Sunday, December 18, 2011

படித்ததில் பிடித்தது..

நான் வாய் விட்டு சிரித்த சமீபத்திய நகைச்சுவைகள்.. இவை யாவும் விகடனில்(பொக்கிஷம் பகுதி) நான் கண்டவை.. எல்லாமே சிரிப்பு குண்டர்கள் தான்...
(அட அநியாயமே.. யாராருக்கு எல்லாம் கோபிக்கறது)


(அட! என்ன ஒரு அக்கறை.. )



(முன்னமே சொன்னனே ! எங்க சேர்மனே தனி தான் )


(அட இவரு வேறயா..)


ரெண்டும் உங்களுக்கு இல்லை.. ஆமா.. சொல்லிபுட்டேன்..

நான் ஆண்டு முழுவதும் வாசித்து சிலாகிப்பது - "ப்ரோசன் தாட்ஸ்"(Frozen Thoughts)  புத்தகத்தை..


டி. டி. ரங்கராஜன் அவர்களின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது . அந்த நிமிடங்கள், பவுன் நிமிடங்களே.. கடந்த நவம்பர் இதழில் இரண்டு பகுதிகள் என்னை கவர்ந்தன. அந்த பக்கங்களை படித்த பின், என் வாழ்வை பற்றியும் பயணிக்க தோன்ற வைத்தது . நல்ல எழுத்து நம் எண்ணங்களையும் மாற்றும் வல்லமை கொண்டதுதானே. ; என் முதல் விருப்பம்: எவர் சின்ஸ்(Ever Since) பகுதி . எதில் டி டி ஆர் தன் வாழ்வு நிகழ்ச்சிகள் மூலம் நிறைய சொல்லி செல்கிறார். அவருக்கு கிடைத்த முதல் பாராட்டை பற்றியது. ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய கைதட்டல் ஞாபகங்கள்.. தான் சாதாரண மாணவனை இருந்ததும், முதல் முதலாய் பள்ளி பிரின்சிபால் உடன் கை குலுக்க நேர்ந்ததையும், ஒரே இரவில் பள்ளியில் பிரபல்யம் அடைந்ததையும் சொல்கிறார். தன்னிடம் இருக்கும் தனி தன்மை வெளிப்பட்ட ஒற்றை தருணமே ஒவ்வொரு மனிதனுக்கும் இன்னொரு பிறவி. அன்றே புதிதாய் பிறக்கிறார்கள்..

My Dear Grandma


அதில் நான் கண்ட இன்னொரு பகுதி, பரமன் பச்சைமுத்து அவர்களின் என் பிரியமான பாட்டிக்கு என அவர் தன் பாட்டிக்கு எழுதும் கடிதம்.. பாட்டி மறைந்து பல வருடங்கள் கழித்து தன் பாட்டி செய்த எல்லா நல்லவற்றுக்கும் நன்றி சொல்கிறார். தான் ஆரோக்கியமாய் இருக்க பாட்டி எடுத்து கொண்ட முயற்சிகள், இன்றைய அறிவியல் உலகம் பல ஆராய்ச்சிகளுக்கு பின் அதையே புட்டு புட்டு வைக்கிறது. பெரியவர்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சிக்கு பின்பும் , ( அது என்னை குளியலாகட்டும், மார்கழியிலும் பச்சை தண்ணீர் நீராடல்,வேப்பிலையை கொடுத்து சாப்பிட வைத்தல்.. ) ஆயிரம் அர்த்தங்கள்..
.
.

Saturday, December 10, 2011

ஒரு திருக்கார்த்திகை நாள் - திருவண்ணாமலை



ஒவ்வொரு கார்த்திகை மாதத்தையும், மஹா தீப ஜோதியை கடக்கும் நாளிலும் திருவண்ணாமலை நினைவுக்கு வரும். அருணாச்சல ஈசனும், அபிதாம்பாளுக்கும் அடுத்தபடி ரமணர் நினைவில் நிழல் கொள்கிறார்.

அன்று திரு கார்த்திகை திருநாள். எப்போதும் போல், ஜே! ஜே! என கூட்டம் அண்ணாமலையில். வந்த கூட்டம், ரமண மகரிஷியை காணவும் முண்டியடிக்கிறது. ரமணர் கூட்டத்தால் அவதியுறுகிறார் என எண்ணிய அவரது வட்டம், அவருக்கும் பக்த கூட்டத்துக்கும் இடையே ஒரு தடுப்பை உருவாக்கியது. மேலும் அவரை யாரும் அண்டி விடாத படி, வந்தவர்களை விரட்டி கொண்டிருந்தனர். இதை கண்ட ரமணர் அதிகம் துணுக்குற்றார். அவர்களிடம் கோபித்து கொண்டார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இவை...

என்னை நோக்கி வரும் யாவரையும், அருணாச்சல சிவனாகவே பார்க்கிறேன். அவர்களை புறக்கணித்தால், அருணாச்சல ஈசனை புறக்கணித்தது போல் ஆகும். ஆகவே அவர்கள் என்னை வந்து காணட்டும் என கேட்டு கொண்டார்.

ஒரு முறை, ரமணரின் பக்தர் ஒருவர், தீராத வாழ்க்கை நெருக்கடியில், ரமணரை காண வந்தார். வந்தவரை ரமணர் தன்னுடன் இருக்க வைத்து கொண்டார். வந்தவருக்கோ, தவிப்புக்கு மேல் தவிப்பு. பகவானே! நான் அங்கே இல்லை என்றால் யாவும் கை மீறி போய்விடும் என இறைஞ்சினார். ரமணரோ, அமைதியாய் இரு என சொல்லி வந்தார். ஏறக்குறைய பதினைந்து நாளுக்கு பின் அந்த நண்பர் ஊருக்கு அரை மனதுடன் திரும்பினார். என்ன ஆச்சர்யம்?, ஊரில் நிலைமை சீரடைந்து இருந்தது.

ரமணரின் கரம் பற்றி நடந்தால், ஆயிரம் விஷயங்கள். ஆயிரம் ஆச்சர்யங்கள். ராஜு முருகனின் வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன. அடிவானத்தை நோக்கி புன்முறுவலோடு நடக்கும் ரமணரின் கண்களிலும் மெய்தேடல் போதை தட்டுப்படுகிறது.
.

Thursday, November 17, 2011

லா. ச. ராமாமிர்தம் அவர்களின், சிந்தா நதி




அமிர்தத்தை சுவைத்து பார்த்ததுண்டா நீங்கள்? லா. ச. ரா வின் சிந்தாநதி, தாக்ஷாயணி, த்வனி, பாற்கடல், அபிதா, காயத்ரி என அவர் எழுத்துக்களை படித்து பாருங்கள்; புரியும்!

தாக்ஷாயணி யில் அவள் அவனிடம் சொல்கிறாள்... "எப்படியும் நீங்கள் ஆச்சர்யமான நிமிடங்கள் படைத்தவர்!" - அது லா. ச.ரா-வுக்கும் பொருந்தும்.
நீ ஒரு காகிதத்தில், உன் எழுத்துத் திறமையின் முழுச் சக்திப் பிரயோகத்துடன் , "நெருப்பு" என்று எழுதினால், அந்த காகிதத்தில், பொசுங்கின வாடை வர வேண்டும் என்பார் லா. ச. ரா.
--- லா. ச. ரா. பற்றி நடிகர் சிவக்குமார்.

"நான் பழுத்திருந்த போது
பழம் கடிக்க வராமல்
உளுத்து விட்டதும்
புழு பொறுக்க
ஓடி வரும்
மனம் கொத்தி
நீ!"

-இதை நான் எழுதி இருபத்து ஐந்து வருடங்கள் கூட இருக்கலாம். கவிதைக்கு அபிதா என்ற தலைப்பு கொடுத்திருந்தேன். லா ச ரா- வின் தலைப்பு. இதழ்கள், பச்சைக் கனவு, ஜனனி என்றும், புத்ர, சிந்தா நதி, பாற்கடல் என்றும் பரந்து அலையடித்துக் கிடக்கின்ற லா.ச.ரா வின் இன்னொரு தெறி அபிதா. லா ச ராவின் ஞாபகத்துடன் அபிதாவை படிக்க வேண்டும் போல இருந்தது....

--- அகம் புறம் தொகுப்பினில் இருந்து, வண்ணதாசன்.


தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில், மிக முக்கியமானவர் லா. ச.ரா. நனவோடை உத்தியை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் அவர் தான்.

எப்போதும் இருக்கிற பழக்கம் போல், அன்றும் ஒரு புத்தகத்தை விரித்து, பேருந்து பயணத்தில் வாசித்தபடி பயணித்தேன். எனக்கு சற்று தூரத்தில் இருந்தவர் என்னை நோக்கி ஏதோ சொன்னார். எனக்கு எதுவும் விளங்கவில்லை. என் கையில் இருந்த புத்தகம், லா. ச. ரா வின் சிந்தா நதி. சக பயணி இறங்கும் போது என்னிடம் சொன்னார். எப்படி லா. ச. ரா. புத்தகத்தை படிக்கிறீர்கள்?. ஒன்றுமே புரியாதே!.. என்றார். அவருக்கு நானும் எனக்கு நல்லா புரியுதுங்க என சொல்லி பேருந்தில் இருந்து இறங்கினேன்.


சிந்தா நதி, லா. ச. ரா.வுக்கு சாகித்ய அகடமியை தேடி தந்த புத்தகம். அவரது நினைவலைகளின் தொகுப்பு. அவரது பாற்கடல், அவரின் இளமை நினைவுகளின் தொகுப்பு. மிகப்பெரியசக்தி உபாசகர் - லா. ச. ரா. அவரின் புத்தகம் எங்கும் அது அவ்வப்பொழுது கொப்பளிக்கிறது.

தன் எழுத்துக்களை, மற்றவர்கள் புரியவில்லை என சொல்வதை கூட, எள்ளல் தொனியோடு சொல்லி செல்கின்றார். தினமணி கதிரில் வார வாரம் வந்த தொடர் கட்டுரைகள் இவை. தன் பயணத்தில் நதி சந்திக்கிற படித்துறை, அதில் முங்கி குளிக்கிற மனிதர்கள் போல், வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சொல்லி செல்கிறார்.

தான் பங்கெடுத்த மணிக்கொடி எழுத்தாளர் கூட்டம், வாகினி ஸ்டூடியோவில் தட்டச்சு பணி செய்பவர்களாக வாழ்ந்த நாட்கள், தன் வங்கி உத்தியோக நிகழ்வுகள், தந்தையிடம் பொய் சொன்னது, அவரிடம் கற்ற பாடங்கள், ஆசையாய் வளர்த்த நாயின் மரணம், தான் சந்தித்த
பகவான் தாஸ் என அவரின் வாழ்க்கை பயணம் ஒரு நெகிழ்ச்சி பக்கம் ..தனது கதையை, எங்கிருந்து சுட்டாய் என ஒரு பத்திரிகை ஆசிரியர் அவ நம்பிக்கையோடு சொன்னதை கூட சொல்லி செல்கிறார்.


யுக மணம், இந்திரா, யாகம், கோவர்த்தன், FIDO - இவை நான் ரசித்தபக்கங்கள்(நினைவுகள்) ...

நான் விந்தியா
நான் மேரு
நான் வான்
நான் நித்தியன்....


நீ காலத்தை போக்க இங்கு வரவில்லை.
நீ காலத்தோடு போகவும் இங்கு வரவில்லை.
நீ காலத்தை நிறுத்த வந்திருக்கிறாய்.
ஒரு கணத்தில் ஒரு யுகம் பண்ண வந்திருக்கிறாய்
நீ நித்யன்...

Sunday, July 17, 2011

ஆரோக்கியமாக தான் இருக்கின்றனவா - குழந்தைகள் சேனல்கள்?






இன்றைய நாட்களில் குழந்தைகளை அவர்களின் நேரத்தை பெருமளவில் கபளீகரம் செய்பவை தொலைக்காட்சி பெட்டிகளே. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்ற இந்த நாட்களில், குழந்தைகளுக்கு வேறு போக்கிடமும் இல்லை. அதிலும் அவர்களை அதிகம் ஈர்ப்பவை குழந்தைகள் சேனல்களே. அந்த குழந்தைகள் சேனல்கள் எவ்வளவு தூரம் தரமாய் இருக்கின்றன? தரமான பொழுதுபோக்குகளை, விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகின்றனவா? அறிவு பூர்வமாய், சிந்தனையை தூண்டும் வகையில், அறிவை, பொது அறிவை, உலகை எவ்வளவு தூரம் அறிமுகபடுத்துகின்றன. மனித பண்புகளை, ஆளுமை வளர்ச்சியை எவ்வளவு தூரம் முன் எடுக்கின்றன? இதற்கான பதில் மிக மிக ஏமாற்றமாகவே உள்ளது.


நான் பார்த்தவரையில், இந்த சேனல்கள் இருந்தால் அவர்களுக்கு, வேறு எதுவும் தேவை இல்லை. பக்கத்தில் இடி விழுந்தால் கூட தலையை உயர்த்தி என்ன நடக்கிறது என பார்க்கும் மன நிலையில் அவர்கள் இல்லை. கதா மாந்தர்கள் சொல்வதற்கு சில நேரங்களில் சிரிப்பதோடு சரி. அதில் வரும் வசனங்கள் தான் என்னை மிகவும் வருந்த வைத்தது. அவர்களின் வயதுக்கு பொருந்தாத சம்பந்தம் இல்லாத வசனங்கள், சேனல்களில் வரும் தொடரில் இருந்தன. இந்த சேனல்கள் குழந்தைகளை போதை பொருளை பயன்படுத்தும் மனிதர்களை போல் அடிமை படுத்துகின்றனவோ என எண்ணினேன். Bag Piper பின்னால் போகும் குழந்தைகள் எனக்கு ஞாபகம் வருகிறார்கள்.



எனது நண்பர் இதற்காக இந்த சேனல்கள் தவிர்த்த பேக்கேஜை தேடிக்கொண்டு இருக்கிறார். அவரின் கைகளுக்கு ஒரு போதும் ரிமோட் வந்தது இல்லை. சிறுவர்கள் தூங்க போன பின் மட்டுமே அதற்கு ஓய்வு. அப்படி சேனல் இல்லாத தருணங்களையும் குழந்தைகளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது நிஜமாய் உள்ளது. இதை சம்பந்த பட்டவர்கள் கவனித்தார்களா? என்றாவது வரும் தொடர்களை அதன் தரத்தை ஆராய்ந்தது உண்டா? நிச்சயம் நாம் அடுத்த தலை முறைக்கு ஆரோக்கியமான பொழுது போக்கை அறிமுகப்படுத்த தவறி விட்டோம்...

Sunday, April 24, 2011

சச்சின் 38 - ஒரு தொடர் பயண நினைவுகள்



முதலில் சச்சினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. இளமையும், திறமையும் போட்டிபோடும் ஒரு விளையாட்டில் என்றென்றும் தன்னிகர் அற்ற சக்கரவர்த்தி. இந்திய மண் உற்பத்தி செய்த மிகச்சில விளையாட்டு வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கரும் முதன்மையானவர். ஹாக்கி வீரர் தியான் சந்த், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீரர்கள்  பயஸ், பூபதி , கிரிக்கெட்  வீரர் கபில் வரிசையில் சச்சினுக்கு முதன்மையான  இடம்  நிச்சயம்   உண்டு. தியான் சந்த் அடித்த மொத்த கோல்களுக்கு சரிவர கணக்குகள் இல்லை. ஆனால், சச்சின் கிரிக்கெட் மட்டையை தொட்ட தருணம், தொலை தொடர்பும் அது சார்ந்த  ஒளிபரப்புகளும், விஸ்வரூபம் எடுத்த தருணம். அவரது ஒவ்வொரு அசைவும் அப்படியே ஊடகத்தை அடைகின்றன..


சச்சின், தன் கிரிக்கெட் வாழ்வில், காயங்களால் நிறையவே அவதி பட்டு வந்திருக்கிறார். அப்படி அவர், காயங்கள் ஏதும் இல்லாமல் தொடர்ந்திருந்தால், இந்திய அணி  மிக மிக முன்னரே ஒரு பொன் தருணத்தை தொட்டிருக்கும். அவரது கிரிக்கெட் கிராப் வேறு எங்கோ இருந்திருக்கும். ஆனால் அவரது பார்வையில், யாவும் நல்லதற்கு தான் எனும் எண்ணமே மேலோங்கி உள்ளது.. இன்றைய பொழுதில் அவரது மட்டை முன் எப்போதும் இல்லாத படி, சொன்னது சொன்னபடி கேட்கிறது.. ரன்களை அள்ளி எடுக்கிறார் இந்த வயதிலும்.. எதோ நேற்று தான் தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடியது போல்...


டெண்டுல்கர் எதிர்வரும் ஒரு நாளில், கிரிக்கெட்டுக்கு  குட் பை சொன்னாலும், சச்சின் இல்லாத போட்டிகளை ஒரு சராசரி கிரிக்கெட் ரசிகனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இன்னமும் சச்சின் நிறைய விமர்சனங்களை சந்திக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரோஜர் பெடரர் பிரெஞ்ச்சு ஓபன் பட்டத்தை வென்ற பின், மனம் திறந்தவராய், இனி என்னை யாரும், "பிரன்ச்சு ஓபனை  வெல்ல முடியாதவர் " - என சுட்டி காட்ட  முடியாது என்றார். அது தான் இன்று சச்சினுக்கும், நடந்திருக்கிறது. இத்தனை நாட்களிலும், சச்சின் என்னதான் திறமை  கொண்டவராய்  யாவராலும் ஒப்பு கொள்ளப்பட்டு  இருந்தாலும், அவரால் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தர முடியவில்லை என்ற குற்ற்றச்சாட்டு இருந்தது.
அதை இந்த முறை தீர்த்து வைத்து தன ஒட்டு மொத்த பயணம்
அனைத்துக்கும் பெருமையை, மன நிறைவை தேடி கொண்டார்.


இந்தியாவில் தான் இந்த மாதிரி பார்க்க முடியும். ஒரு காலத்தில், சச்சின் ஆட்டம் இழந்தால் ஒட்டுமொத்த மைதானமே வெறிச்சோடி விடும். அப்படி ஒரு தருணமும், அந்த பொறுப்பை சுமந்தவராய் வலம் வந்த காலமும் இருந்தன. ஆனால், இன்று அணியின் பொறுப்பை சுமக்க நிறைய இளம் வீரர்கள், வந்து விட்டனர். இன்று தனக்கான பங்களிப்பை செய்தால் போதும் எனும் நிலைமைக்கு சச்சின் வந்து விட்டார். வானத்தை நோக்கி ஒவ்வொரு பந்தையும் ஆக்ரோஷமாய் அனுப்ப வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்த மனிதர், இருபது ஆண்டுகளில், நல்ல முதிர்ச்சியோடு, சரியான இடங்களுக்கு பந்தை   விரட்டும் வல்லமையோடு, குறைவான சக்தியோடு ரன்களை குவிக்கிறார். அதற்கு மேல், இன்று அணிக்கு முன் எடுத்து செல்ல ஒரு பீஷ்மன் இவர் வழியில் கிடைத்திருக்கிறார்.


ஒரு முறை விளையாட்டு விமர்சகர், "பீட்டர் ரோபக்" இப்படி குறிப்பிட்டு இருந்தார். அது நான்கு  ஆண்டுகளுக்கு முன், சச்சின் தடுமாறிய தருணம்.. "இது சச்சின் ஓய்வு பெற வேண்டிய வயது என..". சச்சினின் ஆஸ்திரேலிய  சுற்று பயணத்துக்கு பின், தன் வார்த்தைகளுக்கு வருந்தியவராய்.. "அவரை பதினைந்து வயதில் சந்தித்தேன். அன்று இருந்த அவரது ஆர்வமும், உழைப்பும் இன்றும் தொடர்கின்றன.. அவரால் இன்னும் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் " என்றார். "One can Inspire the billions  by the way he or she is living his/her life." என்பார்கள். இது சச்சினை பொறுத்தவரையில் உண்மை.

சென்ற ஆண்டில் அவரது திட்டமிடல் அருமையாய் இருந்தது. சென்ற ஆண்டு முழுவதும், டெஸ்ட் போட்டிகளில் முழுக்க தன் கருத்தை செலுத்தினார். 1998  - சச்சினை பொறுத்தவரையில், ஒரு நாள் போட்டியின் பொற்கால ஆண்டு. 2010  - சச்சினின் டெஸ்ட் போட்டிகளுக்கான பொன்  ஆண்டு.


கற்றலையும், பயிற்சியையும் தொடரும் இந்த  இளைஞன் நிகழ் காலத்தின் ஒளி பொருந்திய நட்சத்திரம்.. பயணம் தொடரட்டும்.. நல வாழ்த்துக்கள் சச்சின்.. கிரிக்கெட் மட்டையை தொடும் இன்றைய சிட்டுக்களுக்கும்  அவரே ஊக்கத்தின் ஊற்றுக்கண்..
.
.





Saturday, February 12, 2011

கிரிக்கெட் திருவிழா - ஒரு பார்வை


இதோ தொட்டுவிடும் தூரத்தில் கிரிக்கெட் திருவிழா. டீ கடை பெஞ்ச் முதல், வசந்த் அன் கோ ஷோ ரூம்[அட அங்க தானுங்க, பெரிய டீவில கிரிக்கெட் காட்டுறாங்க!  ] வரை கிரிக்கெட் விவாதங்கள் சூடு பிடிக்கும். ஜெயித்து விட்டாலும் சரி, தோற்று விட்டாலும் சரி, ஒரு மூச்சு அத்தனையும் பேசி விட்டால் தான் நம் மனசு ஆறும்..   இந்த பிள்ளையாண்டான் இப்படி விளையாடி இருக்கணும் என அங்கலாய்போம் ..  முடிந்தால் அவனுக்கு, கத்து குட்டி என எண்ணி ஆட்ட நுணுக்கங்களை கற்று தர முன் வருவோம்..


 டாஸ் வென்று பவுலிங் எடுத்து இந்த கேப்டன் கெடுத்தான்?! என பட்டியலை அடுக்கி தள்ளுவோம்... அட! அட! எவ்வளவு நல்ல கேட்ச்.. லட்டு மாதிரி புடிச்சிருக்கணும் அல்ல?( இந்த கிரிக்கெட்டரை,  ஒரு நடை திருப்பதிக்கு அனுப்பினால் என்ன ? அங்க தான் நாள் முழுக்க லட்டு பிடிக்கிராங்களே!  ).. இப்படி கோட்டை விட்டு, நெடுமரம் மாதிரி நிக்கிறான் பாரு? என டோஸ் விடுவோம்..  இந்த பாலை இப்படியா விசுறது.. நான் கூட சரியா வீசுவேன் என சொல்வோம்... ஒரு ரோஷம் இருக்குதா பார்? எதோ வந்தமா வீசி போனோமான்னு நிக்கிறான்.. என வசை பாடுவோம்..

இதை விட நம்மவர்க்கு பெரிய சந்தேகம் வரும். அது எப்படி அவன்( முக்கியமாய் ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்க பவுலர்.. ) வீசுனா மட்டும் தோள்பட்டைக்கு மேல பந்து எகுறி சீறுது? நாம வீசுனா, முழங்கால் வரை கூட எழும்ப மாட்டேங்குது என புலம்பி நம்மை நாமே கேட்டு கொள்வோம்.. அவர்களும்( இந்திய பவுலர் தானுங்க.. ) நாங்க என்ன வெச்சுகிட்டா வஞ்சனை பண்ணுறோம்.. எதோ எங்கனால முடிஞ்சது! இப்படி எங்களை கேட்ட நாங்க என்ன தான் பண்ண முடியும்?   நீங்க எப்பவும் போல "கமான் இந்தியா!", "சக்தே இந்தியா!" சொல்லணும்.. ஆமா!  அப்ப தான் நாங்களும் ஏதோ எங்களால முடிஞ்ச வரை விளம்பரமா நடிச்சு தேர்த்த முடியும் என எண்ணுவார்களோ என்னவோ? 

இந்த முறை, எப்போதும் இல்லாத வகையில்  "டெண்டுல்கருக்காக இந்த உலக கோப்பை" என மகி முதல் மற்றவர் வரை களத்தில் உள்ளனர்.. "தனி நபருக்காக இப்படி எல்லாம் தத்து பித்துன்னு உளறி வைக்க கூடாது..நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பது நினைவில் இருக்க வேண்டும் " என பெரியண்ணன், ஸ்டீவ் வா சொல்லி இருக்கிறார். அவர் சொன்னா, சரியா தான் இருக்கும்..  எப்படியோ, இந்த உலக கோப்பை முடிந்த உடன், மிக பெரிய பட்டாளம் ஓய்வை நோக்கி அடியெடுத்து வைக்கும்..

எனக்கான கிரிக்கெட் மீதான நட்பு, பிரியம், ஈடுபாடு, வெறி ஏறக்குறைய இருபது ஆண்டுகளாய் இருக்கிறது.. இப்போ முன்ன மாதிரி இல்லை( வெறி, வெல்ல கட்டி எல்லாம் தானுங்க.. ).. சூதாட்ட புகார் வந்த பின், தெருவோர கிரிக்கட் ரசிகன் கூட "அட காசு பார்த்துட்டனுகளோ என்னவோ? " என அவ நம்பிக்கை கொண்ட பின் நாம் சுதாகரிக்காமல் விட்டால் எப்படி..   என்னவோ போங்க! காங்கிரசில் தஞ்சம் அடைந்த  அசாரின் ஆட்டம், ஜடேஜாவின் சிக்சர்கள், குரோனியே விட்டு சென்ற கேப்டன் இலக்கணங்கள் நிச்சயம் ஆச்சரியமானவை.. 

என்னை கவர்ந்த உலக கோப்பை நட்சத்திரங்களில், மிக முக்கியமானவர் "மார்டின் குரோ". அவர்கள் நாட்டில் போட்டி நடந்ததை மூலதனமாய் கொண்டு புது உத்திகளை வெளிப்படுத்தி, நியுசிலாந்து அணியை அரை இறுதிவரை 1992 உலக கோப்பையில்  கொண்டு வந்தவர்.  அரை இறுதியில் பாகிஸ்தானுடன் தோற்று வெளியேறினாலும், அந்த உலக கோப்பையை     நியுசிலாந்து உலக கோப்பை என சத்தியமாக சொல்லலாம். அந்த உலக கோப்பையில் அதிக ரன்களை அள்ளிய "க்ரோ", ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு உதாரணம்.. "ஒரு குண்டூசியை எப்படி பயன்படுத்த வேண்டும்" என்பதை க்ரோவிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என அன்று புகழாரம் சூட்ட பட்டார். அந்த அளவு கேப்டன்ஷிப்பை பயன்படுத்தி இருந்தார். முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் "தீபக் படேலை"  வீச வைத்து எதிர் அணிக்கு தண்ணி காட்டினார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. "கிரேட் பாட்சை"  வைத்து, துவக்க ஓவர்களில் அடித்து ஆடி, புது உத்திகளை கொண்டு வந்தார்.

அந்த உலக கோப்பையில், இம்ரான் உலக கோப்பையை வென்றதும், அந்த பணத்தை தன் தாயின் நினைவாய், தான் அமைக்க இருக்கும் கேன்சர் மருத்துவமனைக்கு   செலவு செய்வதை சொன்னதும் நிறைய மனிதர்களின் புருவ உயர்வுக்கு காரணமாய் இருந்தார்..

1999 உலக கோப்பையை நிச்சயம் "தென் ஆப்பிரிக்காவின் "  உலக கோப்பை என சொல்லலாம்.. இந்த உலக கோப்பையில், "லான்ஸ் க்ளுஸ்னர்" ஆடினாரே ஒரு ருத்ர தாண்டவம்.. அது நிச்சயம் ஒரு சிலிர்ப்பான அனுபவம்.. அப்படி ஒரு ப்ளேயரை இதுவரை கண்டதில்லை.. பந்து கையில் இருந்தாலும் சரி, பேட் கையில் இருந்தாலும் சரி! ஒரு கை பார்க்காமல் அவர் விட்டதில்லை..  எதை வீசினாலும்( வேகம், சுழல் தான் ) சரி, பந்து பவுண்டரியில் தான் நிற்கும்.. அவர் ஆடிய 1999 உலக கோப்பை, அரையிறுதி இன்னும் இமை ஓரம் மினுங்குகிறது. அந்த கடைசி ஓவர் அடுத்தடுத்த இரண்டு பந்துகள் பவுண்டரியை தொட்ட தருணம், மனிதர் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் வல்லமை உள்ளவர் என சொன்னது.. அடுத்த பந்துகள், உலக கோப்பையை பறித்தாலும்[ கிப்ஸ் நழுவ விட்டது வேறு விஷயம்..  ], அவரின் ஆட்டம் ஈடு இணை அற்ற  "சாம்பியன்" ஒருவரின் ஆட்டமே..  

ஆஸ்திரேலியா அணியின் இன்றைய எழுச்சிக்கு காரமான ஒரு மனிதரை சொல்லவேண்டும் என்றால் நிறைய பேர் இவரை தயங்காமல், கை காட்டுவார்.. அது ஸ்டீவ் வா. 1994 தருணத்தில், ஆஸ்திரேலிய அணி, மேற்கிந்திய தீவுகளில், டெஸ்ட் தொடரை வென்றது.. இதில் ஸ்டீவ் வா 200 ரன்களை அள்ளி,  முக்கியமான ஆட்டத்தில் வென்றார்.. அந்த ஆட்டமே இவர்களின் இன்றைய எழுச்சி வரை இட்டு வந்திருக்கிறது.. அருமையான மன உறுதியும்,   கள வியூகமும்,  எந்த தருணத்திலும் போட்டியை முன் எடுத்து செல்லும் பக்குவமும்( 1999 அரை இறுதி, அதற்கும் முந்தய லீக் சுற்று நிச்சயம் சாம்பியன் ஆட்டமே! ) இவரின் தனி பாணி.. இவர் உலக கோப்பையை வென்றெடுத்த இரண்டு ஆஸ்திரேலிய அணியில் இருந்திருக்கிறார்..

இவர்களுக்கு சற்றும் குறையாத ஒரு மனிதர் உண்டென்றால் அது "ஆடம் கில்க்ரிஸ்ட்". துறுதுறுப்புக்கும், வேகத்துக்கும் இவரை போல வருமா என யாரும் சொல்வர்.. அப்படி ஒரு ஆட்டக்காரர். இவர் ஆடிய மூன்று உலக கோப்பையில், ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தட்டி சென்றுள்ளது.. பாண்டிங் அண்ணனுக்கு, அமைந்த வரமே அங்கே இருந்த தூண்கள் தான்.. "மெக்ராத், வார்னே!, கில்க்ரிஸ்ட், ஹய்டன்! ". அணி எந்த நிலையில் இருந்தாலும், எந்த இக்கட்டான போட்டி என்றாலும், எதிர் அணி பவுலரை நிலை குலைய வைக்கும் திறமை "கில்லிக்கு"  உண்டு..  அந்த வகையில் அவர் ஆடி கொடுத்த 2007 உலக கோப்பை இறுதி போட்டியும், அவர் அடித்து நொறுக்கிய சதமும் நிச்சயம் சாதனை மயில் கல்லே..     

இந்த வரிசைகளில் முதல் உலக கோப்பையில் சாதித்த "கிளைவ் லாயிட்", இரண்டாவது உலக கோப்பையில் அற்புதமாக ஆடிய "விவ் ரிச்சர்ட்ஸ்", மூன்றாவது உலக கோப்பையை வென்று தந்த "கபில்", ஆறாவது உலக கோப்பையை ரசனை ஆக்கிய  "ஜெயா சூர்யா! ", பல தருணங்களில் அசத்திய மெக்ராத், வார்னே,  இவர்கள் முக்கியமானவர்கள்.

இந்த உலக கோப்பையை பொறுத்த வரையில், என் பார்வையில், இந்த அணிகள் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வல்லவையாய் இருக்கின்றன.. "ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, இந்தியா?! " அடி பட்டு எழுந்து வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி நிச்சயம் பழைய பலத்துடன் இருக்கிறது.. அவர்களின் அசத்தல் ஆட்டம் இந்த உலக கோப்பையிலும் தொடரும்.. அவர்கள் விடாமல் தொடரும்( 1999 உலக கோப்பை முதல்  எந்த போட்டியிலும் தோற்காத பயணம் )  வெற்றி, இன்னமும் தொடர்கிறது. ஒரு நாள் உலக கோப்பையில், நாம் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்கிறோம்.. நாம் ஆஸ்திரேலியாவிடம் வாங்கும் அடியை யாராவது நினைத்தது உண்டா? 1987 க்கு பின் அடுத்தடுத்து நாம் அடி வாங்கியே வருகிறோம்..

சரி இந்த உலக கோப்பையில் இந்திய அணி எப்படி? மட்டயாளர்களில், இரண்டு மூன்று பேரே தற்போது முழு பார்மில் உள்ளனர்( ஷேவாக், பதான், கொஹ்லி ).. நம் ஷாட் பிட்ச், பலவீனத்தையே, பல அணிகள் பலமாய் பிடித்து கொண்டு விட்டன.. எதிர் அணியை அசத்தலாய் வீழ்த்த கூடிய பந்து வீச்சாளர்கள், மிரட்ட கூடிய வேக பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இல்லை.. நம், பலமான சுழல் கூட்டணி சற்றே சுணக்கத்தில்.. 'பாஜி'  நல்லா  தான் மட்டை பிடிக்கிறார்? ஆனா விக்கட்?( ரொம்ப கஷ்டமுங்க... ) . கடந்த உலக கோப்பையை வென்று வந்த அணிகளையும், நம் பலத்தையும் சற்றே தராசில் நிறுத்துங்கள்.. நாம் நிச்சயம் கோட்டை தாண்டவில்லை.      

எந்த ஆட்டத்திலும் இரண்டு ஆட்டகாரர்களின் எழுச்சி, மற்றவர்களின் துணை ஆட்டம், அணியை கரை சேர்க்க கூடும்.. பந்தை சரியாய் தடுக்கும் திறன் இருந்தால், நிச்சயம் அது அணிக்கு அருமையான பலம்.. அப்படி இருக்க நம்மிடம் ஒரு சிலரே தேற கூடியவர்களாய் உள்ளனர்.. ம்ம் .. பார்போம்.. அரை இறுதி வரை அணி வந்தால் அது நிச்சயம் பாராட்ட கூடியதே.. மும்பை வான்கடே மைதானமும், ஏப்ரல் இரண்டும் நிறைய விஷயங்களை சொல்ல கூடும்.. இதோ எதிர்வரும், கிரிக்கெட் திருவிழாவை ஆரவாரமாய் வரவேற்போம். இந்திய அணி சாதித்து காட்ட வாழ்த்துக்கள்:)
.
.           

Sunday, February 6, 2011

வண்ணதாசன் அவர்களின் "அகம் புறம் "


வண்ணதாசன் அவர்களின் "அகம் புறம் " தொகுப்பை மீண்டும் படிக்க நேர்ந்தது. ஒரு தித்திப்பான அனுபவமாய் அது இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் விகடனில் வாசித்தது என்றாலும், மீண்டும் வாசிக்கும் பொழுது தனித்துவமான அழகு அதில் இழையோடி இருந்தது. அவரின் கவிதைகளும், எழுத்தும் அப்படி இருப்பது தான் இயல்பு போலும். வாசித்த நாட்களில் அந்த தொடர் விதைத்த அத்துணை நிகழ்வுகளோடும் நானும் பயணித்தேன்.. நதிக்கரையில், அதற்கே உரித்தான நகர்வோடு பயணித்த உணர்வு   அதன் நகர்வில், அதன் வீச்சில்.. வாழ்வின் எல்லா புள்ளிகளையும் ஒரு தொடர்  தொட்டுவர முடியும் என நிரூபிக்கும் ஒரு  புத்தகம்;

அவரின் தொடரோடு பயணிப்பது ஒரு சுகானுபவம். இந்த தொடர் விகடனில் ஆரம்பிக்கும் முன், அவரோடு ஒரு பேட்டி கண்டு பிரசுரித்து இருந்தனர் விகடன் குழுமத்தினர்.. . "உங்கள் கனவில் தாமிரபரணியும், கல் யானைகளும் தற்பொழுது எல்லாம் வருவதில்லையா" என கேட்டிருந்தனர்.  அவரும் அப்படி கனவு வருவதில்லை என சொல்லி இருந்தார். பின்னர் வந்த நாட்களில், இதே கேள்விக்கு விடையாய்,  தொலைபேசியில் அழைத்திருந்த அவர் " சமீபத்தில் அந்த கனவு மீண்டும் வந்ததை மகிழ்வோடு சொல்லியதாய்" அந்த பேட்டி சென்றது.

இயற்கையோடும், அதன் அழகோடும் அப்படியே பயணிப்பது அவரின் எழுத்துக்கள்.   பி சி ஸ்ரீராம், பாலு மகேந்திரா, ரவி கே. சந்திரன், சந்தோஷ் சிவன் - இவர்களின் கேமரா கண்களை விட வண்ணதாசன் அவர்களின் பேனா படம் பிடித்து, எழுத்துக்கு எடுத்து வந்திருப்பவை, பறித்து வந்திருக்கும் மனோரஞ்சிதங்கள் மிக மிக அதிகம்.

சிந்தாமல், சிதறாமல், வாழ்வை அதன் இருளோடும், ஒளியோடும்  இரு கைகளுக்குள் பொத்தி எடுத்து காட்டும் அற்புத சக்தி அவரின் எழுத்துக்கள். இலையில் சிதறும் மழை துளியாயினும், காற்றில் கரகரத்து உதிரும் ஒற்றை சருகாயினும், புல்லாங்குழல் வழியே நழுவும் ஆழ்ந்த இசைபோலும்    வண்ணதாசனின் வரிகளில் மறு உயிர்ப்பு பெறுகின்றன. கரைந்தோடும் மனம்.. வளர்ந்து வளர்ந்து சிந்தை தொடும் சொல் நயம்.. அவரின் கட்டுரைகள் எங்கெங்கும்.

அவர் உவமையாய் சொல்லி சென்ற மனோ ரஞ்சித  பூ போல்,  அவரின் எழுத்து அத்தனை  வாசனை கொண்டதே. கன்ன கதுப்புகளில் படரும் இளம் புன்னகையோடு,  எண்ணங்களில் உலவுவது சுகமானதே. பக்கத்திற்கு பக்கம், அர்த்தம் சேர்க்கும் ஓவியங்கள், படங்கள்(அந்த சிவப்பு மிளகாய், அந்த சலூன் கடை, வீதியில் சிரிக்கும் பெண்கள், குழந்தைகளோடு ஓடிவரும் ஆட்டுக்குட்டி, அந்த  கிளிகள்,அந்த  மீன்கள், மனநிலை தவறிய மனிதர்கள்,  மர பொந்தில் இருந்து எட்டி பார்க்கும் சிறு குருவிகள் ), தொடரை அற்புதமாக்க போதுமானதாய் இருந்தது. நம் வீதியில் சந்திக்கும் அத்தனை மனிதர்களையும் எழுத்தில் கொண்டுவர இயலுமா? வண்ணதாசன் சாதித்து உள்ளார்;

அந்த தொடரோடு அவர் கண்ட அக உலகம் , புற உலகம் அற்புதமாய் விரிந்து காட்சி தந்தது. விகடனில் வெளி வந்த முதல் கட்டுரை தொடரே, அவரின் வீச்சை பிரதி பலித்தது. அந்த ஊஞ்சலில் நாங்களும் சக தோழராய் சலிக்க, சலிக்க ஆடினோம்.. தொடரில் வரும் பெயர்கள் - பிரம்ம நாயகம், பரமன், ஜான்சி, அருணா இவை எல்லாம் அற்புத அர்த்தம் தருபவை;

அட அந்த பள்ளி  வகுப்பறை, ஜான்சன் சார் - என பள்ளி நினைவுகளை மீண்டும் கண் முன் கொண்டுவரும்  பக்கங்கள்;என்ன ஒரு பசுமையான நினைவுகள் உங்களுக்கு;


" எத்தனையோ இரவுகளில் அசையாமல் தொங்குகிற அந்த ஊஞ்சல் சங்கிலிகளும் ஆள் அற்ற  பலகைகளும் என்னவோ செய்யும்... என்னவோ சொல்லும்"


அந்த தொடர் நகர்ந்த நாட்களில் தான் "லா. ச. ராமாமிர்தத்தின்" மறைவும் சுஜாதா அவர்களின் விடை பெற்ற நிகழ்வும், நடந்தது.. இதோ, அவரின் வார்த்தைகளில்..
"லா ச ரா வின் ஞாபகத்துடன் "அபிதா"வை  படிக்க வேண்டும் போல இருந்தது. புத்தகத்தை காணோம். யாராவது வாங்கி போயிருப்பார்கள். நல்ல புத்தகம் ஆறு மாதிரி. நகந்து கொண்டே இருக்கும். என்னிடம் இருந்து நகந்து போனவை போல, இங்கே நகர்ந்து வந்திருப்பவற்றுக்கும் குறைவில்லை. "ஜமிலா " என் புத்தக அலமாரியில் இருக்க என்னுடைய "அபிதா" வேறு யாரிடமோ இருப்பாள், அல்லது எங்கும் இருப்பாள். இப்படி சொற்களின் பகடை உருட்டி எத்தனை சதுரங்கம்! சொற்களின் அகல் ஏற்றி எத்தனை திருக்கார்த்திகை!    "

"ஒவ்வொரு இலை உதிரும் போதும், அப்பா அது இருந்த மரத்தையும் உதிர்ந்த விதத்தையும் பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறார்.. லா.  ச. ரா. ஒரு இலை, மாமா ஒரு இலை, வேலாண்டி பெரியப்பா ஒரு இலை, சமீபத்தில் சுஜாதா ஒரு இலை.. "

வண்ணதாசனின் சிறுவயதில் அவருக்கே இருந்த கேள்விகள்.... நம்முடைய வாழ்விலும் இப்படி தானே. ..

"சங்கர்லால் என்பது தமிழ்வாணன் அவர்களா, வேறு யாராவதா? ஓவியர் சில்பி எப்படி அச்சு அசலாக வரைந்து விடுகிறார்? எப்படி இவ்வளவு சின்ன வயதில், ரயில்வே பிடர் ரோடு கூட்டத்தில், நா காமராசனும், காளிமுத்துவும் இவ்வளவு அருமையாக பேசுகிறார்கள்.. ட்ராபால்கர் சதுக்கத்தில் மட்டும் ஏன் அவ்வளவு புறாக்கள்? சப்போட்டா பழ விதைக்கு, கருப்பு எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது?   "

சிறுவர்களின் உலகத்து பறவைகள் தொலையும; இறகுகள் ஒருபோதும்,  தொலையாது;

"கண்ணுக்கு தெரிபவற்றை  காட்டிலும், மண்ணுக்குள் புதையுண்டு போன கல் ரதங்கள்  தான் பார்க்கப்பட வேண்டியவை.. "

"எல்லா முகங்களையும் நான் ஏற்று கொள்கிறேன். என் முகத்தையும் அவர்கள் ஏற்று கொள்ள கூடும். நிராகரிப்பதற்காக அல்ல, ஏற்று கொள்வதற்காகவே இந்த வாழ்வு, இந்த மனிதர்கள்..  இந்த நதி. இந்த படி துறை. இந்த கல்மண்டபம்..

இந்த நதி ஓடும் பொது, இந்த படித்துறையில் குளிக்கிற நேரத்தில், இந்த கல்மண்டபத்தில்,   அமர்ந்து இருக்கையில், நான் அழகாக இருக்கிறேன். உள்ளும் வெளியும் அழகு. உள் தான் வெளி. அகம் தான் புறம். நான் தான் நீங்கள்..   "

அவர்களுக்குள் அப்படி ஒரு நல்ல  நட்பு;நட்பில் என்ன ; நட்பே நல்லது தானே;

இங்கே சொடுக்கவும்.. அவரின் அற்புத உலகில் சில முத்துக்கள்..
 உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?
அபிதா

இந்த தொடர் முடிந்த பின், வண்ணதாசனுக்கு நன்றி சொல்லி, என் ஆழ்ந்த நேசிப்பை, வாசிப்பை அர்த்தப்படுத்தி கொடுத்தமைக்காய், ஒரு  கடிதம் எழுத வேண்டும் என்னும் எண்ணம் என்னுள் முளைத்தது. அது தான் இப்படி பதிவை உருமாறி உள்ளதோ?

 தொடரின் முதல்  பக்கத்தில், புத்தகத்தை அபிதாவுக்கு சமர்ப்பித்திருந்தார்; மீண்டும் அந்த பக்கத்தை புரட்டும் தருணங்கள், கண்கள் நீர் திரைக்கட்டும்;

.
.

தாய்மைக்கு வணக்கம் - ஒரு சிறு பகிர்தல்

தாய்மைக்கு வணக்கம் - ஒரு சிறு பகிர்தல்
                   கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்த இந்த விழா நிகழ்வை, எதேச்சையாக   காண நேர்ந்தது. டி. டி.  ரங்கராஜனின் இந்த பேச்சு உண்மையில் நெஞ்சை தொட்டது. இதோ சிறு பகிர்வு.. ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணம்..




இதோ ரஹ்மானின் வார்த்தையில்



Thursday, January 6, 2011

அடடே! வகை "சுபானி" கார்டூன்கள்

 தினமும் காலையில் "டெக்கான் க்ரானிகல்" பத்திரிக்கை மூலம் சுபானி அவர்களின் கார்டூனை காண்பது ஒரு அபூர்வ அனுபவம். நச் என மனதில் ஒட்டிக்கொள்ள கூடியவை..

சென்ற ஆண்டின் சம்பவங்களை திரும்பி பார்ப்பது போல் இவை  உள்ளன.. 

அடி மேல் அடி வாங்கிய ஆஸ்திரேலிய  மாணவன் 

இதிலும் நியுமராலாஜி 

போதுமடா ரயில் பயணம் - ஐயோ விபத்துகள் 

எல். கே. ஜி யில் இப்படி - அடடே ஸ்கூல்

அழுகின காயா - விலை ஜாஸ்தி சார் - ரொம்ப டிமாண்ட்
ஊழல் முகம் 
எனக்கே விளையாட்டு அமைச்சகம் 


நிஜம் தானே! சமையலா அப்புறம்!  

யாரை பார்த்தாலும் கட்டற தாலியை - ஒரே கூத்து தான் போங்க! 


மேட்ச் பிக்ஸ்  

ஒன்னும் தப்பா நெனச்சுகாதீங்க - விளையாட்டா தான் (:


என்னது - கொழந்தைங்க படமா - விளையாடாதீங்க டாட்


சேமிக்க இடமே அமையல - வாஸ்து பார்க்கணுமோ  என்னவோ 

எப்படி சமாளிச்சோம் - திறமையே திறமை 

தண்ணி காட்டினோம் அல்ல - வாக்குறுதி  மிக மிக முக்கியம் 


[நன்றி சுபானி அவர்களின் வலை பூக்களுக்கு ]

Saturday, January 1, 2011

ரமண மகரிஷி - நினைவுகள்



சென்ற டிசம்பர் 30 ஆம் நாள் பகவான் ரமண மகரிஷி அவர்களின் 132 ஆவது பிறந்த தினம். இளம் வயதில் தனக்குள் உதித்த எண்ணங்கள், அவரை பின்னாளில் ஒரு மெய் ஞானியாய், மனித புனிதராய் உயர்த்தியது. வழிகாட்டியாய் யாரும் இன்றி, அண்ணாமலை இறைவனை முதல்வனாய் கொண்டு நடந்த அவரது பாதை புதுமையானது.

 காலம் தோறும் சக மனிதர்களுக்கு, நல்வழி  காட்டிட, உன்னத மனிதர்கள் உதிப்பது பாரதத்திற்கு புதியதில்லை. ரமணர் சற்றே வித்தியாசமாவர். நம் முன், அறுபது ஆண்டுகள் முன்பு வாழ்ந்து மறைந்தவர். உடல் என்ற ஒன்றை மறந்து இறையில் கலந்தவர்.  தன் பதின் வயதில் திருவண்ணாமலை வந்தவர், அதன் பின் மகா சமாதி வரை எங்கும் சென்றதில்லை. தன்னை பற்றி பிரச்சாரம் செய்தவர் இல்லை. 

முக்தியின் தேடல் உள்ளவர்கள் அவரை முழு முதலாய் பற்றினர்.  அவரது கடைசி பத்து ஆண்டுகள், உலகம் அவரை கண்டு கொண்டது. தேச எல்லைகள் தாண்டியும் தேடல் உள்ளவர் அனைவரும் அவரை தரிசிக்க முனைந்தனர்.  அது தான், இறை ஏற்படுத்தி வைத்த முடிவோ?   மகரிஷியை பற்றிய நினைவு குறிப்புகள் இங்கே..
  • ரமணர் பிறந்தது 1879 டிசம்பர் முப்பது. பிறந்த ஊர் திருச்சுழி. அவரது இயற் பெயர் வெங்கடராமன்.   தந்தை: சுந்தரம் அய்யர். தாய்: அழகம்மாள்.
  • 1892 ஆம் ஆண்டு , தந்தையின் மரணத்திற்கு பின் ரமணரும் அவரின் சகோதரர் நாக சுவாமிக்கும் மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையில் வாசம்.  துவக்கத்தில் ஸ்காட் நடுநிலை பள்ளியிலும், பின் அமெரிக்கன் மிஷன் பள்ளியிலும் படிப்பு தொடர்ந்தது.
  • ரமணர் விழிப்புணர்வை பெற்ற நாள் ஜூலை 17 , 1896. அன்று மரணத்தை பற்றிய எண்ணம் தலை தூக்கியது. அதன் பின் அவர் கண்டதே.. "நான்  யார்?" என்ற தேடல். அந்த ஆத்ம சக்தியில் அவர் முழுதுமாய் கரைந்து போனார்.
  •  ரமணரின் வார்த்தைகளில் குறிப்பிட்டால்  .. "நான் உன்னை எண்ணிய தருணத்தில், நீ என்னை இறுக பற்றி உன்னுள் புதைத்து கொண்டாய். அருணாசலா! உன் பெருமையை, உன் அருளை, யாரால் அளவிட முடியும்..  ".
  • திருவண்ணாமலையை அறிந்த நாட்களில் இருந்து ரமணருக்கு இதயத்தில், இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. பெரும் பந்தத்தின் தொடர்ச்சியாய் தோன்றி இருக்கின்றது..
  •  அது அவரின் பதினாறாவது வயது நடந்து கொண்டிருந்த காலகட்டம். மனம் முழுதும் இறை நிரம்பிய பின், உலக வாழ்வில் பற்று விடுபட்டு போனது. "என் தந்தையை தேடி, என் தந்தையின் கட்டளை படி, நான் இங்கிருந்து புறப்படுகிறேன்... " - இது ரமணர் அண்ணாமலைக்கு புறப்படும் முன் விட்டு சென்ற கடித வரிகள். 
  • ரயிலிலும், கால் நடையிலும், அவரது திருவண்ணாமலை நோக்கிய பயணம் நிகழ்ந்தது.. செப்டம்பர் 1 , 1896 ஆம் நாள் அவரது தந்தையின் இருப்பிடத்தை(அருணாச்சலத்தை)  அடைந்தார். நேராக அருணாச்சல இறைவன் சன்னதி வந்தவர்.. "தந்தையே இதோ உன் கட்டளை படி வந்துவிட்டேன்.. " என தன்னை ஒப்புவித்தார்..
  • அன்றைய தினமே தன் தலை முடியை துறந்து வெறும் கௌபீனம் தரித்து, இந்த உலகுடனான பந்தத்துக்கு முற்று புள்ளி வைத்தார். அவரது வரவை தந்தை எதிர்பார்த்தாரோ என்னவோ, வானம் நான்கு நாட்களுக்கு கொட்டி தீர்த்தது.
  • ரமணரின் நிஷ்டை நாட்கள் ஆயிரம் கால் மண்டபத்திலும், பின் பாதாள லிங்க அறையிலும் நிகழ்ந்தது. வெளி உலக தொடர்பு அற்று, உடலின் இயக்கம் மறந்து, உள்ளம் இறைவன் மேல் லயித்து போன நாட்கள் அவை. தன் சுய தேடலில், தன்னை மறந்து உள்முகமாகவே பயணம் தொடர்ந்தது.

    அருகே இருந்தவர்கள் கவனித்து, ரமணரை பாதாள அறையில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். தொடை முழுதும், உடலின் பல பாகங்களில், எறும்பும், பிறவும் வாசம் செய்து.. ரணமாய் மாறி இருந்தது. உயிர் வதைக்கும் அந்த வலியில், அந்த சின்ன பையன், எப்படி உலக இயக்கம் அற்று உள்முகமாய் இருக்கிறான் என்பது சுற்றி இருந்தவருக்கு புரியாத புதிர்..  


    குருமூர்த்தத்தில் வாசம் செய்த நாட்களில், கோயில் தெருக்களில் ஏதாவது வீட்டின் முன் நின்று கையை தட்டுவார். அவரின் வரவுக்காய் நிறைய பேர் உணவோடு காத்திருப்பார்.. பல நாட்களில் மற்றவரை ஏமாற்றம் கொள்ள வைக்காமல் இடத்தை மாற்றி கொள்வார். 


    குருமூர்த்தத்தில் இருந்து, ரமணர் இருபதாம் வயதில் விருபாக்ஷா குகைக்கு மாற்ற பட்டார்.1899 முதல் 1916 வரை பதினேழு ஆண்டுகள் இங்கு வாசம்.. இங்கு தான் அவரின் தாய் அழகம்மாள் வந்து தங்கியதும், மகன் தாய்க்கு உபதேசம் அளித்ததும்.... 


    மௌனத்தை மட்டுமே தன் மொழியாய் கொண்டிருந்த ரமணர், 1907 இல் கணபதி முனிக்கு தன் முதல் உபதேசத்தை அளித்தார்.   

    ஆதி சங்கரரின் "விவேக சூடாமணி" யை உரை வடிவில் ரமணர் தந்தது விருபாக்ஷா குகை நாட்களில் தான்.


    விருபாக்ஷா குகை நாட்களில், அவருக்கான உணவு, வெளியே வீடுகளில் பெறப்படும்.. கொண்டு வந்ததை, கலந்து அப்படியே கொதிக்க வைத்து அருகே உள்ளவர் அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.. சில நாள் உப்புடன். சில நாள் அதுவும் இராது.

    1916 முதல் 1922 வரை கந்த ஆஷ்ரமத்தில் வாசம்.. தண்ணீர் பிரச்சனைக்காக இங்கே இடம் மாறி வந்தார்.

    1922 மே, பத்தொன்பதாம் நாள், ரமணர் அவரின் தாய் அழகம்மாளுக்கு முக்தியை தந்த நாள்.    காலையில் அவரது தாய் அருகில் சென்றவர், இரவு எட்டு மணிக்கு பிறப்பு இறப்பு அற்ற முக்தியை கொடுத்தார்.  அவரின் வலது கரம் தாயின் இதயத்திலும், இடது கரம் தலையிலும் இருந்தது.  தாயின் இதயத்துக்கு, மனம் முழுதுமாய் இடம் மாறியது.. 


    அதன் பின் அவரது வாசம் தற்போதைய ரமண ஆசிரமம்.  ரமண ஆசிரமத்தில் உள்ளவர் அனைவர்க்கும் ஒரே மாதிரியான மதிய உணவு வழங்கப்படும்.. அவர்களோடு ரமணரும் அமர்ந்து உணவை உட்கொள்வார்.

    அணில், மயில், குரங்குகள், மான்(வள்ளி) , மாடு(லக்ஷ்மி) இவை ரமணர் பிரியத்தோடு பராமரித்து போற்றியவை. லக்ஷ்மிக்கும், வள்ளிக்கும் ரமணர் முக்தியை தந்தார். 


    பால் ப்ரூடன், மவ்ரிஸ் ப்ரிட்மான்(Maurice Frydman ), சோமர்செட் மாம்(நோபல் பரிசு பெற்றவர்), மெர்சிடஸ் டி அகஸ்ட - சில மேற்கத்திய சீடர்கள் .

    நரசிம்ம சுவாமி எழுதிய "self  realization "  பால் ப்ரூடனின் "search in secret India " ரமணரின் வாழ்வை பற்றி வெளி உலகுக்கு கொண்டு சென்ற முதல் புத்தகங்கள்.. 


    மைசூர் மகாராஜா ரமணரை காண வந்தார். அவர்களின் சந்திப்பு மௌனத்திலே கழிந்தது.. அதை குறிப்பிட்ட ரமணர், அவருடன் பேச அவசியம் இல்லை அவரது ஆத்மா உயர் நிலையில் இருந்தது.. பார்வை பரிமாற்றமே போதுமானதாய் இருந்தது என்றார். 

    ஏப்ரல் பதினான்கு, 1950 ரமணர் மகா சமாதி அடைந்த நாள். அவரது பேரொளி அருணாசல இறைவனுடன் கலந்த தருணம்.  



    "நீ உன் அறிவை, ஒருமையுடன் இதயத்தில் குவிப்பாயாக. அந்த இடமே ஆத்மா அமரும் இடம். இறைவனே அனைத்தையும் வலி நடத்துபவர்.  இறைவனே பிரபஞ்சத்தின் கடந்த காலம் எதிர்காலம் இவற்றை கட்டுபடுத்துபவர். அவரை நம்புங்கள்".
    "உன்னிடம் "நான்" என்கிற எண்ணம் இல்லை என்றால் உனக்கு வேறு எண்ணம் தோன்றாது.. அப்படி எண்ணம் தோன்றினால் எங்கிருந்து அந்த எண்ணம் தோன்றுகின்றது என்பதை கண்டறி. அப்படி உள் முக பயணத்தில் ஒருவர் இதயத்தையும் மனத்தையும் அதன் மூலத்தையும் தொட்டால் அவர் இந்த பிரபஞ்சத்தின் கடவுள்"..
    "நான் உடலாய் இருந்தால் மட்டுமே காலத்தாலும், இடத்தாலும் கட்டு படுத்தே படுவேன். நான் எங்கும் நிறைந்தவன்.. நான் காலங்களை கடந்தவன்"..

    "நான் எங்கும் போய் விட வில்லை இங்குதான் இருக்கிறேன். வருத்தம் வேண்டாம் ".. 
    இவை ரமணர் உதிர்த்தவை..

    "அருணாச்சல சிவ, அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா..  "