்லி என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.  வருஷத்தில் எப்படியும் இருநூறு புதிய முகங்களை சந்திப்பவர்கள் அவர்கள் இல்லையா.

முன்பே என் மன  கண்ணில் நிறைய மனிதர்களை சந்திக்க எண்ணி இருந்தேன். வாழ்க்கை கொடுக்கும் கால இடைவெளியில், அது தரும் கிடிக்கி பிடியில் சிலரை சந்தித்து அளாவவும், நட்பை புதுப்பிக்கும் வாய்ப்பும் பெற்றேன்.  நிறைய நண்பர்களுக்கு, அழைப்பிதழை மின்னஞ்சல் செய்திருந்தேன்.

சிலர் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆம்.. அவரவர்க்கு அவரவர் வாழ்க்கை சூழல்கள்.. அவரவர் ஓட்டங்கள்.. ஆனால் அதில் சிலர் வரவு அபூர்வமாய் அமைந்தது. மொத்தத்தில் நிகழ்வுகள் கலவையாய் எண்ணங்களை தந்து சென்றன. எனக்கு அகரம் கற்பித்த ஆசிரியரை அன்று சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். தன் முதிய வயதில், நடுங்கும் கரங்களோடு என் கரங்களை பற்றி தன் அன்பையும் நட்பையும் பகிர்ந்து கொண்டார்,


மிக முக்கியமாய் புகைப்படம் எடுத்து கொண்ட நிமிடங்கள்.. இன்னும் பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாதவை.. சார்.. நீங்க.. கண்ணை மூடாதீங்க.. கண் சுருங்குது பாருங்க.. சார் கொஞ்சம் சிரிங்க.. இன்னும் எனக்கு புரியவே இல்லை.. எப்படி சார் சிரிச்சுட்டே கண்ணை சுருக்காமல் பார்ப்பது.. ஒரு சமயம் சிரித்த பொழுது, அருகே இருந்து வந்த கமன்ட்.. "கண்ணு சுருங்குது பாரு" .. என்பதே.. இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி பல நிமிடம் நின்றேன்.. இப்படியே போனால் சந்திரமுகியில் வரும் வடிவேலின் ராஜ பார்வை கிட்டும் என பயந்து போனேன்.. என் செய்ய.. மணம் முடித்த மண மக்களை கேட்டு பாருங்கள்.. அது தனி இம்சையே..  அவர்கள் புகைப்படம் எடுத்து கொண்ட கதையை ஒரு மெகா நாவலாய் போட முடியும் என்பது என் நம்பிக்கை. 

வாழ்வு நதியை திரும்பி பார்க்கும் பொழுது கண்கள் ஓரம் நிறைய கணங்கள் கடந்து போனது தெரிந்தது. பால்யத்தில் விரல் பிடித்து நடந்த மனிதர்களில் நிறைய பேர் இந்த நிமிடங்களை பகிர்ந்து கொள்ள என்னுடன் இல்லை. நிறைய மனிதர்களின் வழிகாட்டுதலில், அவர்களின் குட்டுகளில் இந்த நிமிட மனிதனை உருவாக்கி உள்ளது. அவர்களின் அத்தனை பார்வைக்கும், என் நன்றிகள். வாழ்வில் அனைத்தும் உள்வாங்கி முன் செல்ல பழகி உள்ளேன். கடந்த நாட்கள் நிறைய சறுக்கல்களும் துரத்தலும் நிறைந்ததே.. என் வரையில் கடந்த போன நாட்கள் இல்லை எனில் இன்றைய நான் இல்லை. கடந்து போன அத்துணை மனிதர்கட்கும் மரியாதைக்கு உரியவர்களே.

வாழ்க்கை நதி இன்னும் ஆரவாரத்தோடு பயணிக்கிறது. உடன் பயணிக்கும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.


.
.



      

Sunday, June 13, 2010

சுஜாதா அவர்களின் " பிரிவோம் சந்திப்போம்"


சுஜாதா அவர்களின் எழுத்து, தொண்ணூறுகளின் மத்தியில் அறிமுகமானது. அவரது புத்தகங்களை படித்த தருணங்களில் அவரின் முகம் அறிந்தவன் இல்லை நான். பின் அவரின் ஜீனோம் பார்க்க கிடைத்தது. சுஜாதா அவர்களை, வெகு ஜன பத்திரிகைகளில் படித்து வந்த நான், அவரின் எழுத்தை சமீபத்தில் வாசித்தேன். நிறைய பேர் அவரின் "பிரிவோம் சந்திப்போம்" நாவலை புகழ்ந்ததை கேட்டு, ஏதாவது ஒரு நாள் படிக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டேன். சில புத்தகங்கள், ஏதோ ஒரு மழை நாட்களுக்காய், புத்துரு மாறாமல், தவம் இருக்கின்றன. அப்படி ஒரு மழை நாளும், இரவும், சுவாசம் நிரப்பும் குளிரும் அந்த நிமிடங்களை அருமையாக்குகின்றன. புத்தகத்தை படித்த நிமிடங்களை விட, அதை அசை போடும் நிமிடங்கள் தித்திப்பானவை.


எண்பதுகளில் துவக்கத்தில், இந்த நாவலை எழுதி இருக்கிறார். ஏதோ நேற்று எழுதியது போல் அப்படி ஒரு வசீகரம் அதன் பக்கங்களில். முதல் பாகத்தை முதலில் படித்து, சற்றே இடைவெளி விட்டு, இரண்டாவது பாகத்தை படிக்க எடுத்தேன். அவரும் விகடனில், முதல் பாகத்தை முடித்து, சற்றே இடைவெளி தந்து இரண்டாவது பாகத்தை தந்திருக்கிறார். இந்த புத்தகத்தை பற்றி சொன்னால், "படித்தேன்; ஒவ்வொரு பக்கமும் ஒரு படி தேன்!" என தயங்காமல் சொல்லலாம்.

அவரின் இந்த புத்தகத்தை கொண்டு "ஆனந்த தாண்டவம்" திரைப்படம் வந்தது. இந்த திரைப்படத்தின் இறுதி பகுதியை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. " கனா காண்கிறேன்! கனா காண்கிறேன்! கண்ணா..  " பாடல் இன்னும் செவியில் முட்டுகின்றது. திரைப்படத்தை கண்டாலும், எழுத்தின் சுவாரஸ்யம் தனி தான்.முதல் பாகத்தை எடுத்த பின், புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு வசீகர ஒழுங்கு அவரது எழுத்தில். சுவாரஷ்யமான எழுத்து, விறுவிறுப்பான நடை என அவரது ரசிகர்கள் ஏன் கொண்டாடுகின்றனர் என காரணம் புரிந்தது. முதல் பாகத்தை நான்கு நாட்களில் படித்து முடித்தேன். இதில் மிக மிக சுவாரஷ்யம், ரகுபதி கதாபாத்திரத்தின் அப்பா..  இது ஏதோ சுஜாதாவே அதற்கு  பின் நின்று பேசுகிறார் என தோன்றியது.

பாபநாசத்தில் துவங்குகிற கதை, சென்னையில் வலம் வந்து, அமெரிக்க நகரங்களில் முடிகின்றது. வாழ்வில் இதுவும் கடந்து போகும் என புரிய வைக்கின்றது கதை களம். பாபநாசத்தில் துவங்குகின்ற கதை எதோ நம்மை பாபநாசத்தை தரிசித்த அனுபவத்தை அளிக்கின்றது. ரகுபதி வெளிப்படுத்தும் தவிப்புகள், கோபங்கள், மகிழ்ச்சி நம்மையும் தொற்றி கொள்கின்றது. சாதாரணமாய் வாழ்வை எதிகொள்ளும் மனிதனின் மேல் சமூகம் பதிக்கும்  பிம்பங்கள் சற்றே அதிகம். சமூகமே ஒரு மனிதனிக்கு முத்திரை குத்தவும் செய்கின்றது. சமூகம் தானாய் சித்தரித்த உருவத்தில், ஒரு இளைஞன் படும் அவதி நம்மையும் நிஜம் தானே என சொல்ல வைக்கின்றது.

ரகுபதி எடுக்கும் தவறான முடிவுகள் இருபதுகளில் நாமும் அப்படி தான் இருந்தோம், அப்படி தான் முடிவெடுத்து இருந்தோம் என சொல்ல முடிகின்றது. அவன் அடையும் தடுமாற்றங்கள், ஏமாற்றங்கள் நம்மையும் பதறவும் பரிதவிக்கவும் செய்கின்றன. வாழ்வில் எதிர்படும் காதலும் அதை எதிகொள்ளும் பக்குவமும் ஒரு இளைஞனின் வாழ்க்கை போக்கை எப்படி மாற்றுகின்றன என சொல்கிறது கதை. கதையில் இன்னொரு சுவாரஷ்யம் ரகுபதி பொறியியல் மாணவனாய் உருவகப்படுத்தப்பட்டு  உள்ள விதம். அட சுஜாதாவும் அப்படி தானே! ஒரு பொறியியல் பட்டதாரி என ஞாபகம் வந்தது.அட அதே எலக்ட்ரானிக்ஸ்!  அவரின் மன ஓட்டம் அப்படியே! அவரை அவரது நண்பர்களும், "வாடா! எஞ்சினியர்! " என வாஞ்சையோடு அழைத்துள்ளனர்.

முதல் பாதியில் ரகுபதி காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயல்வதும் அவனது தந்தை ஆற்றுபடுத்தி அவனின் குறிக்கோளை ஞாபகம் செய்வதும் கதை போக்கை மாற்றுகின்றன. அவனது தந்தை சமூகம் குத்தும் முத்திரைக்கு அப்பாற்பட்டவராய், அரிய தைர்யத்தோடு முன்னெடுத்து செல்கிறார்.  வாழ்கையில் ஒவ்வொரு மனிதனும் எண்ணற்ற திருப்பங்களை சந்திக்கின்றான். ஒரு சில அவனது வாழ்வின் போக்கையே புரட்டி போட்டு விடுகின்றன.

இராண்டாவது பாகம் அமெரிக்காவில் பயணப்படுகின்றது. அன்றைய அமெரிக்க மக்களின் பழக்க வழக்கம், சமூகம் கொடுக்கின்ற போலி அடையாளம் இவற்றை  சுஜாதா நையாண்டி செய்ய தவறவில்லை. " ராதா அமெரிக்க வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்தி விட்டான். நீ இன்னமும் இந்தியனாய் இருக்கிறாய். படித்து முடித்துவிட்டு இந்தியா போய் சேரும் வேலையை  பார்!"  என அறிவுறுத்தும் இடங்கள் அருமை. அன்றைய அமெரிக்க நகரங்கள், சூதாட்ட பொழுதுபோக்குகள், அன்றைய நாள் "பேசிக்" மென்பொருள், எதோ பழைய நாட்களை கண்முன் நிறுத்துகின்றன.

ரகுபதியின் "மேலாண்மை படிப்பு!" இன்றைய கல்விமுறை, மேற்கத்திய கல்விமுறையை ஒரு கை பார்க்கின்றது. அடுத்த கதா பாத்திரம் மதுமிதா! முடிவெடுக்க எத்தனிக்காத வாழ்க்கை தருணம், அடுத்தவர் எடுத்த முடிவில் தன்னை, தன வாழ்வை ஒப்பு கொடுத்த தருணங்கள், பின் வாழ்வில் வெகுதூரம் வந்தபின் எடுக்கும் உடனடி முடிவுகள் என அதிர்ச்சியை தருகின்றன. வெகுளி தனம் அப்படி ஒன்றும் நல்லதில்லை என சொல்கின்றது அந்த மது கதா பாத்திரம்.

அடுத்த அருமையான பாத்திரம் நிச்சயம் "ரத்னா" கதா பாத்திரம். ஒரு ரத்தினமாகவே கதையில் ஜொலிக்க செய்கின்றாள். இந்திய கலாசாரத்தின் மேல் கொள்ளும் ஈடுபாடு, ரகுபதியை யதார்த்ததோடு புரிந்துகொள்ளும் திறன் என அவளின் உலகம் வேறு மாதிரியாய் வளர்கின்றது. .
நிச்சயதார்த்தம் நடக்கின்ற தருணத்திலும், அவளது பிறழாத வாழ்க்கை யதார்த்தம், வாழ்வை பற்றிய நடை முறை உண்மை பொட்டில் அறைகின்றது. அப்பா உங்களை, வீடியோவில் "தங்கையின் நாட்டியம் பார்க்க வைக்க போகின்றார்" என அவள் கொடுக்கும் முன் ஜாக்கிரதை நம்மில் நிறைய பேரை ஞாபகத்திற்கு கொண்டு வருகின்றன. நாமும் வீட்டுக்கு வரும் விருந்தினர் கைகளில் கல்யாண ஆல்பத்தை தந்து அதில் உள்ளவர் இன்னார் என சொல்லி அவர் எதற்கு வந்தார் என்பதை மறக்க வைக்கின்றோம். முடித்தால் அவர் பார்த்து முடிக்கும் வரை காபி கூட கைக்கு வராது..


என்றென்றைக்கும் சுஜாதா ராஜ்ஜியம், தொடரும்., அவரது எழுத்து இன்னும் நிறைய பேரை சென்று சேரட்டும். வாழ்வை நேசிக்கவும், மனிதரை அற்புதமாய் புரிந்துகொள்ளவும் உதவும் புத்தகம் எனக்கு "பிரிவோம் சந்திப்போம்" வகையில் வந்தது. காதலில் தோல்வி கொள்ளும் இதயங்களை ஆற்றுபடுத்தும் அற்புதமான களஞ்சியம். அவரின் அற்புதமான நடைக்கு, கதை சொல்லும் திறனுக்கு ஒரு ராயல் சல்யூட். அவரின் நினைவுகளுக்கு இனிய பூங்கொத்து.
.
.
.    

Sunday, May 30, 2010

வாய் விட்டு சிரிக்க



குழந்தைகள் நாம் யோசிக்க எண்ணாத கோணங்களில் நிறையவே பயணப்படுகின்றனர்.  அவர்களின் உலகை எட்டி பார்த்த பொழுது.. டேய்! இது எல்லாம் கண்ணாடி ஜாடி, தொட்டு விடாதே! எல்லாம் ஒடஞ்சிடும். இது நம் அக்கறை; அறிவுரை; அடுத்த பத்தாவது நிமிடம் கண்ணாடி ஜாடி நிச்சயம் சுக்கலாய் உடைந்திருக்கும். இன்னும் சில பையன்கள் உள்ளனர். கண்ணாடி பாட்டில் இருந்தால், போகிற போக்கில் ஒரு தள்ளு. அது உடைந்தால் எப்படி இருக்கும் என பார்க்க வேண்டாமா? யாராவது செயல் முறை விளக்கம் கொடுத்தால் தானே? நண்பர் ஒருவர் தான் சந்தித்த சம்பவத்தை விவரித்து இருந்தார். அவரது குடும்பம் முழுதும் ஒரு வாரம் மூணார் போய் விட்டு வந்து இருந்தனர். வரும் பொழுது, அங்கிருந்தே ஐந்து  கிலோ வரை தேயிலை தூள் வாங்கி வந்திருந்தனர். ஊருக்க வந்த ஒரு சில நாளில், அவர் வீட்டு வாண்டு, தன் நண்பர்களை அழைத்து, அந்த ஐந்து கிலோ டப்பாவை கீழே  கவிழ்த்து, இதோ பாருங்கள்! இது தேயிலை. இதை நாங்கள் மூணாறில் இருந்து வாங்கி வந்தோம் என விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான். அவனது கை நிறைய தேயிலையை அலைந்ததும், தரை நிறைய மண்ணாய் இருந்ததும் வேறு விஷயம்.


இந்த தொகுப்பு என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது.
அது ஒரு காலை நேரம். அந்த சமயம் சிறுவன் பாபி, சமையலறையை எட்டி பார்கிறான். அவனது அம்மா மதிய சமையலுக்காக, மும்முரமாய் வேலை செய்து கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவனது பிறந்த நாள் வர போகின்றது. தனக்கு என்ன வேண்டும் என்பதை இப்பொழுதே சொல்லி உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் என்பது அவனது அவா. பாபி அவன் அம்மாவை நெருங்கி, அம்மா எனக்கு என் பிறந்த நாளுக்காய் ஒரு பைக் வாங்கி தா என்கிறான்.
 
சிறுவன் பாபி நிறையவே குறும்புகள் செய்வபன். பள்ளியிலும் சரி,  வீட்டிலும் சரி, அவனது வால்தனம்?! சற்றே அதிகம். பாபியை நோக்கி திரும்பிய அவன் அம்மா.. நீ நிஜமாய், பைக்கை பெற அருகதை உள்ளவனா? யோசித்து பார் என கேட்டார்.. பாபி தனக்குள் அந்த தகுதி இருப்பதாகவே நினைத்தான். அவனது அம்மா, அவனது கடந்த ஒரு வருட செயல்களை நினைவுக்கு கொணர முயன்றார். அவர் பாபியிடம் நீ உன் அறைக்கு சென்று, சென்ற ஒரு வருடத்தில் எப்படி நடந்து கொண்டாய் என யோசித்து பார் என சொன்னார். மேலும் அதன் பின், நீ எவ்வளவு தூரம் தகுதியானவன் என்பதை சொல்லி கிருஷ்ண பகவானுக்கு கடிதம் எழுது என்றார். தன் அறைக்கு வந்த பாபி கிருஷ்ணனுக்கு கடிதம் எழுத அமர்ந்தான்.


கடிதம் 1
அன்புடைய கிருஷ்ணா,
நான் இந்த வருடம் நிறையவே,  நல்ல பையனாக இருந்தேன். நான் எனது பிறந்த நாளுக்காய், ஒரு பைக்கை எதிபார்க்கிறேன். அதன் நிறம் சிவப்பாய் இருக்கட்டும்.

உன் நண்பன்,
பாபி.

பாபிக்கு தெரிந்த வரையில் தான் நல்ல பையனாய் இந்த வருடம் இருக்கவில்லை. ஆகவே இந்த கடிதத்தை கிழித்து விட்டு இன்னொரு கடிதம் எழுத ஆரம்பித்தான்.

 கடிதம் 2
அன்புடைய கிருஷ்ணா,
இது உன் நண்பன் பாபி. நான் இந்த வருடம் நல்ல பையனாய் இருந்தேன். நான் சிவப்பு நிற பைக்கை பெற ஆவலாய் உள்ளேன். நன்றி,

நட்புடன்,
பாபி.

இதன் பின் பாபி யோசித்தான். தான் சொன்னது பொய்யே. அதனால் அந்த கடிதத்தை கிழித்து விட்டு இன்னொரு கடிதம் எழுத துவங்கினான்.  

கடிதம் 3
அன்புடைய கிருஷ்ணா,

நான் இந்த வருடம் பரவாயில்லை ரகத்தில் இருந்தேன். இருப்பினும் எனக்கு ஒரு பைக் வேண்டும்.
பாபி.

இந்த கடிதத்தையும் இறைவனுக்கு அனுப்ப முடியாது என பாபிக்கு தெரியும். ஆகவே அதையும் கிழித்து விட்டு நான்காவது கடிதத்துக்கு தாவினான்.

கடிதம் 4
கிருஷ்ணா,
எனக்கு தெரியும்! நான் நல்ல பையனாய் இந்த வருடம் இருக்கவில்லை. நான் அதற்காக வருத்தபடுகிறேன். நான் இனி நல்ல பையனாய் இருப்பேன். ஆகவே எனக்கு பைக்கை தயவுகூர்ந்து  அனுப்பி வை.  நன்றி.
பாபி.

பாபி அறிந்தவரை இது உண்மையாய் இருப்பினும், இறைவன் தனக்கு பைக்கை அனுப்ப மாட்டான் என எண்ணினான். துக்கம் அவனை ஆட்கொண்டது. அதன் பின், அவனது அம்மாவிடம் சென்று தான் கோயிலுக்கு சென்று வருவதை சொல்லி சென்றான். அந்த நிலையில் அவனது அம்மா தனது எண்ணம் வெற்றி கண்டதாய் எண்ணினார். பாபியின் முகம் வாடி இருந்ததே அதற்க்கு காரணம். அந்த நிலையில் அவனது அம்மா பாபியிடம் மறக்காமல், மதிய உணவுக்கு வருமாறு ஞாபகப்படுத்தினார். கீழே இறங்கி வந்தே பாபி, தன் தெருவில், இறுதி திருப்பத்தில் இருந்த கிருஷ்ணர் கோவிலை சென்றடைந்தான்.

கோவிலில் சுற்றும் முற்றும்  பார்த்தான். யாரும் இல்லை. அந்த நிலையில் குனிந்து அங்கு இருந்த ராதை சிலையை எடுத்தான். எடுத்தவன், ராதை சிலையை, தன் சட்டை இடைவெளியில் மறைத்து கொண்டான். பின் அங்கிருந்த தன் வீட்டுக்கு ஓட்டம் எடுத்தான். பின் தன் அறைக்கு வந்த அவன் வீட்டு கதவை தாளிட்டான். அதன் பின் ஒரு தாளுடன், கிருஷ்ணனுக்கு  கடிதம் எழுத அமர்ந்தான்.

கடிதம் 5
நான் உன் பிரிய காதலியை கடத்திக்கொண்டு வந்து விட்டேன். அவளை மீண்டும் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தால், எனக்கு பைக்கை உடனடியாக அனுப்பி வை!!!!!

இப்படிக்கு,
பாபி.
.
.

மொபைலும், க்யுபிட் தேவதையின் கையும்


கைபேசியின் உபயோகம் வரமா சாபமா என ஒரு பக்கம் பட்டிமன்றம் நீள்கிறது. நான் கண்ட வரையில் வரமே! பல நேரங்களில், கைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் அருமையாய், சில சமயம் ஆச்சர்யத்தோடும்[ நிறைய உள்குத்தோடும் ] வருகின்றது..   குறுஞ்செய்தி வந்துள்ளதை உணர்த்தும் அழைப்பு அதை விட அருமை.. "மாமாமா......  நீங்க எங்க இருக்கீங்க" வில் துவங்குகிறது அதன் பரிணாமம். "மாமா! மெசேஜ் வந்திருக்கு பாரு.. " - இது ஒரு வகை.  அடுத்த வகை சற்றே வித்தியாசமானது.  முதலில், பி பி. சி குரலில்..  " Excuse me Boss!" வடிவேலு குரலில் சற்றே எரிச்சலுடன்  "என்னா ? " ."You have a text message !" திரும்பவும் வடிவேலு.. "அது தான் சொல்லியாச்சு அல்ல! கெளம்பு!"

குறுஞ்செய்திகள் பல வகை ஒவ்வொன்றும் ஒரு வகை.. ம்ம். ஆகட்டும்! ஆகட்டும்!

  • வேதனை கவிதை: ஒரு நண்பன் அருகில் இருந்தும் பேச முடியவில்லை.. உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை ! எக்சாம் ஹால்! என்ன கொடுமை சார்? [ எதோ சிவாஜி ரேஞ்சில் பீல்! மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் பிரிந்து விட்டன! சந்தித்த போது பேச முடியவில்லையே!]
  • திராட்சை பிழியப்பாடாவிடின், நல்ல ஒயின் கிடைப்பதில்லை. மலர்கள், சாறு எடுக்கபடாவிடின், நல்ல வாசனை திரவியம் இல்லை. ஆகவே வாழ்வில், நீங்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டால், வாழ்வு உங்களிடமிருந்து அற்புதமான மனிதனை வெளி கொணர்கிறது என அர்த்தம்.
  •  ஒரு குடை, மழையை தடுத்து நிறுத்தாது,. ஆனால், மழையிலும், நாம் தொடர்ந்து நிற்கவும் பயணப்படவும் முடியும். அது போலவே, தன்னம்பிக்கை வெற்றியை தருவதில்லை. ஆனால், எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளும் வல்லமையை தருகிறது.
  • வாழ்க்கை நாம் எண்ணுகிற திசையில் எல்லாம், திரும்புவதில்லை. ஆனால் நம்மால், நாம் எண்ணுகின்ற  வகையில்  சிறப்பாய் வாழ முடியும். நம் வாழ்வை நறுக்கு தெரித்தது போல், மிக சரியாய் வாழ முடியா விடினும் அந்த இடத்தை,  அர்த்தம் நிறைந்த நிமிடங்களால் இட்டு நிரப்ப முடியும்! ஒவ்வொரு நிகழ்வையும் அர்த்தம் நிறைந்ததாய் மாற்ற முடியும். 
  • வாழ்கையில், நிறைய தருணங்களில், நமக்கான அனைத்து கதவுகளும் அடைபட்டு விட்டதாய் எண்ணுகிறோம். அப்படி ஒரு சமயத்தில், நாம் ஒரு விஷயத்தை  நினைவில் கொள்வோம். அடைபட்ட கதவுகள் பூட்ட்டப்படாமல் இருக்கும்.
  • நீ இப்பொழுது ஓய்வாய் உள்ளாயா? உன்னோடு சில நிமிடம் மனம் விட்டு பேச வேண்டும் நேரம் கிடைத்தால் என்னை அழை. அதற்க்கு பின்   இரண்டு வரிகள் விட்டு.. "ஒன்றுமில்லை நாளை, அரபிக்கடல் விலைக்கு வருகிறது.!  நாம வாங்கி போடலாமா? "
  • அமைதி பூத்த உதடுகள், நிறைய தருணங்களில் பிரச்சனைகளை தவிர்க்க உதவும். ஆனால் புன்னகை பூக்கும் உதடுகள், நிறைய பிரச்சனைகளை தீர்க்க உதவும். ஆகவே உன் முகம் எப்பொழுதும் புன்னகையால் நிரம்பட்டும்!
  • வாழ்விடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதே! எதிர்பார்ப்புகள் மன வருத்தத்தை கொணர்பவை. எதிபார்ப்புகள் இல்லை என்றால், ஒவ்வொரு நிமிடமும், ஆச்சர்யமானதே!. ஆச்சர்யம், நிறைய மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும்.
  • ஒவ்வொரு இதயமும், தன்னுடன் நிறையவே  வலியை சுமந்து செல்கின்றது. அதில் ஒரே வித்தியாசம்,  ஒரு சிலர் அதை தன் கண்களில் மறைக்க முயல்கின்றனர். சிலர், புன்னகையால் கடக்க முயல்கின்றனர்.
  • ஒரு முடியக்கூடிய வேலையை உங்களால் செய்து முடிக்க முடிந்தால், அது உங்கள் திறமை. ஒரு முடிக்க முடியாத பணியை, நீங்கள் முயன்று முடிக்க முன் வந்தால் அது உங்கள் தன்னம்பிக்கை. - பிடல் காஸ்ட்ரோ
இந்த குறுஞ்செய்திகள் இரவு முழுதும் வந்து நம்மை தொல்லை தருவது இன்னொரு விஷயம். அப்படி ஒரு நாள், நான் அறைக்கு வந்த பொழுது அறை நண்பர், இன்னொரு புதிய மனிதரை அறிமுகம் செய்வித்தார். அதன் பின் அவர்கள் உறங்க இன்னொரு அறைக்கு சென்றனர்   அப்பொழுது எனக்கு தெரியவில்லை. ஒரு குட்டி சாத்தானையும் விட்டு செல்கின்றனர் என... அதன் பின் அவரது கை பேசியில் தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு நிமிடமும், "மாமா மெசேஜ்  வந்திருக்கு பாரு ! " என ஆரம்பித்தால் எப்படி இருக்கும். ஒரு வழியாய் அப்படி இப்படி என அந்த கைபேசியை முயன்று மௌனமாக்கினேன். இதற்கு எல்லாம் சிகரம் வைத்தது போல் ஒரு நிகழ்ச்சி காலையில் நடந்தது.

மார்கழி குளிரில், இழுத்து போர்த்தி உறங்கி கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சி கைபேசி மூலம் காத்திருந்தது . அவரது கை பேசி, காலை நாலரை மணி  அளவில், உச்ச ஸ்தாயியில், " வண்டியிலே மாமன் பொண்ணு! ஓட்டுறவன் செல்ல கண்ணு!  " என ஆரம்பித்தது. அதன் பின், அவர்  சாவகாசமாய் வந்து அதை நிறுத்தியது தனி கதை. போகும் பொழுது, நம் நண்பர் ரொம்ப அப்சட் ஆயிட்டாரு போல என, அறை நண்பரிடம் சொல்லி போனார். நானும் இல்ல அய்யா! இல்ல! ராத்திரியிலே ஒரு சுத்தியல் கெடைக்காம போயிருச்சு என சொல்லி கொண்டேன்.

அதன் பின் என் அறை நண்பர் கதையை, ஒரு நாள் ஆரம்பித்தார். நம் விருந்தினர் ஒரு நாள், ஒரு எண்ணிற்கு தொடர்பு கொள்கையில், அது வேறொரு எண்ணிற்கு போய் விட்டது. அது தான் துவக்கம். அந்த எண், இன்னொரு ஊரில் இருந்த முகம் தெரியாத பெண்ணுடையது. சாதாரணமாய் பேச ஆரம்பித்த நட்பு, இறுதியில் நிறைய இறுகி போனது. இந்த பையன், நான் பார்ப்பதற்கு சாயிப் அலி கான் மாதிரி இருப்பேன் என சொல்ல, அந்த அம்மிணியும், நான், தீபிகா படுகோன் தங்கச்சி போல் இருப்பேன்[ பிரகாஷ் படுகோனே அவர்களுக்கு ஒரே பொண்ணு தான் என நீங்கள் லாஜிக் சொல்லி, கண்ணை குத்த வராதீர்கள்..  ] என சொல்லி இருக்கிறது.  லைலா, மஜ்னு, அம்பிகா, அமராவதி, ரோமியோ, ஜூலியட் வரிசையில் இன்னொரு இணை என இருவரும் பெருமை பட்டு கொண்டிருந்தனர். வைரமுத்து வார்த்தைகளில் சொன்னால், ஷெல்லியின், பைரனின் கல்லறை தூக்கத்தை கலைத்திட ஆவலோடு இருந்தனர். 

இப்படி போன காதல் உற்சவம், ஒரு நாள் இன்னொரு திருப்பத்துக்கு வந்தது. இருவரும் சந்திப்பது என்றும், அந்த பெண் பேருந்து நிலையத்தில் காத்திருப்பது என்றும் முடிவானது. பையனும், முதல் நாள் இரவே பயணப்பட்டு,  இருநூறு  கிலோமீட்டரை பேருந்தில் கடந்து போய் சேர்ந்து விட்டான். காலை எட்டரை மணிக்கு, பேருந்து நிலையம் வந்தாகி விட்டது. அந்த நிலையில், தன் கை பேசியில், பேச எத்தனிக்கிறான். அந்த நிலையில் அவனுக்கு சற்று தள்ளி ஒரு பெண், சற்றே பரபரப்போடும், கை பேசியை முறைத்தபடியும் இருந்துள்ளது. நண்பன் எதிர்பார்க்காத முற்றிலும் வேறொரு உருவம் எதிரில்....  ஊரில் இருந்த எல்லா குல சாமிகளையும் வேண்டி கொண்டு,[ இந்த பெண்ணாய் மட்டும் இருக்க கூடவே கூடாது என  ... ] அழைத்து இருக்கிறான். நீங்கள் யூகித்தது சரி தான். அந்த பெண் தான் அது. அட நீங்கள் இங்கே தான் இருந்தீர்களா? என பேச்சு தொடர்ந்துள்ளது.

அதன் பின், அந்த ஊரில் இருந்த பெரிய கடையில் சிற்றுண்டி உண்டு, துணிகள் வாங்கி, மதியம் ஒரு திரைப்படம் பார்த்து, ஊரை நன்றாக வளம் வந்து, பிரியா விடை கண்டு திரும்பி இருக்கிறார்கள். அட! அதன் பின் என்ன ஆச்சு!  இன்னமும் நட்பு தொடர்கின்றதா? என ஆவல் கொண்டோம்.  அந்த பையன் வரும் வழியில், எதிர்பட்ட ஆற்று போக்கில், தன் சிம்மை விட்டெறிந்து இருக்கிறான். இது தான் நடந்திருக்கிறது. இந்த தொடரில், சம்பந்தம் இல்லாமல், மேலே உள்ள,  அறை நிகழ்வு, எதற்கு என்கிறீர்களா?  இந்த கதையின் மத்திய பகுதியின் ஒரு நாள் தான், நான் சந்தித்ததும், மண்டை காய்ந்ததும்..அட ராத்திரியில் கூட குறுஞ்செய்திகளா! என நீங்கள் ஆச்சர்ய பட கூடும். ஆனால் காதலுக்கு தான் நேரம் காலம் கத்தரிக்காய் எதுவும் இல்லையே!
.
.

Friday, May 21, 2010

தைர்யத்தின் மறு உருவம் - அனு அம்மா

எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மிக அதிர்ச்சியாய் இருந்தது. மருத்துவமனைக்கு படையெடுப்பதும், பின் நோய்களில் இருந்து விடுபட்டு அதை அற்புத அனுபவமாய் நகை சுவையோடு சொல்லும் அவர் இன்று இல்லை என்பதை நம்ப மனம் மறுக்கிறது. கண்கள் நீர் சொறிந்தபடி அவரது வாழ்வை, புரட்டுகின்றன. மரணம் ஒரு கருப்பு ஆடு. அது பூச்செடிகளை தின்று விடும் என்பதை மீண்டும் உணர வேண்டி உள்ளது.

முன்பொருமுறை மங்கையர் மலர் இதழில், இது நான் கடந்து வந்த பாதை.. என தன வாழ்வையே மற்றவர்களுக்கு ஒளிவு மறைவின்றி படிப்பினையாய் தந்தவர் அவர். கணவனை இழந்ததும், தன குடும்பத்துக்காக உழைத்ததும், ஈடுபாட்டோடு தன்னை பெரும் போராட்டத்துக்கு தயார்படுத்தியதும், அவருக்கே உரித்தானவை. எஸ். வீ. சேகரிடம் ஸ்டில் போட்டோ கிராபி கற்றவர். நேவி ப்ளு சட்டை கண்ணில் தட்டு பட்டால், அது தன் ரமணன் என எண்ணி, அட அவர் தான் போய்விட்டாரே என சமாதானம் கொண்டவர். தனக்கு கஷ்டம் என்றால் தயிர் சாதத்துடன் வீட்டு வாசலில் வந்து நின்ற தன் தாத்தா பாட்டியை அவர் அறிமுகம் செய்ய தவறியதில்லை. அவரது படைப்புகள் மூலம் நம்மை இன்னும் ஆட்கொண்டு வருபவர். நாவல்கள், சிறுகதை, பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாய் மிளிர்ந்தவர். நம்பிக்கையும், துணிவும் அவரது படைப்பெங்கும் கிளை விரித்திருக்கும். பெண்களை காட்சி படுத்துவதில் , அக உணர்வுகளை சொல்லி செல்வதில், படித்துறையில் கால் நனைக்கும் குழந்தையின் சிலிர்ப்பை போல் இருக்கும்.


நிறைய குடும்பங்களுக்கு தன் வழிகாட்டுதல் மூலம் ஒளி ஊட்டியவர். அவரின் கடிதங்கள் ஒவ்வொன்றும் அம்மாவின் துணிச்சலை சொல்லி செல்லும். குழப்பங்கள் கூடு கட்டும் எத்தனையோ மனங்களுக்கு இருள் நீக்கி நல்வழிக்கு கொணர்ந்திருக்கிறார். நேற்று விகடன் படித்தபொழுது தான் உணர்ந்தேன், அவர் அற்புதமான இசை விமர்சகர் என.. காமேஸ்வரி அய்யர் என விகடனில் வந்த இசை விமர்சனங்கள் அனு அம்மா அவர்களுடையது என. அவரது சிறுகதைகள், நாவல்கள் நிறைய ஆற்றுபடுத்தி உள்ளன.

பல வியாதிகள் அவரை தொந்தரவுக்கு உள்ளாகிய பொழுதும், தன் எழுத்து பணியை ஆத்ம திருப்தியாய் செய்தவர். நான் உடம்புக்கு சரி இலாத பொழுது யாராவது என்னை பார்க்க வந்தால் அவர்களை வர வேண்டாம் என சொல்லி விடுவேன். அவர்கள் வந்து நான் கஷ்டப்படுவதை பார்ப்பதை விரும்பவில்லை என தன்வழி விளக்கம் சொன்னவர். தன் புன்னகையை மட்டுமே இறுதி வரைக்கும் தன் அடையாளமாய் விட்டு சென்றுள்ளாரோ? . தன் அர்த்தமுள்ள பக்கங்களை தன் அடையாளமாய் விட்டு சென்றுளார். ஒரு முறை குறிப்பிட்ட பொழுது கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை நூறு முறைக்கு மேல் படித்திருப்பேன் என சொன்னார். பிறரை குட்டுவதாகட்டும், வழி  காட்டுவதாகட்டும் அனு அம்மா தனித்துவமானவரே.



தன் இறுதி நாட்களில் கூட, மலர் மருத்துவமனையில், செவிலியருடன் கலகலப்பாய், நாட்களை கழித்திருக்கிறார். இறுதியாக தன் மகளிடம், "தைர்யமாக இரு. Be Positive" என சொல்லி இருக்கிறார். அழியாத மன உறுதியும், எதையும் எதிர்கொள்ளும் தைர்யமுமே அவரை அவர் வாழ்வை முன்னெடுத்து சென்றுள்ளன. அவரது மறைவுக்கு பின், அவரது கண்கள், இருவர்க்கு வெளிச்சத்தை தந்த வண்ணம் இருக்கின்றன.  போய் வாருங்கள் அம்மா. உங்கள் பயணம் தனித்துவமானதே!
.
.

Sunday, May 16, 2010

பால்யத்தின் கோடை நாட்கள் [ ஐம்பதாவது பதிவு ]

பால்ய நதியில் புரண்டு வந்தபின், சிதறும் நீர்த்துளிகள், அவ்வளவு எளிதில் உதிர்ந்து, உலர்ந்து போவதில்லை. வளர்ந்த பின், கோடை நாட்கள் அவ்வளவாக சுவாரஸ்யம் கொள்ளவில்லை; ஏன், வருடங்கள் புரள்வது கூட ஆச்சர்யம் கொள்ளவைக்கின்றது. பால்யத்தில் ஒவ்வொரு கோடையும், மனதுக்கு நெருக்கமாய் நிகழ்வுகளை தந்திருக்கின்றது. அந்த வருட வசந்தத்தின் துவக்கமாய், மரம் முழுதும் துளிர்விடும் இளம் துளிர்களை போல் பசுமையானவை. மழை துளிகளுக்காய் காத்திருக்கும் சிப்பியை போல் கோடையை எண்ணி குதூகலித்த நாட்கள் அவை.

பால்யத்தில் ஒவ்வொரு கோடையும் ஒரு பெரிய கொண்டாட்டம். இனி இரண்டு மாதங்களுக்கு பாடப்புத்தகம், பரீட்சை தேவை இல்லை என மனம் உற்சாகம் கொள்ளும்; இறுதி பரீட்சை எழுதும் தருணத்தில் இருந்தே, மனதில் வரும் நாட்களின் நிகழ்வுகள் ஊர்வலம் போக துவங்கும். இறுதி நாளில், எதிர்படும் நண்பனை, எதிரியை, யாவரையும் மையில் வகையாய் குளிப்பாட்டி, தலை முதல் கால் வரை ஹோலி கொண்டாடி, நமக்கே நம்மை அடையாளம் தெரியாதபடி வீடு வந்து சேர்வோம். விடுமுறை துவங்கி, சில நாட்களில் தாத்தா ஊர்களுக்கு பயணமாவோம்; அன்று துவங்கும் பேருந்து பயணம் ஒரு வசீகர பக்கம். கடந்து போகும் ஊர்கள், புதிய மனிதர்கள் என புதிய உலகம் கண்முன் விரியும்.

உறவினர் இல்லத்தில், காலையில் மட்டும், மனம் காலண்டர் தாள்களை புரட்டி இன்னும் எத்தனை நாள் விடுமுறை மீதம் உள்ளதென கணக்கிட்டபடி இருக்கும். வாழ்வின் சுவாரஸ்ய பக்கங்களில் பால்யமே அலாதியானது. விடுமுறை முதல் நாளில் இருந்து, கொய்யா, மா மரங்கள் எங்களை போன்ற வாண்டுகளால் குத்தகைக்கு எடுத்து கொள்ளப்படும். அணில்கள் கூட எங்களின் அனுமதியின் பேரில் காயை கொண்டு செல்லும். நண்பகல் பொழுதில், நுங்கு மரங்கள் எங்கள் தாகங்களை தணிக்க பயன்படும். வாரத்தில் இரு நாட்கள் பலா பழங்கள் சுவை கூட்டும். கிணற்று தோனியும், தண்ணீர் தொட்டிகளும் மீன் குஞ்சுகளாய் நம்மை மாற்ற பிரயத்தனப்படும். கிணற்று மேடுகளிடம் தான் காலம் தோறும் எத்தனை எத்தனை கதைகள் கைவசம்?  அன்று பாட்டிகளின் வற்புறுத்தலின் பேரில் தவறாமல் உண்டு வந்த விருந்துகள் இன்றும் தித்திகின்றன.

பெரிய பாட்டியின் வீட்டில் விருந்துண்ண போகாத நாட்களில் அவர்கள் முற்றிலும் கோபித்து கொண்டதுண்டு. அவர்களின் அன்பின் வெளிப்பாடே அந்த கோபம் என இன்று புலப்படுகின்றது. ஆண்டு தோறும் சந்திக்கும் நட்பு வட்டம், முதிய உறவினர்கள், அவர்களின் சுவாரஸ்ய அளவளாவல் மகிழ்ச்சி தரும். அன்றைய விளையாட்டு முடிவில், இன்னும் இந்த நாள் தொடராதா என ஏக்கம் கொண்டதுண்டு. விளையாடி, கை வலிக்கிறது, கால் வலிக்கிறது என அழுத நாட்களை, பாட்டி சொன்ன வார்த்தை வாழ்க்கைகான பாடம்.. "சுமையாய் இருந்தால் நானும் கொஞ்ச நேரம் சுமக்கலாம்.. இதில் நீ மட்டுமே பொறுத்து வலியை தாங்கி கொள்." என்பார். 

கோடையில் வந்த அம்மை நோயும், பாட்டியின் கைகளை பிடித்தபடி கடந்த நடந்துபோன அந்த நாட்களும், பாட்டியின் மறைவிற்கு பின்னான பல வருடங்களுக்கு பின்பும் நெஞ்சில் நிழலாடுகின்றன. வைகாசி முதலில் மழை ஆரம்பிக்கும். விடுமுறை முடிந்ததென ஊருக்கு புறப்பட்டு வந்த நாட்களில் மனம் இன்னொரு விடுமுறைக்காய் தவம் செய்ய துவங்கும். ஊருக்கு வந்திறங்கினால், மழை தன கரங்களால், நிறைய மாறுதலை தந்து ஊரையே உருமாற்றம் தந்திருக்கும். தண்ணீர் மேவிய மண் பரப்பு, வெள்ளம் துடைத்துவிட்டு போன வரப்புகள், குட்டை குட்டையாய் தேங்கி நிற்கும் மழைநீர் என பரவசம் தருவதாய் ஊர் மாறி இருக்கும். குளுமை கால் விரல்களை தொட, ஈர மண்ணில் தடம்பதிக்கும் காளைகளை ரசிக்கலாம்.

தண்ணீர் பாயும் ஈர நிலம் தோறும் நாம் செய்யும் களிமண் பொம்மைகள், நம்மை பார்த்து, என்ன விளையாட வரமாட்டாயா? என இன்னமும் அழைத்தபடி இருக்கின்றன. அன்று செய்த குட்டி சட்டியும், குறு அகப்பையும் அடுத்த மழை நாள் வரையில் அப்படியே கரையாமல் இருந்திருக்கும். மழை நாட்களில் எங்கிருந்தோ கொண்டு வந்த ரோஜா பதியங்களும், முருங்கை கொப்பும், ஒவ்வொரு நாளும் துளிர் விட்டுள்ளதா? என மனம் நோட்டம் விட்டபடி இருக்கும். தூர்ந்த பானைகளில் இட்ட செம்மண்ணும், அதை அலங்கரிக்கும் துளசியும் இன்னும் அழகே! எங்கிருந்தோ வந்து சேர்ந்த வாடா மல்லியும், துலுக்க மல்லியும் காலி இடத்தை அழகுபடுத்தும். மறக்காது என்றும் தொழும் கருப்பராயன், என்ன வந்தாயா என தலை திருப்பி புன்முறுவல் பூக்கும்..

கோடையின் இன்னொரு சுவாரஷ்யம் கதை இரவுகள். சிந்துபாத் கதைகள், பாரத கதைகள், ஷேக்ஸ்பியர் தொகுப்புகள்[ குட்டையை அவ்வப்பொழுது கிளப்பும் பக் கதாபாத்திரம் நிஜமாகவேஅருமை ] என கதை கேட்டல் சுவாரஷ்யமானவை. அருகில் அமைந்த நூலகமும் நம்மை மகிழ்ச்சிபடுத்தும். இன்றும் கண்கள் அம்புலிமாமா, கோகுலத்தை தேடுகின்றன. வேதாளத்துடம் முருங்கை மரத்தில் இருந்து இறங்கும் விக்கிரமாதித்தன் போல், நாமும் புதிருக்காய் தவமிருப்போம். எதிர்படும் பூதங்கள், இரவிலும் பயம் கூட்டும். சீதா பாட்டியும், அப்புசாமியும், ரச குண்டும், இன்னும் ஞாபக நதியில் உள்ளனர்.  சிறுவர்க்கான ராமாயணம், மகாபாரதம் இன்னும் நாட்களை அர்த்தபடுத்தும். அன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பான ராமானந்த சாகரின் ராமாயணமும், சோப்ராவின் மகாபாரதமும் நினைவுக்கு வருகின்றன. மகாபாரதத்தை விட, அதில் வரும் கதை யுத்தம், வாள் சண்டை, பேப்பர் வாயிலாக அன்று ஒளிபரப்பாகும் தொடர் பற்றிய விளக்கம் இன்னும் காலை நேரத்தை பரபரப்பாக்கும்.

அதன் பின் வந்த நாட்களில்,  பள்ளிக்கான புதிய நோட்டு புத்தகங்கள், புதிய பள்ளி சீருடைகள், புத்தம் புது காலணிகள் என நாட்கள் மாறி போகும். பழைய மை பேனாக்கள் சுத்தம் செய்து, புதிதாய்  கைகளுக்கு வந்துவிடும். சென்ற வருடத்து ஆசிரியர்கள், மாணவர்கள் விடை பெற்று, மனம் புதிய ஆசிரியர்களை எதிர்பார்க்க துவங்கிடும். புதிதாய் விடுதிக்கு வரும் மாணவர்கள் கண்ணீரோடு பெற்றோருக்கு விடை தருவர். இன்று எண்ணும் பொழுதும், அந்த கடந்து போன நாட்கள் தித்திகின்றன. இன்று,  பள்ளி துவங்கும் நாளில், எதிர்படும் சிறுவர்கள் அந்த நாட்களை நினைவுக்கு கொணர்கின்றனர். கடந்துபோன அந்த கனா காலங்களுக்கு நன்றி. வாழ்க்கை பயணம் இனிதே தொடர்கிறது.
.
.

Sunday, April 25, 2010

திருவண்ணாமலை திருத்தலம் - ஒரு இனிய பயணம்



திருவண்ணாமலை திருத்தலத்தை கேள்விப்பட்ட நாட்களில், என்றாவது ஒரு நாள் சென்று, இறையை  தரிசித்து வர வேண்டும்  எனும் ஆவல் இருந்தது.. நண்பர், இதோ நான் திருவண்ணாமலை செல்கிறேன்.. வருகிறீர்களா? என அழைத்தார்.. உடனே புறப்பட்டு விட்டேன்.. ஆரூரில் பிறந்தால் முக்தி.. பேருரை தரிசித்தால் முக்தி.. அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என கேள்விப்பட்டு இருந்தேன். திரிபுரம்  எரித்த சிவன் ஜோதி ரூபமாய் நின்ற தலம்.. பஞ்ச பூத தலங்களுள் முக்கியமான ஒன்றாகும்.. ஒட்டுமொத்த மலையையே சிவபெருமானாய் பூஜிக்கப்படும் சிறப்பு பெற்ற தலம் திருவண்ணாமலை..

கல்லூரி நாட்களில் எங்கள் கல்லூரி தமிழ் பேராசிரியை மூலம் அண்ணாமலையை பற்றி அதிகம் கேட்டறிந்து இருக்கிறோம். இங்கு உறையும் இறைவன் அண்ணாமலையார்.  அருணாச்சலம் சிவன் என்றும் துதிக்க பெறுகிறார்.  இங்கு உள்ள இறைவி, உண்ணாமுலை அம்மை. இறைவிக்கு இன்னொரு பெயர், அபித குஜலாம்பாள். ல. சா. ராமாமிர்தம் அவர்களின் ஒரு நாவல் தலைப்பு, "அபிதா".. ஜோதி ரூபமாய் நிற்கும் இந்த மலை ஒரு சித்தர் பூமி. காலம் தோறும் சித்தர்களை, மெய் ஞானியரை தன்னை நோக்கி ஈர்த்த படி உள்ள அரிய தலம் இது. அருணகிரி நாதர்,  மகான் சேஷாத்திரி  சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் என எத்தனையோ ஞானியர் உலவிய தலம்..


" ஆதி நடமாடு மலை அன்றிருவர் தேடும் மலை
ஜோதிமதி ஆதரவும் சூழும் மலை 
நீதி தழைக்கும் மலை  ஞான போதனரை
வா வென்று அழைக்கும்  மலை அண்ணாமலை"




இங்கு ஒவ்வொரு பௌர்ணமி நாளும் அதி முக்கியத்துவம் பெறுகிறது. பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறந்ததாய் நம்ப படுகிறது. காயும் நிலவொளி மலையில் பட்டு நம் உடலை தொடுகிறது. அந்த மலை காற்றும், நிலவின் கிரகண கதிரும் நம் உடலையும் மனதையும் ஒரு சேர புத்துணர்வு ஊட்ட வல்லவையே.

யாவரும் நன்கறிந்த விழா திருகார்த்திகை தீப திருவிழா. மலையில் தீபம் தோன்றிய பின் மக்கள் அதை கண்டு வணங்கி பின் தத்தம், வீடுகளில் விளக்கேற்ற
துவங்குவர். சற்று நேரத்தில் ஒட்டுமொத்த திருவண்ணாமலை நகரமும் ஜோதி ரூபமாய் மாறி இருக்கும். படிப்படியாய் ஊர், விளக்குகளால், அலங்கரிக்கப்படுவது ஒரு அற்புதமான காட்சியாகும்.  இங்கு அதிகம் மன வருத்தம் கொள்ள செய்த விஷயம், நிறைய பேர் கை ஏந்துகின்றனர்.


முதலில், ஒவ்வொரு லிங்கமாய் வணங்கி கிரிவலம் வந்த பின் கோயிலை அடைந்தோம். நாங்கள் வந்த பாதையில் கண்ட அடி அண்ணாமலை கோயில் பெரிதாய் ஆச்சர்யப்படுத்தியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலை அடைந்த பின், ராஜ கோபுரத்தை கண்டோம். ராஜ கோபுரத்தில் இருந்து கண்ணை அகற்ற   முடியவில்லை. நான் வாழ்வில் முதல் முறையாக இவ்வளவு நீண்ட நெடிய  கோயிலை தரிசிக்கிறேன்.  


மனித முயற்சியின் அளப்பரிய வடிவம் கண்முன் நின்றது.   ஆயிரமாயிரம் கல்லுளிகள் மேற்கொண்ட இடையறாத பணி, ஒரு அற்புத ஆலயத்தை வடிவமைத்து தந்திருக்கிறது. அந்த கண்ணுக்கு புலப்படாத எத்தனையோ   சிற்பிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! நாட்கள், வருடங்களாய், தலை முறை தாண்டியும், பணி செய்திருக்க வேண்டும். தேவதச்சன் விஸ்வகர்மா செய்த எதையும் கண்டதில்லை.  ஆனால் மனித முயற்சியின் மாபெரும் வடிவமாய் நின்றது, அந்த கோயில்.





நான்கு கோபுரங்கள்.. இடப்புறம் அலங்கரிக்கும் குளங்கள் என கோவிலுக்கே உரித்தான அழகு அங்கு இருந்தது . முதலில் முருக பெருமானையும், பின் ஜோதி வடிவாய் உள்ள அண்ணாமலை இறைவனையும்  , இறைவி அபித குஜலாம்பாளையும், தரிசித்தோம். கோவில் சிற்பங்களை தொட்டு பார்த்த பொழுது இனம்புரியாத சிலிர்ப்பு உள்ளுக்குள் ஓடியது.. இறைவனை கண்ட பொழுதும் அதே ஆனந்தமும், அமைதியும் நெஞ்சில் பொங்கியது. இங்கு வந்த திருச்சுழி வெங்கட்ரமணன், "தந்தையே உன் கட்டளைப்படி இதோ வந்துவிட்டேன்", என இறைவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்த இடம். பின்னர் மெய் ஞானியாய் மலர்ந்ததும்,  ரமண மகரிஷியாய் மிளிர்ந்ததும் இவை யாவற்றுக்கும் துவக்க புள்ளி இந்த இடம். காலம் தோறும் மனிதர்களை தன்  பக்கம் ஈர்க்கும் இறைவன்.


ஆயிரம் கால் மண்டபம், ரமணர் தங்கி நிஷ்டையில் ஆழ்ந்திருந்த பாதாள லிங்க அறை, இவற்ற்றை கண்டோம். அந்த அறையின் முகப்பில், ரமணரின் படமும், அவரை பற்றிய குறிப்பும் உள்ளது. உட்புறம், அவரது புகைப்படங்களும், தொடர்புடைய நிகழ்வுகளும்  கருத்தோவியமாக உள்ளது.

மாலை பொழுதில் ரமண ஆஷ்ரமம் காண சென்றோம். ரமணரை பற்றி அறிந்த நாட்களில் இருந்து, இந்த ஆவல் இருந்து வந்துள்ளது. Timeless in Time: Sri Ramana Maharshi. By A.R. Natarajan புத்தகம் மிக அருமையான விவரிப்பை தந்து அந்த ஆவலை பெருக செய்திருந்தது. ரமணரை பற்றிய மிக முக்கிய படைப்பு அது. சிறு வயதில் டி. டி. தமிழ் தொலைக்காட்சியில் ரமணரின் வாழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட அரிய படைப்பு இன்றும் இமையோரம் மினுங்குகிறது. 


ரமண ஆசிரமம் மலையின் அடிவாரத்தில், நிசப்தத்துடன், குடிகொண்டு உள்ளது. விலங்குகள்பால் பேரன்பு உடையவர் ரமணர். அந்த தலம் நிறைய மயில்களை காண முடிந்தது. முன்புறம் கோயில், அதை ஒட்டிய தியான அறை, பின்புறம் உணவு கூடம், ரமண ஆசிரம புத்தக கடை, ரமணர் நிர்விஹல்ப்ப  சமாதி அடைந்த அறை என காண கிடைகின்றன. அங்கு உள்ள முக்கிய கோயில் ரமணர் மற்றும் அவரது தாயாரின் சமாதி ஆகும். அந்த தளத்தில் ஒரு பீடத்தில் ரமணரின் சிலை செதுக்கப்பட்டு உட்கார்ந்த  வடிவில் வரும் பக்தர்களுக்கு தன்  கருணை பார்வையை பொழிந்தபடி உள்ளார்.   பக்தர்கள் அந்த பீடத்தை வலம் வந்து தியானத்தில்  அமர்கின்றனர். நிறைய வெளிநாட்டவரை  காண முடிந்தது.  அவரின் நிழலாய் இருந்த பக்தர்கள், சமாதி அருகில் உள்ளது. அவர் ஆசையாய் பராமரித்த விலங்குகள், பறவைகள் சமாதி சுற்றி உள்ளது;

அதன் பின் மாலையில், நண்பரும் நானும் கந்த ஆஷ்ரமம் Skandasramam பார்க்க புறப்பட்டோம். ரமண ஆசிரமத்தை ஒட்டியே மலை பாதை மேலே செல்கிறது. மலையில் தவழ்ந்த மாலை இளங்காற்று உவப்பை தந்தது.. ஒரு சில மனிதர்களை மட்டும் வழியில் கண்டோம். மாலையில் ச்கந்தாஷ்ரமம், பூட்டப்பட்டு இருந்தது. மலையில் மேலே வந்த பின், ஒரு பாறையின் முகப்பில், ஒரு வெளி நாட்டினர் தியானத்தில் மூழ்கி  இருந்தார்.  அவருக்கு நேரே கீழ் பகுதியில் மேற்கு கோபுரமும் , கிழக்கு கோபுரமும் நேர் கோட்டில் காட்சி தந்தன.




ச்கந்தாஷ்ராமத்துக்கு கீழே இறங்கி நடந்தால், விருபாக்ஷா குகை உள்ளது. இந்த குகையில் ரமண மகரிஷி பதினாறு ஆண்டுகள் வாழ்ந்து உளார் . இவற்றை கண்ட பின் நாங்கள் கீழே இறங்கி வர துவங்கினோம்..   அந்த தருணத்தில் திருவண்ணாமலை எங்கும் விளக்குகளால் ஜொலித்தது. நகரமே ஒரு பூரணத்துடன்  ஜொலித்தது. கோவில் ஒரு சதுர வடிவில் நான்கு கோபுரமுடன் ஒரு தீபெட்டியை போல் தோன்றியது. நகரத்தின் எதோ ஒரு  கோவிலில், "அருணாசலனே ஈசனே! அன்பே சிவநாத நாயனே! புவனங்கள் ஆளும் அருணாசலனே!" எனும் எஸ். பி. பி. குரல் தேவ கானமாய் ஒலித்தது. ஒரு கோவில் நகரம், ஒரு மாலை நேரம், அருமையான மாலை, தேனினும் இனிய இசை என அந்த இடத்தை, அந்த நேரத்தை அற்புதமாக்கியது. இறைக்கு நன்றி.  


முக்தியை என்னும் பொழுது இந்த பாடல் நினைவுக்கு வரும்..திருமந்திர பாடல்..
நாம் செய்ய வேண்டியது இது தான். இறைவனுக்கு நிவேதனமாய், ஒரு பச்சிலை, முடியவில்லை எனில் பசுவுக்கோர் முடிந்த உணவு, உண்ணும் கைப்பிடியில் யாரோ ஒருவருக்கு ஒரு கைப்பிடி உணவு, இன்னொரு மனிதருக்கு இன்னுரை, இவை போதுமாம், முக்திக்கு. 


"யாவர்க்குமாம் இறைவற்கோர் பச்சிலை 
யாவர்க்குமாம் பசுவுக்கோர் வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி 
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே! "
எளிய விஷயம் தானே.  கடைப்பிடித்து பார்ப்போமே!

"அருணாச்சல சிவ அருணாச்சல சிவ
அருணாச்சல சிவ அருணாச்சலா!
அருணாச்சல சிவ அருணாச்சல சிவ
அருணாச்சல சிவ அருணாச்சலா!"
.
.
.

.
.
.



.(விருபாக்ஷ குகை )






.

Saturday, February 27, 2010

சுஜாதா நினைவுகள்

சுஜாதா அவர்களின் நினைவு நாள் இன்று.. அவர் மறைந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என நினைக்கும் பொழுது மலைப்பாய் இருக்கிறது.. அவரது ஆளுமை, அவர் இயங்கி வந்த நான்கு உலகுகள்[ பத்திரிகை, சினிமா, கணிப்பொறி, எலக்ட்ரனிக்ஸ் ] அவரது பன்முக புலமையை சொல்லி செல்லும்.. புது படைப்பாளியை அறிமுகம் செய்வதாகட்டும், ஆண்டு தோறும், விருதுகள் வழங்குவதில் ஆகட்டும், அவரது இயக்கம் மிக அதிகமாக கவனிப்புக்கு உள்ளானது..

அவர் மறைந்த பின், வந்த பதிவுகள், அவரின் பயண எல்லையை, எத்தனை மனிதர்களின் நேசிப்புக்கு உள்ளானவர் என்பதை தெளிவு படுத்தியது.. தொடர்ந்து விகடன் வாசிக்க ஆரம்பித்த பின் அவரது கற்றதும் பெற்றதும் தொடரை விரும்பி வாசிக்க ஆரம்பித்தேன். விகடனை வாங்கிய பின், மனம் இரண்டு பகுதிகளை தேடும்... ஒன்று கற்றதும் பெற்றதும்.. மற்றொன்று ஹாய் மதன்! பகுதி.. இன்று வரை பின்னது தொடர்கிறது.. இரண்டு வருடங்களுக்கு முன், தற்செயலாக கற்றதும் பெற்றதும் தொடர் நின்றது.. சரி சில நாட்கள் விட்டு பின், தொடர்வார் என எதிபார்த்தேன்..

முன்னரும் இப்படி நிகழ்ந்து உள்ளது.. பின் அவரே அந்த பகுதியில், அதற்கான காரணத்தை விவரிப்பார்.. இடையே ஒரு முறை, கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு, அதன் பின் சரியாகி வந்து நகைசுவையோடு[ விஷ்ணு பரமாத்மாவின் காட்சி ] தனக்கு நிகழ்ந்ததை எழுதினார்..

ஆனால், பிப்ரவரி இறுதியில், தொலைகாட்சியில், ஓடிய குறுஞ்செய்தி அதிர்ச்சியை கொண்டு வந்தது.. அருகே இருந்த நண்பர் சுஜாதா போய்விட்டார்... இனி சங்கர் யாரை கொண்டு ரோபோ செய்ய போகிறார் என வினா எழுப்பினார்.. அவரது எழுத்து நடை எள்ளல் தொனியோடு, அட நாமும் எழுதலாமே என ஊக்கம் தந்தது..


அவர் தொட்டு செல்லும் கவிதைகள், புத்தகங்கள், சினிமா.. எழுத்தாளர் அதிக கவனத்துடன் பிறரால் நோக்கப்பட்டது..

அவரது மறைவுக்கு பின் அவரின் ஆத்ம தேசிகன், மூலம் அவரை பற்றி அதிகம் அறிய முடிந்தது.. குமுதத்தில் வந்த அவரது வாழ்க்கை பதிவுகள் ஒரு அறிய தொகுப்பாய் இருந்தது.. அவரது வாழ்வோடு அற்புதமாய் தொடர் பயணித்தது..

அவரது ஸ்ரீரங்கத்து நினைவுகள், அரங்கன் பேரில் கொண்ட ஈடிணை அற்ற அன்பு, அவரின் செயின்ட் ஜோசெப் நினைவுகள், அவர் மேற்கொண்ட பயணங்கள் இவையாவும் அற்புதங்கள்.. அவரின் எழுத்து நடை சம காலத்தில், நிறைய பேரை எழுத்துக்கு எடுத்து வந்துள்ளது.. அவரின் அறிவியல் விளக்கங்கள், ஏன்.. எதற்கு தொடர்கள் அற்புதமாய் வந்தன..


தொலைகாட்சியில் வந்த ஜீனோம்.. அவரின் அற்புத கற்பனை உலகம்.. வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உவப்பானவை அவரின் படைப்பு உலகு.. அவரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பு இன்னும் ஞாபகம் உள்ளது.. அவர் மணிரத்னத்துடனும், ஷங்கருடனும் பணியாற்றியது தமிழ் சினிமா செய்த புண்ணியம்.. அவரின் வசனங்களின் தீவிர ரசிகன் நான்.. வணிக நோக்கம் இன்றி அவரை இன்னும் அதிகமாய் உபயோகித்து இருந்திருக்கலாமோ என இன்றும் என்ன தோன்றுகிறது.. கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் வரும் மாதவன் எதோ சுஜாதாவை போல் அவரின் நேர் குரல் போல் ஒத்து இருந்தார்..

கல்லூரி நாட்களில் அவரின் கற்றதும் பெற்றதும் தொடரின் இரண்டு பாகங்கள்
என்னை போல் பிறராலும் நேசிக்க பட்டது.. அவரது எழுத்துக்களுக்கு எதிப்பு வந்த நாட்களில், அவரின் வருத்தத்தை தெரிவிப்பார்..

சுஜாதா ஒரு  பேட்டியில்..
1 ) நீங்கள் ஏன் நிறைய சரித்திர கதைகள் எழுதுவதில்லை?
நான் சரித்திரத்தில் ரொம்ப வீக்.. எஸ். எஸ். எல். சி யில் என் மார் நாற்பது..
2 ) நீங்கள் எப்பொழுது எழுதுவதை நிறுத்துவீர்கள்?
 நடுராத்திரி சரியாய் பனிரெண்டரைக்கு..


தன எழுபதாவது பிறந்த நாளுக்கு வந்த அனைத்து வாழ்த்துக்களை அன்புடன்  நன்றி சொன்னவர் .. அந்த தருணத்தில் தான் அவருக்கு எழுபதா என தோன்றியது.. அவரது எழுத்து எப்பொழுதும் போல் புத்திலமையோடு நொப்பும் நுரையுமாய் பெருகும் காட்டு ஆற்று பெருவெள்ளமாய் வந்து கொண்டிருந்தது.. முதுமை அவரின் உடல் உணர்ந்திருக்க கூடும்.. மனம் அதை உணரவில்லை..

அவரின் பிரிவோம் சந்திப்போம் புதினத்தை திரைப்படமாய் ஆனந்த தாண்டவம் என எடுத்த பொழுது அகமகிழ்ந்தேன்.. அவர் தன படைப்பு சினிமாவை வரும் தருணங்களில், அதிகம் பயமடைந்து இருக்கிறார்.. ஒரு பிற மொழி படத்தில் அவர் கண்ட காட்சி.. [ எண்ண என் கதைப்படி இது எல்லாம் இல்லையே என்று பரிதாபமாய் கேட்ட அவர்.. ] அவரின் சிறுகதை அற்புதமான நடை, அவரின் கணிப்பொறி கட்டுரைகள் ஒரு வரப்பிரசாதம். அவரின் தேஜஸ்வினி கதாபாத்திரத்தை இன்னமும் சமூகத்தில் தேடி கொண்டுள்ளேன்..


ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொடரில் வந்த குண்டு ரமணி, இன்னும் மனதை எதோ செய்தபடி உள்ளது.. அவர் உயிர் பிரிந்த தருணங்களில் அவரின் பிரிய தேசிகன், அவருக்கு பிடித்த பிரபந்தங்களை படித்தார் என கேள்வி பட்டேன்.. அந்த அரங்கனின் திருவடிகளையே அவர் தொட்டு இருப்பார் என நம்புகிறேன்.. அவரின் எழுத்துக்கள் எப்பொழுதும் போல் அற்புத ஜீவிததொடு வாழும்..
.
.

Sunday, February 14, 2010

உப பாண்டவம்

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின், உப பாண்டவம் புதினம் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. விஜயா பதிப்பகம் சென்று வந்த நாட்களில், என்றாவது ஒரு நாள் இந்த புத்தகம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டானது. பாரதத்தை கேட்ட நாட்களில், மனது அதிக உற்சாகம் கொள்கின்றது.. இந்த கதைகளின் சுவாரஸ்யம் வேறு கதைகளில் இல்லை.. பாரதம் கேட்ட நாட்களில், அஸ்தினாபுரம், இந்திரபிரஸ்தம் , துவாரகை, மதுரா, பிருந்தாவனம், கோகுலம், இவற்றை என்றாவது ஒருநாள் காண வேண்டும் எனும் ஆவல் எழுந்தது.. எஸ் ராமகிருஷ்ணன் தன் தேசாந்திரி வாழ்வில், மகாபாரதத்துகாகவே பல இடங்களை சுற்றி வந்திருக்கிறார்.. அந்த வகையில் அவரின் கை பிடித்து நடப்பது போல் ஒரு பிரமை கதையெங்கும்..

இது நாள் வரையில், நாங்கள் அறிந்த பாரதம் பாண்டவர் ஐவரை பற்றியே அதிகம் பேசி இருந்தது. அதற்கு அப்பால், பாண்டவர்களின் புதல்வர்கள் அபிமன்யு, கடோத்கஜன், அரவான் இவர்களை அறிந்து இருந்தோம். ஆனால், பாஞ்சாலியின் புதல்வர்களை அவ்வளவாக தெரியாது. இந்த புதின தலைப்பே உப பாண்டவம்.. பாண்டவர் ஐவருக்கும், பாஞ்சாலிக்கும் பிறந்தவர்கள்..

இந்த புதினம், தொடர்ச்சியான கதையால் பின்னப்படாமல், சம்பவங்களால், விவரிக்கப்பட்டு உள்ளது.. சிறுவயது முதல், கதையில் அடுத்து என்ன ? என்ற கேள்வியோடு படித்து பழகி இருப்பதால், இது வேறொரு வடிவம் கொள்கிறது.. உப பாண்டவம், மனிதர்களின் மன ஓட்டத்தை, அவர்களின் இதய அலைவரிசையை படம் பிடிக்கின்றது. மனிதனுக்கே உண்டான அத்துணை குணங்களையும் பத்திரங்கள் கொண்டுள்ளன. குழந்தைகள் பிறந்தவுடன், பிரிந்துவரும் பாஞ்சாலி - அவளின் என்ன ஓட்டம், ஒரு தாய்க்கே உரித்தான தவிப்புகள் இங்கே பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தைகளை பிறந்தவுடன், அவர்களை திஷ்ட யுத்தமனிடம் கொடுத்துவிடும் அவள், அவர்களின் தவள்தலை, அவர்களின் மழலையை, அவர்களின் தளிர் நடை, அவர்களின் இளம்பிராயம் இவற்றை கண்டதில்லை.. உப பாண்டவர்கள் யாரும் தங்களின் தந்தையை கொண்டு இல்லை. அதற்கு அளிக்கப்படும் பதில் , அவர்கள் மனத்தால் வளர்கிறார்கள்.. உடலால் அல்ல.. அப்படி மனத்தால் வளரும்பொழுது இன்னும் வலிமை உள்ளவர்களாய் இருப்பர் என்பதே.

குந்தியின் எண்ண ஓட்டங்கள் இதில் அதிகம் பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளன. மாத்ரியின் மரணம், அதன் பின் மாத்ரி மேல் குந்தி கொண்ட கோபம் விவரிக்கப்பட்டு உள்ளது.. சல்லியன், பாண்டவர் அணியில் தலைமை ஏற்க அனுமதிக்கப்படவில்லை.. அந்த பொறுப்புக்கு குந்தி, திஷ்ட யுத்தமனை கொண்டு வருகிறாள். நகுல, சகாதேவர்கள், திஷ்ட யுத்தமனை விட, சல்லியனே, ஆக பெரிய வில்லாளி என சொல்லி வருகின்றனர். இறுதி நாட்களை, எண்ணி கொண்டிருக்கும் பீஷ்மரிடம் ஒவ்வொருவரும் வந்து சந்திக்கின்றனர். அந்த பகுதி சரியாக செதுக்கப்பட்டு உள்ளது. கர்ணனிடம் பீஷ்மர், கர்ணா மனிதன், பிறப்பால், அறியப்படுவதில்லை. அவனது செயல்களால் அறியப்படுகிறான் என்கிறார்

விதுரனின் உலகம் ஆச்சர்யத்தோடு விரிகின்றது. இறுதி கணம் வரை, பேசியபடியே இருந்த சத்ய விரதரும், எங்கே தன்னை மீறி பேச்சு வெளிப்பட்டு விடுமோ என கானகத்தில் அலைந்து திரிந்த நாட்களில், வாயில் கூலாங்கட்களை அடக்கி கொண்ட விதுரனும் ஆச்சர்ய துருவங்கள். பல நேரங்களில், அஸ்தினாபுரம், கங்கா புத்திரரின் தேசமோ என சந்தேகம் வருகிறது. ஆனால், அவர் தனக்கும், தன்னை சுற்றி நடக்கும் எதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாய் நடந்து செல்கிறார். குதிரைகளின் தாகம் தீர்க்க அமைந்த குளக்கரை - அஸ்திர குளக்கரை, மறைந்த பின்பும், சில நாட்களில் .. நதியில் இருந்து எழுந்து வரும, இறந்த அனைத்து மனிதர்களின் காட்சியும், எதோ ஒரு புது விவரிப்பை தந்தவண்ணம் உள்ளன.

சஞ்சயன், தனிமையில் உழலும் காந்தாரி, திருதராஷ்டிரன், அவர்களின் இறுதி நாட்கள், என ஒரு புதிய அக உலகம் அவர்களுடையது. கிருஷ்ணனின் புதல்வன் பிரத்யூம்ணனை அதிகம் கேட்டு உள்ளோம்.. ஆனால் சாம்பவனை கேள்விப்பட்டதில்லை. கிருஷ்ணனை அவன் கண்டதும், அதன் பின் கிருஷ்ணனின் சாபம், நோய் பீடித்த சாம்பவன் என இது புதிய விவரிப்பு.. அவனது உலகம், ஒவ்வொரு மனிதனின் மனசாட்சி போல் அரற்றியபடி உள்ளது..

துரோணரை முன் மாதிரியாய் வைத்து, வித்தை கற்ற ஏகலைவன், தன வித்தையை காண்பிக்கும் காலத்திற்கு ஏங்குகிறான். ஒரு நாள் அஸ்தினாபுர இளவரசர்கள், கானகம் வருகின்றனர். அந்த நிலையில் தன்  தேர்ச்சியை நிரூபிக்க, வழியே வந்த நாயின் வாயை, அஸ்திரம் கொண்டு பூட்டுகிறான்.. நாயில் இருப்பே, அதன் குலைப்பு தான். அவனது அந்த நிகழ்வுக்கு உடனே பலன் கிடைக்கிறது. அவன் கட்டை விரல் பரிபோகின்றது.. அம்பாவை குறிப்பிடும்பொழுது, அவமானத்தின் வலிகள் உடல் முழுதும், முறிந்த அஸ்திரம் போல் என்றென்றும் உள்ளதை சொல்கிறார். எவ்வளவு நிஜம்..

துரோணரின் மகன் அஸ்வத்தாமன்.. போரின் இறுதியில், அவனுக்கு வாய்த்த வரமாய், அவன் யுக யுகமாய், சாவு வராமல் எங்கும் சுற்றி அலைவதாய் சொல்லப்பட்டு உள்ளது.. மனிதனுக்கு வாழ்வு எவ்வளவு நிஜமாய் இருக்கிறதோ அப்படியே சாவும்.. மரணமிலாத வாழ்வை போல் ஒரு தண்டனை உலகில் இல்லை போலும்.. எஸ். ராம கிருஷ்ணனின் படைப்பு ஒரு அற்புதமான அனுபவத்தை தந்தது..அற்புதமான படைப்பு உலகுக்கு இட்டு சென்றது.. தங்களுக்கு நன்றியும், நல்வாழ்த்துக்களும்.

வெகு நாட்களுக்கு முன், என் வீட்டில், பாரதத்தை பற்றி பேச்சு எழுந்தது. எல்லா துயரங்களுக்கு பின்பும் கூட, நாம், அரிச்சந்திரனை ஒரு நாளும் பொய் பேசிடாத மனிதனாய் கொண்டாடுகிறோம்.. ஆனால், தருமன், அந்த தகுதியை, பதவி ஆசையால், இழந்து விட்டான் என சொல்லி சென்றனர். துரோணரிடம் பொய் பேசாதவரை, யுதிஷ்டிரனின் தேர் கூட மண்ணை தொடாமல், அந்தரத்தில் பயணித்ததாம். அவன் முதல் பொய் சொன்ன பின், தேர் தரையை தொட்டதாம். இப்படி சொல்கிற யுதிஷ்டிரன், பூமியை விட்டு விலகும் தருணத்தினில்,  தான் விட்ட இடத்தை பிடித்து கொள்கிறான். தன்னை தொடர்ந்து வந்த சொறி நாயை, ஆற்று வெள்ளம்,  தன தலைக்கு மேல் வந்த பொழுதும், தன் உயிர் போன பின் , அந்த நாயின் உயிர் போகட்டும் என தன் தலைக்கு மேல் உயர்த்தி பிடிக்கிறான்.. அந்த நிலையில், நீர் தாழ்ந்து இயல்புக்கு வருகிறான்.. அவனது அந்த செயலே, தர்மர் என்ற பெயருக்கான செயலாய் சொல்லப்பட்டு வருகிறது. தன்னை நம்பி வந்தவரை நட்டாற்றில் விடகூடாத குணம் மனிதனுக்கு வேண்டும்.. அப்படி  ஒரு குணம் இல்லை என்றால், நம் உயிர் போகும் தருணத்தில் கூட அந்த செயல் மிகுந்த வருத்தத்தை, வலியை தரும்.
.
.

Tuesday, January 26, 2010

அம்மாவின் தோழி


சில ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வர எங்கள் பேருந்துக்காக, புளிய மர நிழலில் காத்திருந்தோம். அந்த நிலையில், சம்பூ.. நல்ல இருக்கிறாயா? எனும் குரல் கேட்டது.. நானும், அம்மாவும் ஒரு சேர திரும்பி பார்த்தோம். அந்த சமயம் ஐம்பதை கடந்த ஒரு பெண்மணி, அம்மாவின் கைகளை பிடித்து குதூகலமாய் விசாரிக்க ஆரம்பித்தார். சற்றே மாநிரத்தொடு, ஐம்பது வயதுக்கான உடல் மாற்றங்களோடு, உற்சாகமாய் பேச ஆரம்பித்தார். அவரின் கூந்தலை கவனித்தேன்.. அன்று அணிந்த மல்லி - கனகாம்பர கதம்பம் அவர்களை அலங்கரித்தது. அவர்களின் பேச்சின் இடையே, நான் அருகில் இருப்பதை கவனித்த அந்த அம்மா.. யார் உன்னோட பையனா? என்ன பண்றான்? படிக்கிறானா? என விசாரிக்க ஆரம்பித்தார்.

என் அம்மாவும், முகம் முழுக்க சிரிப்போடு, என்னையும், தம்பியையும், குடும்ப உறுப்பினர்களையும் எடுத்து சொல்லி கொண்டு இருந்தார். அவர்களின் உரையாடலை கண்ட நான் அவர்கள் பால்ய தோழிகளாய் இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தேன். அவ்வளவு அன்யோன்யம்.. அவ்வளவு சந்தோசமும் திருப்தியும் அவர்களது பேச்சில்.. வெகு நாட்கள் தொடர்பு விட்டு போய் நிகழ்ந்த சந்திப்பாய் இருக்க வேண்டும்.. நான் அவர்கள் பேச்சில், அந்த அம்மா.. நொடிக்கொருமுறை, சம்பூ.. என விளித்தார்.. எனக்கு தெரிந்து யாரும், என் அம்மாவை இப்படி அழைத்ததில்லை. ஏன், என் தந்தை கூட மணமான நாட்களில், இப்படி அழைத்திருப்பார் என எனக்கு தோன்றவில்லை. அப்பொழுது தான், அந்த பேருக்கு அவ்வளவு, மகத்துவம் இருக்கும் என்பது புரிந்தது.. பெயர் அவ்வளவு அழகாகி, கூப்பிடும் மனிதரும், பெயருக்கு சொந்தக்காரரும், அவ்வளவு சந்தோசம் கொள்வார்கள் என... ஒரு பெயர் அழைக்கப்படுவதில், மனிதரின் மன நிலை பொறுத்து, குயிலின் குரலாகவோ மயிலின் குரலாகவோ இருக்கிறது.

மணமாகி வந்தபின், பெண்களின் உலகம் முற்றிலும் மாறி போகிறது. அவர்களுக்கு என ஒரு குடும்பம், குழந்தைகள் மாமனார், மாமியார் என பிரிதொரு வட்டத்துக்குள் தம்மை முழுமையாக்கி கொள்கிறார்கள்.. அவர்களுக்கு பிறந்தகம் செல்வதும், தம் நட்பு வட்டத்தை காண்பதும் அபூர்வமாய் போகிறது. ஆண்களின் உலகம் அப்படி இல்லை. பல நேரங்களில், நண்பர்களை காண பேருந்து பிடித்து செல்வதும், அவர் இங்கு வந்து காண்பதுவும் நடக்கிறது. பெண்களின் உலகில், தம் பையன், பெண்களின் திருமணம், உறவு வட்ட திருமணம் என சில நிகழ்வுகளில், மட்டுமே நட்பு வட்டத்தை, உறவு வட்டத்தை காண முடிகிறது. அவர்கள் பகிர்ந்து கொள்ளவும் ஆயிரம் விஷயம் தம் மன குடுவையில் உள்ளது.. உண்மையில், நம் ஒட்டு மொத்த வாழ்வில், நமக்கு உவப்பான விஷயம், நமது பெயரே.. அந்த பெயரும், ஒரு சிலரின் அழைப்பில் இத்தனை அழகாய், இவ்வளவு பொருளாய், நாம் எதிபார்க்காத அளவில் இருக் கிறது.. பல நேரங்களில், நாம் வருத்தம் கொள்கிறோம் .. என்ன பெயர் இது என.. ஆனால் இந்த நிமிடங்கள், இது போன்ற தருணங்கள், அதை பொய் ஆக்குகின்றன.

பல தருணங்களில், வீட்டில் இருப்பவர்கள், பெயர் சொல்லி அழைப்பதில்லை.. சின்னம்மினி, பெரியம்மினி, பெரிய தம்பி, சின்ன தம்பி, ஊர் பெயர் சொல்லி அந்த அம்மணி என பெயர்கள் இன்னொரு வடிவம் எடுக்கின்றன.. சிரார்களாய் இருக்கும் தருணத்தில், சின்ன பாப்பா, பெரிய பாப்பா.. சின்ன பாப்பனா .. பெரிய பாப்பனா என பெயர்கள்.. இப்படி பெயர்கள் பல வடிவங்களில்..


சமீபத்தில், ஒரு சிறு செய்தி படித்தேன்.. சாண்டோ சின்னப்பா தேவரிடம் ஒரு பையன் வேலை கேட்டு வந்தான். அவனிடம் அவர் வைத்த ஒரு கோரிக்கை, அவன் பெயரை மாற்றி கொள்ள வேண்டும் என்பதே.. அன்று முதல் அவன் பெயர் முருகன் என மாறி போனது.. தேவர் வாய்க்கு வாய், முருகா முருகா என கூப்பிட்டு அகமகிழ்ந்தார்.. தேவர் பேசும் பொழுதும் மனிதர்களை நீங்கள் என சொல்வதற்கு பதிலாய், முருகா என சொல்லவும் பழகி இருந்திருக்கிறார்.. முருகன் என்ற பெயர் அவருக்கு அவ்வளவு தித்திப்பை தந்து இருக்கிறது. இன்றும் மருதமலைக்கு, கால்நடையாக, பயணித்து மலை ஏறினால், காணும் எல்லா கல் மண்டபங்களிலும், இளைப்பாறும் கற்கள்,  தேவரின் பெயர் தாங்கி நிற்கின்றன.  முருக பக்தர்கள் இளைப்பாறி செல்ல உதவுகின்றன.. தேவரும் அந்த நிலை மண்டப தூண்களில் ஏதாவது ஒன்றில் குடிகொண்டு யாவற்றையும் அர்த்தத்தோடு பார்த்து கொண்டு இருக்க கூடும்..
 
சில நாட்களுக்கு முன், அந்த பெண்மணி, எங்கள் இல்லம் வந்து, தன பெண்ணின் திருமணத்துக்கு அழைத்தார்.. அந்த பெண்மணி தன மகள் அமரிக்காவில் போய் வேலை செய்ய பிரியப்பட்டதாகவும், அப்படியே அங்கு போய் இரண்டு வருடங்களாக வேலை செய்வதாகவும் சொன்னார்.. அப்படி சொன்னவரின் முகத்தில், பெரு வெளிச்சம்.. மாப்பிள்ளையும், அமெரிக்காவில், வேலை  செய்வதை சொன்னார்.. அவர் சென்ற பின்னர், என் தாய், அவர்களின் வாழ்வை, ஒரு முப்பது, முப்பத்து ஐந்து வருடத்திற்கு பின்னான நாட்களை விவரித்து இருந்தார்..


அந்த நாட்களில், பெரிய படிப்புகள் ஏதும் இல்லை.. பச்சை பயறு , தட்டை பயறு - பறித்தல் , பருத்தி எடுத்தல், தென்னை மரத்துக்கு தண்ணீர் சுமந்து ஊற்றுதல் என அவர்களின் நாட்கள் இருந்து இருக்கின்றன..

கிராமத்துக்கு வரும் பாத்திரக்காரனிடம் பேரம் பேசி வாங்கும் எவர் சில்வர் பாத்திரங்கள், அவர்களுக்கே உரித்தான பழக்கம்.. வருடத்துக்கு ஒருமுறை வரும், மாகாளி அம்மன் திருவிழாவும், அவர்கள் விளையாடி களித்த தூரிகளும், அன்று சுவைத்த குச்சி ஐசும், திருவிழாவுக்கு வரும் வளையல் காரனிடம், வகைக்கு ஒன்றாய் கை நிறைய வளையல் இட்டு நிரப்பியதும், சைக்கிளில் துணி கொண்டு வருபவனிடம் பேரம் பேசி வாங்கிய திருவிழா துணி மணிகளும், அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது.. அதுவே அவர்களின் தித்திப்பு நிமிடங்கள். இரவுகளில், அவர்கள் கற்ற கோலாட்டமும், கும்மியும், என்றென்றும் ஞாபகம் கொள்ள வைக்கின்றன.. அவர்கள் விட்டு வந்த கோலாட்ட குச்சிகள், அற்புத வேலைப்பாடோடும், அதன் நிறம் மாறாமல், அவர்களின் நினைவை போல் அப்படியே இருக்கின்றன. நாட்கள் பல கடந்தும், யாரும் அதை பெற்று கொள்ளவோ, எடுத்து பழகவோ இல்லை.. ஒரு வேலை, அது வீடு இடிக்கும் பொழுது, தண்ணீர் அடுப்புக்கு விறகாய் போகலாம்..
 
அதன் பின், வீட்டில், பார்த்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு, வாழ்வில், வெகுதூரம் வந்து விட்டார்கள்.. அவர்களுக்கு, நன்றாக சிவப்பேறிய மருதாணி கைகள், உவகை கொள்ள, மற்றவர்களிடம், காண்பிக்க போதுமானதாய் இருந்தது.. திருமணமாகி வந்து பார்த்த படங்கள், குழந்தையின் அழுகையோடு பார்த்த படங்கள் அவர்கள் நினைவுகள் எங்கும்..  ஆனால் அவர்களின், பெண்கள் அப்படி இல்லை.. அவர்கள் நிச்சயம் பெருமை பட்டு கொள்ளலாம்.. சிலர் அமெரிக்காவிலும், சிலர் சிங்கபூரிலும் நிறைய ஆங்கிலம் பேசி வாழ்கிறார்கள். தங்களையும் வந்து தங்கிவிட்டு செல்லுமாறு பிள்ளைகள் அழைத்தபடி இருப்பதை சொல்லி பூரிக்கின்றனர். வாழ்க்கை மாற்றம் எப்படி இருக்கிறது? நிச்சயம் அழகான, ஆச்சர்யம் கொண்ட மாற்றமே..
.
.

சுவாமி ரங்கநாதானந்தர் - தொடர் பதிவு II


எனது முந்தய பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு..
http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post_24.html

சுவாமி ரங்கநாதானந்தரின் இயற்பெயர் சங்கரன். சங்கரன்  இந்த பூமிக்கு வந்த நாள், டிசம்பர் 15 , 1908 . அந்த தினம், தூய அன்னை சாரதா தேவியாரின் பிறந்த தினம்(அதே டிசம்பர் 15 ) .. கேரள மாநிலம் திருச்சூருக்கு அருகே உள்ள, திருக்குர் கிராமம் இவரது பிறந்த இடம். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்திருந்தாலும், இவரது பார்வை மிக மிக விசாலமாய் இருந்தது. தான் உலகம் முழுமைக்குமான மனிதன் எனும் எண்ணம் நாளாக நாளாக வளர்ந்து இருந்தது. சிறு வயது முதல் நீச்சல் அவருக்கு விருப்பம் உடையதாய் இருந்தது. எங்கும் தண்ணீர் நிறைந்து இருப்பது கேரள மாநிலம்.. அவருக்கு நீர் விளையாட்டில் விருப்பம் ஏற்பட்டதில் ஆச்சர்யம் இல்லை. ஒரு மீன் குஞ்சை போல் அவருக்கு நீச்சல் எளிமையாய் இருந்தது..

அவரது குடும்பம் விவசாயத்தை அடிப்படையாய்  கொண்டு இருந்தது. அவரது சிறு வயதில் நடந்த இரு சம்பவங்களை பின்னாளில் உவகையோடு நினைவு கூர்கிறார். அவர் பத்து வயதாய் இருந்த தருணத்தில், அவரது தாய் நோய்வாய்பட்டு இருந்தார். அவரது கிராமம் ஒரு நதியின் கரையில் இருந்தது. அந்த நிலையில், அவரது தாய்க்கு மருத்துவம் அளிக்க வேண்டிய நிலை. அது சரியான, அடைமழை காலம். நதி முழுக்க வெள்ள காடாக இருந்தது. ஒரு ஆயுர்வேத மருத்துவர் நதி கரைக்கு அப்பால் வசித்து வந்தார். அவர்களின் வீட்டு சமையல்காரர், அந்த வீட்டு பையன்களில் ஒருவர் அவருடன் வந்தால், தன்னால் நதியை கடந்து மருந்து கொண்டு வர முடியும் என நம்பினார். அந்த நிலையில், இளம் சங்கரன் தான் அவருடன் சென்று வர முன் வருகிறான்.. அவரின் முடிவிற்கான காரணத்தை அவரே சொல்கிறார். ஒன்று அன்னையிடம் கொண்ட ஈடிணை அற்ற அன்பு. மற்றொன்று சாகசத்தின் மேல் அவர் கொண்ட அலாதி பிரியம். அன்று துடுப்பு போடுவது, அவருக்கு ஒரு இனிய விளையாட்டாக இருந்திருக்க கூடும்..

வாழ்வு முழுவதும், அவர் எளிய பாதைகளை தேர்ந்தெடுத்ததில்லை. கடினமான பாதைகள் அவரை மிக நன்றாக உற்சாகப்படுத்தி உள்ளது. உவகை கொள்ள செய்துள்ளது.... அவர் குறிப்பிடும் மற்றொரு சம்பவம்.. இளம் சங்கரனுக்கு 12 அல்லது 13 வயது இருக்கும்.. அவர் அன்று வீட்டில் இருந்தார். அப்பொழுது அவர் வீட்டுக்கு அருகே ஒரு மனிதரை தகாத வார்த்தைகளால் நிந்திக்கிறார்.. அதை கவனித்து விட்ட அவரது தாய், உடனே அவரை இடைமறித்து, மகனே! உனது நாக்கு கலைமகளின் உறைவிடம்.. அதன் வாயிலாக, தகாத வார்த்தைகளை உச்சரித்து, களங்கப்படுத்தி விடாதே என்கிறார். அன்று அவரது தாய் சொன்ன விஷயம், நேராக அவரது மூளைக்கும், இதயத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது . பின்னர் நீண்ட எண்பது ஆண்டு கால வாழ்வில், அவரது வாழ்வில் பேரர்த்தம் உள்ள ஒரு விஷயமாய் மாறி போனது. ஒவ்வொரு முறையும், அது அவரது எண்ணத்தில் நிழலாடி, அவரை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி உள்ளது. தாயின் வார்த்தைகளுக்கு அவ்வளவு மகத்துவம்..

அவரது வாழ்வின் பதினைந்தாவது வயதில் மிகப்பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. அப்பொழுது அவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த தருணத்தில், அவரது பள்ளி சகா திருச்சூர் நகர நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்திருந்தார். அந்த புத்தகத்தை இவரிடம் காண்பித்த நண்பர், இந்த புத்தகத்தை படிக்க விருப்பமா? என கேட்டார். ஆங்கிலத்தில் இருந்த அந்த புத்தகம்.. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின், "அமுத மொழிகள்" தொகுப்பு - The gospels of sri ramakrishna .. நிறைய மனிதர்களின் வாழ்வை மாற்றிய அந்த புத்தகம், அவரது வாழ்வையும் மாற்றியது. புத்தகத்தை வாங்கிய அவர், முதல் நூறு பக்கங்களை படிக்கும் வரை புத்தகத்தை அவர் கீழே வைக்கவில்லை. ஸ்ரீ ராமகிரிஷ்ணரின் வார்த்தைகள் என்னை முழுமையாக ஆட்கொண்டன என்கிறார். வாழ்வை பற்றிய எண்ணங்களை விசாலமாக்கியத்தில் அந்த புத்தகம் மேற்கொண்ட பங்கு மிக மிக அதிகம்..

அதன் தொடர்ச்சியாக அவருக்கு சுவாமி விவேகானந்தரின் the complete works புத்தகத்தின், மூன்று, நான்கு தொகுப்புகளை படித்து முடித்தார்... அடுத்து அவருக்கு கிடைத்தது, சகோதரி நிவேதிதையின், "என் பார்வையில் ஆசிரியர்.. "[The master as i saw him ]. இந்த சமயத்தில், அவர் கற்ற பாடல் சுவாமி அபேதானந்தர், அன்னையை பற்றி எழுதிய மகத்துவமான வரிகள்.. [ பிரக்ரிதீம் பரமாம் அபயம் வர தாம்..] எனும் துதி பாடல்... தம் ஒட்டுமொத்த வாழ்க்கைகான விதை இங்கே அவருக்கு விழுகிறது. இறை மேல் கொண்ட பக்தி, மனிதர் மேலான பேரன்பாய் மாறி போகிறது.

அமுத மொழிகளின் தொகுப்பை படித்த பின், இளம் சங்கரனுக்கு, 'ம' - என்கிற மகேந்திர நாத் குப்தரின் மேல் அளப்பரிய  மரியாதை தோன்றுகிறது. மகேந்திர நாத் குப்தர் - ஸ்ரீ ராம கிருஷ்ணரின் இல்லற சீடர்களில் ஒருவர். அவர் குருதேவர்- ராம கிருஷ்ணரை சந்தித்த தருணங்களில், அங்கு நடந்த உரையாடல்களை, அங்கு நடந்த நிகழ்வுகளை, கேட்டு குறிப்பெடுத்து கொண்டவர். அவையே அமுத மொழிகள் தொகுப்பாய் பின்னாளில் மலர்ந்தன.. சங்கரன் பின்னாளில், பிரம்மச்சர்ய தீட்சை பெற, 1929 ஆம் ஆண்டில், பேலூர் மேடம் வந்த நாட்களில், அவர் 'ம' வை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த சமயத்தில், 'ம' வை வணங்கி   தன அன்பை காணிக்கையாக்கினார். அடுத்த சில நாட்களில், சில சாதுக்களோடு, ம - வை அவரது வீட்டில் சந்தித்தனர். அவர்கள் அங்கு இருந்த மூன்று மணி நேரத்தில், 'ம ' ஸ்ரீ ராம கிருஷ்ணரை பற்றி மட்டும் பேசிக்கொண்டு இருந்தார் என சுவாமி ரங்கநாதானந்தர் பின்னாளில் நினைவு கூர்கிறார் .
.
.
.
சுவாமி ரங்கநாதனந்தரின் சில சொற்பொழிவுகள் இங்கே..


மற்றொன்று உபநிடதத்தின் கருத்துக்கள் சொற்பொழிவுக்கு முன் சென்னையில் 1994


அன்னையை பற்றி

Sunday, January 24, 2010

சுவாமி ரங்கநாதானந்தர் - ஒப்புயர்வு அற்ற துறவி


சில மனிதர்களின் சந்திப்பு வாழ்வில் அபூர்வமாய் அமையும். சில மனிதர்களின் சந்திப்பு வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். நல்ல மனிதர்களின் தொடர் பழக்கம், நம் ஒட்டுமொத்த வாழ்வை புரட்டி போடுகின்றது. சில மனிதர்களை நாம் வாழ்வில் சந்திக்க முடியவில்லையே என மனம் வருத்தம் கொள்கிறது. அந்த வருத்தத்தை போக்க நம்மிடம் இருப்பது அவர்கள் விட்டு சென்ற அவர்களின் புத்தகம், அனுபவங்கள், கருத்துக்கள்.. . ஒரு மனிதரை பற்றிய புத்தகங்கள், அவரோடு நாம் வாழ்ந்த அனுபவத்தை நமக்கு தரவல்லவை என்கிறார் பரமன் பச்சைமுத்து.

அப்படி நான் புத்தகங்கள் மூலம் அறிந்த மனிதர் சுவாமி ரங்கநாதானந்தர். சுவாமி ரங்கநாதானந்தர் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் பதின்மூன்றாவது தலைவராய் இருந்தவர். மிகப்பெரிய மாறுதல்களை தன்னகத்தே கொண்டிருந்த சென்ற நூற்றாண்டோடு, இவரது வாழ்வும் பின்னி பிணைந்திருந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை.


வெறும் பள்ளி படிப்போடு இராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தவர், சுவாமி ரங்கநாதானந்தர். மடத்தில் இணைந்தவுடன், அவர் மேற்கொண்ட பணி, சமையலில் உதவுவதும், தோட்ட வேலைகளை கவனிப்பதுவும்.. அப்படி எளிமையாய் துவங்கிய அவரது பணி, உலகம் முழுவதும் கிளை பிரித்து பரந்திருக்கும், இயக்கத்தின் தலைவரானதும், ஒப்புயர்வு அற்ற பேச்சாளராய், உலகம் முழுவதும், வேதாந்தத்தை, சுவாமி விவேகானந்தரின், ஸ்ரீ ராம கிருஷ்ணரின் எண்ணங்களை பரப்பிய வானம்பாடியாய் என அவரின் பயணம், அவரது விஸ்வரூபம், ஆச்சரியமும், உவகையும் கொண்டது.

அவர் மிக எளிய மனிதர். யாரும் அவரை அணுகும் வண்ணம் இருந்தது அவரின் அரிய பலம். அவரது நீண்ட பயணத்தில், எல்லா காரியங்களையும் சாத்தியமாக்கக கூடியவராய் இருந்தார். ஒரு துறவியின் வாழ்வில், உலகை நன்கு உணர்ந்தவராய் இருந்தார். நேரு , இந்திரா காந்தி துவங்கி, எல். கே அத்வானி, இன்றைய பிரதமர் மன்மோகன் வரை இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டவர்கள். இஸ்லாம் பற்றிய இவரது பேச்சை கேட்ட, ஜின்னா, ஒரு முகமதியன் எப்படி வாழ வேண்டும் என இன்று கற்று கொண்டேன் என்கிறார். சமூக பரப்பினில், இவரது பேச்சு, நிறைய இதயங்களை ஆற்று படுத்தி உள்ளது.       

ஹைதராபாத், கராச்சி, கல்கத்தா, பர்மா[ரங்கூன்] , தில்லி என இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம், தன் பணியில் தனி முத்திரை பதித்தவர். தில்லியில் ஞாயிறு அன்று நடக்கும் இவரது தொடர் சொற்பொழிவு மிக பிரபலம். மைசூர் மற்றும் பெங்களூரில், சிறை கைதிகளுக்கு வகுப்புகள் நடத்தி உள்ளார். ஸ்ரீ ராம கிருஷ்ணரின் பிறந்த நாள் விழா சிறையில் நடந்தது. அனைத்து கைதிகளும் சுவாமிஜியிடம் ஆசி பெற்றனர். ஹரி கதையுடன் அன்று நடந்த நிகழ்வை, நிறைய பேர் உள்ளன்போடு வரவேற்று மகிழ்ந்தனர்..

எனது அறை நண்பர், பேலூர் ராமகிருஷ்ண மடத்தில், சுவாமி ரங்கநாதானன்தரை சந்தித்ததையும், அவர் வரவேற்று உபசரித்ததையும், உவகையோடு இன்றும் நன்றியோடு நினைவு கூர்கிறார். தான் வாழ்ந்த நாட்களில், தன்னை பற்றி எந்த புத்தகத்தையும் அனுமதிக்காத உண்மை துறவி. அவர் ஏற்று கொண்ட துறவு நெறிக்கு ஏற்ப, வாழ்வு முழுதும் அப்பழுக்கு அற்று , சக மனிதர்கள், அடித்தட்டு மக்களின் வாழ்வுக்காக, அவர்களின் மறுமலர்ச்சிக்காக தொடந்து போராடியவர்.   

மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி ஒரு முறை இப்படி குறிப்பிட்டார். " நமது நாடு அதன் தொன்மை கலாச்சாரத்தாலும், தத்துவ சிறப்பாலும், உயரிய எண்ணங்களாலும், ஒப்புமை அற்றது. ஆனால், இவற்றை பற்றி பல தருணங்களில், வெளிநாட்டிலோ, ஏன், நம் மக்களிடையே கூட, வெளிச்சமிட்டு காட்டியதில்லை. இதில் இருவர் விதிவிலக்கானவர்கள். அவர்கள், சுவாமி விவேகானந்தரும், சுவாமி ரங்கநாதனந்தரும் ஆவர்."

தேசிய நல்லிணக்கத்துக்கான, இந்திரா காந்தி விருதை முதன் முதலில் பெற்றவர் சுவாமி ரங்கநாதானந்தர். எந்த விருதாக இருந்தாலும், தனக்கு, தன் பெயரில் அளிக்காமல், இராம கிருஷ்ண இயக்கத்துக்கு அளித்தால், ஏற்று கொள்வேன் என உறுதியாக நின்றவர். துறவிக்கு விருதுகள் தேவையில்லை என்பதும், நான் செய்த எல்லா செயல்களும், என் சகோதர துறவிகளோடு இணைந்தே நிறைவேற்றினேன் என்பது அவரின் எண்ணம். 

பதினெட்டு வயதில், இராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தவர் ஏறக்குறைய, எழுபத்தெட்டு ஆண்டுகள், இயக்கத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். தற்போதைய ராம கிருஷ்ண இயக்க தலைவர் சுவாமி ஆத்மஸ்தானந்தர் வார்த்தைகளில் சொன்னால், " நான் தவறாக குறிப்பிட்டால், என்னை மன்னியுங்கள்.. சுவாமி விவேகானந்தருக்கு பின், சுவாமி ரங்கநாதானந்த மகாராஜ் போல், உலகமெங்கும் ஆன்மீக கருத்துக்களை பரப்பியவர் வேறு யாரும் இல்லை " என்கிறார்.

    "நீ ஆன்மீக மலர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாயா ?
     நீ மற்றவரை நேசிக்கிறாயா? அனைவருடனும்
     ஒன்றிய நிலையை நீ உணர்கிறாயா? உன்னுள்
      அமைதியை உணர்ந்து, அதை உன்னை சுற்றிலும்,
     சுடர்விட செய்கிறாயா? அது தான்
     ஆன்மீக வளர்ச்சியாகும்.....
     அகமுகமாக தியானத்தாலும், புற முகமாக
     சேவை மனப்பான்மையுடன் செய்யும் பணியாலும்
     அது விழிப்படைகிறது."    - சுவாமி ரங்கநாதானந்தர்.
.
.
.சுவாமி ரங்கனதானந்தரின் சொற்பொழிவு..


மற்றொரு சொற்பொழிவு - நடைமுறை வேதாந்தம்

Wednesday, January 13, 2010

தேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்

 சுவாமி விவேகானந்தர் - பெயரை உச்சரிக்கும் தருணங்களிலேயே மனதில் ஒரு அபூர்வ ஆளுமையும், அவருக்கே உரித்தான தீட்சண்யமும், கம்பீர தோற்றமும் நிழலாடும். வலிமையே வாழ்வு முழுதும் போதித்தவர். கீழை தேசத்தின் மகிமையை உலகமெங்கும் எடுத்து சென்றவர், வேதாந்தத்தின் விளக்கம், ஒரு ஆன்ம ஒளி, இருண்ட தேசத்தின் வெளிச்ச விடிவெள்ளி என அவருக்கு நிறைய பக்கங்கள்.  அவரின் உருவத்திற்கும், அவரின் செயல்பாட்டுக்கும் அவர் என்றென்றும் இளைஞர். அவரின் பிறந்த நாளை இளைஞர் தினமாய் கொண்டாடுவது மிக மிக பொருத்தமானதே.

அவர் உருவாக்கிய உந்து சக்தி மிக மிக அரிதான செயல். நேதாஜி தன் வாழ்க்கை பயணத்தை சுவாமி விவேகானந்தரிடம் கற்று கொண்டவர். அவரின் பேச்சும் கருத்துமே நேதாஜிக்கு வாழ்வை, அதன் கட்டற்ற எழுச்சியை, தியாகத்தை விதைத்தது.


தன் இறுதி நாட்களில், போதும் நான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான பணியை முடித்து விட்டேன்... என சொல்ல முடிந்தது. ஒரு மனிதரின் கருத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழ முடியுமா? முடியும்.. புத்தர் நடை முறை உதாரணம்.. 
 
வாழ்வின் எல்லா வெற்றிகளையும், தன் குருதேவர் ஸ்ரீ ராம கிருஷ்ணரின், பாதத்திற்கே அர்பணிக்க முடிந்தது. அவரின் எல்லா செயல்களும், குருதேவரின் அனுமதியால் மட்டும் நடந்தவை. அப்படி ஒரு குருவும், அப்படி ஒரு சீடரும் அமைந்தது உலகம் செய்த பெரும் தவம்.  தனக்கு பின்னால், ஒரு மிகப்பெரும் குரு பரம்பரையை தோற்றுவித்து உலகுக்கு விட்டு சென்றது அவரின் எல்லா செயல்களுக்கும் சிகரம். 
 
தேசம் முழுதுமான அவரது பயணம் ஒரு தேசத்தின் சரியான நிலை எடுத்து சொன்னது. குமரி முனையில் அவர் செய்த தவம், ஒரு புத்தெழுச்சி மிக்க இந்தியாவை கொணர்ந்தது. 
 
ஒவ்வொரு இதயமும், வணக்கத்துக்கு உரியது என்பது அவர் கொண்ட அரிய நிலை.

விழிமின் எழுமின் கருதிய காரியம் கைகூடும் வரை ஓயாது உழைமின்.. இது எழுச்சி தீபம்...

அவரை தன் வாழ்வின் வழிகாட்டியாக எத்தனையோ மனிதர்கள் எண்ணி உள்ளனர். - என்றென்றும் பொய்க்காத  அடிவானத்து விடிவெள்ளி அவர்  . 

அது சுவாமி விவேகனந்தர் தன்  தாய் புவனேஸ்வரி அவர்களிடம் துறவுக்காய் அனுமதி கேட்டிருந்த காலம். ஒரு நாள் திடீரென நீ துறவு நெறிக்கு செல்லலாம் என அனுமதி தந்தார். சுவாமிஜி அவர்கட்கு ஆச்சர்யம். அதற்கான விளக்கத்தை அவரின் அம்மா தந்தார். ஒவ்வொரு நாளும் பழம் சாப்பிட, நறுக்க ஒரு கத்தியை அவரின் அம்மா எடுத்து வர சொல்வார். அன்று சுவாமிஜி கத்தியை தரும் பொழுது, கத்தியின் கூர் முனை அவரின் புறம் இருந்தது. அதை சுட்டி காட்டிய அவரின் அம்மா, உனது இதயம் எல்லா தியாகத்துக்கும் தயார் ஆகி விட்டது. இனி உன் முன் யார் வேண்டுமானாலும் பயம் இன்றி வந்து செல்லலாம் என சொன்னார்.
ஒவ்வொரு மனிதனும் இறைவனாக மாறலாம் என்பது அவர் கொடுத்த புது வெளிச்சம்.. அவர் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.. 
.