Wednesday, March 29, 2017

வெண்ணிற இரவுகள்(White Nights) - தமிழ் மொழிபெயர்ப்பு - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி


வெண்ணிற இரவுகள்(White Nights) - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoyevsky)


வெண்ணிற இரவுகள்(White Nights) - தாஸ்தோவ்ஸ்கி அவர்களால் 169 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்டது. அதன் தமிழாக்கத்தை "எதிர்" வெளியீடாக "ரா. கிருஷ்ணய்யாவின்" மொழியாக்கத்தில் படிக்க நேர்ந்தது. தாஸ்தோவ்ஸ்கியின் எழுத்தை முதல் முதலில், முழுமையாக வாசிப்பது உண்மையில் பேரனுபவம்; முன்னர் நான் வாசிக்க முற்பட்ட 'The Ediot' புத்தக அலமாரியில் நீண்ட துயில் கொள்கிறது.  அருமையான  வடிவமைப்பில், ருஷ்ய சிறுகதை தமிழில். எஸ். ரா. அவர்களின் இந்த கதை பற்றிய எண்ண ஓட்டங்கள் கதையின் முன்னுரையாக தரப்பட்டுள்ளது சிறப்பு.



அந்த நாளைய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கதை நிகழ்கிறது. பகல் நீண்ட இரவிலும் சூரியன் நீளும் உலகு கதையில்  விரிகிறது. இரண்டு  ஆண்கள்,ஒரு  இளம் பெண், ஒரு பாட்டி என கதை மாந்தர்கள் சொற்பமானவர்களே; இந்த கதை சொல்லி அவரின் வாயிலாகவே கதை விரிகிறது; அவர்க்கு என பெயர் இல்லை; அவர் ஒரு கனவுலக வாசி;

கதையின்  துவக்கத்தில்,அன்று உச்சத்தில் இருந்த கவிஞர் துர்கனேவ் அவர்களின் 'பூக்கள்' தொகுப்பின் கவிதை இடம்பெற்று உள்ளது.

"நின்காதல் நிழல் தன்னில்
நின்று மகிழ்வோம்
மின்னி மறையும்
கண்ணிமை பொழுதெனினும்
போதுமது என்றெண்ணிப்
பிறந்தானோ ?.."

"The Flower" by Ivan Turgenev....

"And was it his destined part
Only one moment in his life
To be close to your heart?
Or was he fated from the start
to live for just one fleeting instant,
within the purlieus of your heart."

இந்த கவிதையே கதைதனை சொல்லிவிடுகிறது; தாஸ்தோவ்ஸ்கி கதையில் அவரின் வாழ்வனுபவம் ஏராளம் இடம் பெறும். இந்த கதையின் பின் தாஸ்தோவ்ஸ்கி நின்று பேசுவது போல் கதை உள்ளது; அவரின் எல்லா நாவல்களும் அவரின் வாழ்வே! என்ன; அங்கங்கே ஒவ்வொரு கதா பாத்திரம்.. அவ்வளவே ? ஏனெனில் தாஸ்தோவ்ஸ்கி வாழ்ந்த வாழ்வும், தொடர்ந்த நிழல் போன்ற நெருக்கடிகளும், சுமைகளும் அத்தகையவை; தாஸ்தோவ்ஸ்கி அவர்களின் அக உலகம் போன்றது தான் இந்த கதை நாயகனின் உலகமும்; ஏன் - நம்மில் பெரும்பான்மையானவர்கள் இயைபும் அப்படி தானே! நான்கு இரவுகள், ஒரு பகல் என கதை முடிந்து விடுகிறது;கதை நாயகன் தன்னை ஒரு கூச்ச சுபாவம் கொண்டவராய், தனிமையில் உழல்பவராய் தன்னை சுட்டுகிறார்;

அவர் ஒரு இளம்  பெண்ணுக்கு உதவ போய்(நாஸ்தென்கா), அறிமுகமாகி,  அவளின் காதலுக்கு உதவுகிறார்; இந்த தருணத்தில் அவர்க்கு நாஸ்தென்கா மீது காதல்; நாஸ்தென்கா - வின் கடிதத்துடன் அவரின் காதலரை சந்திக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,ஓர் இடத்தில் சந்திக்கும் இவர்களின் எண்ண ஓட்டம், தொடர் பேச்சு, அழுகை , மகிழ்ச்சி, நட்பு, சுய மதிப்பீடுகள் இவை  கதையை நகர்த்துகின்றன. நாஸ்தென்கா தன் கண் தெரியாத பாட்டியுடன் வாழ்வபள்.    ஒரு வருடத்துக்கு பின், தன் காதலன் வரவை இப்பொழுது எதிர்பார்த்து காத்திருப்பவள்;

நான்காவது நாள், தன் காதலன் வராத நிலையில் நாஸ்தென்கா கலங்குவதும்,  கதையின் நாயகனிடத்தில் தானும் காதல் வயப்படுவது போல் கதை நகர்ந்து, திடீர் திருப்பமாய் காதலன் அங்கே உதயமாகிறான்; அந்த நிலையில், கதை நாயகனிடம் நாஸ்தென்கா விடைபெறுகிறாள்;

அடுத்த நாள் , பகல் பொழுதில் நாஸ்தென்காவின் கடிதத்தை கண்ணீரோடு வாசிப்பதோடு கதை முடிகிறது; நீ எங்கிருந்தாலும் வாழ்க! உன் மங்கள குங்குமம் வாழ்க! என்பதாய் திரை விழுகிறது;

" உன் வானம் என்றும் நிர்மலமாய் ஒளிர்வதாக! உனது இனிய புன்னகை துன்பத்தால்  தீண்டப்படாது என்றும் ஒளி வீசுவதாக;"


My God, a moment of bliss. Why, isn't that enough for a whole lifetime?

I am a dreamer. I know so little of real life that I just can’t help re-living such moments as these in my dreams, for such moments are something I have very rarely experienced. I am going to dream about you the whole night, the whole week, the whole year.


May you be for ever blessed for that moment of bliss and happiness which you gave to another lonely and grateful heart. Isn't such a moment sufficient for the whole of one's life?May your sky always be clear, may your dear smile always be bright and happy, and may you be for ever blessed for that moment of bliss and happiness which you gave to another lonely and grateful heart. Isn't such a moment sufficient for the whole of one's life?


http://www.sramakrishnan.com/?p=689

Sunday, March 5, 2017

க சீ சிவகுமார் - நினைவஞ்சலி

சமீபத்தில் மறைந்த க.சீ சிவகுமார் பற்றிய பதிவுகள், நினைவுகள்:


 பாஸ்கர் சக்தி அவர்கள் விகடனில் சிவகுமார் பற்றிய தன்  எண்ணத்தை வார்த்தைகளாய் வடித்துள்ளார்; அதன் பதிவு:
http://www.vikatan.com/anandavikatan/2017-feb-15/interviews---exclusive-articles/128535-writer-kasi-sivakumar-death.html

அவரின் ஒரு சிறுகதை (விகடனில் வெளிவந்தது)
http://www.vikatan.com/anandavikatan/2012-oct-03/stories/24432.html



சமீபத்தில் மறைந்த க.சீ சிவகுமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவஞ்சலி நடந்துள்ளது. அதன் பதிவுகள் இங்கே:


(எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நினைவுகள் )



(நண்பர் பாஸ்கர் சக்தி அவர்களின் நினைவுகள்)



(அகர முதல்வன் மற்றும் பலர்... )


(அவரின் எழுத்து பாடலாய்...)



( )





Saturday, March 4, 2017

டாக்டர் வா.செ.குழந்தைசாமி நினைவுகள்



தமிழ் கூறும் நல் உலகுக்கு நன்கு அறிமுகமானவர்  டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள்; கடந்த டிசம்பர் 10 ஆம் நாள் நம்மிடம் இருந்து விடைபெற்றார். நல்ல தமிழறிஞரும், அருமையான கல்வியாளராகவும், மிக  சிறப்பான நிர்வாகியாகவும் நிலை கொண்டவர் குழந்தைசாமி அவர்கள். தன்னை எப்பொழுதும் தமிழ்  மாணவன்,சிறந்த பொறியாளன் என அறிவித்து கொள்வதில் பேருவகை அவருக்கு உண்டு. "குலோத்துங்கன் கவிதைகள்", வள்ளுவம்  என அவரின் படைப்புலகு அற்புதமானது; 'வாழும் வள்ளுவம்' என்ற நூலுக்காக சாகித்ய அகாடமியின் விருது பெற்றவர்; இன்றைய கரூர்   மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்; எழுத்து வாசனை அதிகம் இல்லா ஊரில்  இருந்து புறப்பட்டு கரக்பூர் ஐ ஐ டி, இல்லினோயிஸ் பல்கலை வரை  சென்றவர்; நீரியல் துறை  வல்லுநர்  அவர்; மதுரை காமராஜர் பல்கலை கழக துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலை துணை வேந்தர், தமிழ் இணைய பல்கலைக்கழகம் என அவர் நிர்வகித்தவை, முத்திரை பதித்தவை ஏராளம்;


பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரின் கைகளால் மேடையில் பரிசு பெறும் வாய்ப்பு பெற்றேன்; அந்த விழாவில் அவரின் பேச்சு சுவை பட இருந்தது; சிந்திக்க வைத்தது; அவற்றின் சில துளிகள் இங்கே:

  • என் வாழ்வில் இருந்து பேசுவதற்காக மன்னிக்கவும்; நான் பேராசிரியராக பணிபுரிந்த நாட்களில், எந்த நாளிலும் வகுப்புக்கு காலம் தாழ்த்தி சென்றதில்லை. ஆசிரியர் பணிக்கு காலம் தாழ்த்தாமை மிக மிக முக்கியம். 
  • ஒரு ஆசிரியருக்கு, அவரின் மாணவர் மேல் அதீதமாக நேசிக்கும் பக்குவம் வேண்டும்;  ஒரு போதும்  சலித்தல், எரிச்சல் படல் கூடாது. தன் சுய துக்கங்கள் மாணவரிடம் காண்பிப்பது ஆகாது;
  • அவர் கற்பிக்கும் பாடத்தை, ஆசிரியர் தொழிலை,  அவர் உளமார நேசிக்க வேண்டும்; 
  • மாணவர்களிடம் பாரபட்சம் கூடாது;
  •  அறிவியலை, செயல்முறை கல்வியாக கற்க  ஆர்வம் காட்டுங்கள்; 
  •  தன் தாய்  மொழியில் கல்வி கற்பது, நல்ல கற்பனை  வளம் பெற உதவும்; கற்றலை மேம்படுத்தும்; ஜப்பான், சைனா நல்ல உதாரணம்;
  • சுய கெளரவம் மிக  முக்கியம்;
  • வெளி நாட்டவர்க்கும், நம்மவர்க்கும் உள்ள வேறுபாடு: நம்மவர்க்கு பிறரிடம் பேச, பழக தெரிவதில்லை என்பதே உண்மை; 
  • நம்மவர்கள் ஓர் இடத்தில் நிற்க வேண்டும் என்றால் ஏதாவது கைப்பிடியை பிடித்துக்கொண்டோ, சுவரில் சாய்ந்து கொண்டோ தான் நிற்க முயல்கின்றனர்;
  • இரயில் பயணத்தில் ஒரு நாள் நம்மவர் தம் சக பயணியிடம் உரத்த குரலில் உரையாடி வந்தார்; அதை சுட்டிய   வெளிநாட்டவர் ஒருவர், அவர் தன் பக்கத்தில் இருப்பவரிடம் தானே பேசுகிறார்; ஏன் ஒட்டுமொத்த இரயில் பெட்டிக்கும்  கேட்பது  போல் பேசுகிறார், பக்கத்தில் இருப்பவர் கேட்கும் தொனியில் பேசினால் போதாதா  என கேட்டார் என அந்த நிகழ்வை பகிர்ந்து  கொண்டார்;
  • நான் என் சிறு  வயதில்,என் கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு என் தாய் தந்தையருடன்  செல்வேன்; இன்று அந்த கோவில் பாழ்பட்டு  நிற்கிறது;ஆனால் நான் குடி இருக்கும் பெசன்ட் நகரில் கடந்த சில ஆண்டுகளில், நான்கைந்து கோயில்கள் புதிதாக வந்து  விட்டன;நான் எண்ணுகிறேன், மனிதர்களை தொடர்ந்து கடவுளும் கிராமத்தை விட்டு நகரத்துக்கு குடிபெயர்ந்து விட்டாரோ என சொல்லி சென்றார்;
  • அவரின் எண்பதாவது பிறந்த நாளை அண்ணா பல்கலை கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது;
  • .அவரின் இணைய  பக்கம் : http://kulandaiswamy.com/index.htm