Saturday, November 5, 2016

இரு வல்லவர்கள் - சாவி, ல. ச. ராமாமிர்தம்


 இந்த ஆண்டு இரு வல்லவர்கள் நூற்றாண்டு காண்கிறார்கள்; ஒருவர் சாவி, மற்றவர் ல. ச. ராமாமிர்தம்.

எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சாவி:

பன்முக திறமை கொண்டவராக அறியப்படுபவர் சாவி; 'அக்கிரகாரத்தில் தோன்றிய அதிசய மனிதர் என புகழுக்கு சொந்தக்காரர்.' அவரின் வாஷிங்டனில் திருமணம் இப்பொழுதும் வாசிக்க திகட்டுவதில்லை; அவரின் வாஷிங்டனில் திருமணம் தூர்தர்ஷனில் தொடராய் வந்த காலத்தில் ரசித்து பார்த்தேன். பல முறை நாடகமாய் மேடை ஏறிய நகைச்சுவை படைப்பு அது. இளம் எழுத்தாளர்களை கண்டறிவதில், ஊக்குவிப்பதில், அவரின் எழுத்துக்களை கொண்டுவருவதில் சாவி கெட்டிக்காரர் தான்; அப்படி அவர் அறிமுகம் செய்வித்தவர்கள், முன்னுக்கு வந்தவர்கள் ஏராளம்; திறமையை என்றும் ஊக்குவிப்பது அவரின் பாணி;

அடுத்தது அவரின் பத்திரிக்கையை சர்குலேஷனை அதிகரிக்கும் வித்தியாசமான முயற்சிகள்; அத்தனையும் அசாதாரணமானவை; வெற்றிகரமாக பத்திரிகையை தொடங்குதல், நடத்துதல் அவரின் பாணி அற்புதமானது; அவருக்கு இருந்த தொடர்புகள், முக்கிய மனிதர்களை பேட்டி கண்டவை முக்கியத்துவமானவை; மகாத்மாவை நேரடியாக கண்டு அவர் வெளியிட்ட கட்டுரை முக்கியமானது(நவகாளி பயணம்);

அவர் ஆசிரியராய் இருந்து வந்த தினமணி கதிர், சாவி, குங்குமம் இதழ்கள் சுவையானவை; தலைப்புகள் கொடுப்பதும், தேர்ந்தெடுப்பதும் அவருக்கு அத்துப்படி;  கல்கியை தன் குருவாய் கொண்டு பயணித்த சாவி, தனக்கு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில், பேசியபடியே மயங்கி உயிர்  விட்டது அதிர்ச்சியானது;

'இதழாசிரியர் மூவர்' எனும் விக்ரமன் அவர்களின் புத்தகம் சாவியை பற்றி விரிவாக அலசுகிறது;

அவரை பற்றிய பிற பதிவுகள்:
http://www.vikatan.com/news/coverstory/67019-writer-saavi-100th-anniversary.art
http://www.vikatan.com/news/coverstory/67018-writer-saavi-100th-anniversary.art
http://epaper.dinamani.com/897190/Kadir/07082016#dual/1/1

http://epaper.dinamani.com/897190/Kadir/07082016#dual/2/1
http://vannapetti.blogspot.com/2016/09/theervugal-how-writer-saavi-inspired.html?m=0


ல ச ராமாமிர்தம்:



லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் - பெற்றோர்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை; தன் வங்கி பணியோடு எழுத்தையும் தொடர்ந்தவர்; தப்பி பிழைத்தவர் என்கிற காரணத்தாலோ என்னவோ, இவரின் எழுத்து வாழ்வையும், மரணத்தையும் விட்டு வைப்பதில்லை; தன்னை பிதாமகர் என அழைப்பது பற்றிய சுய எள்ளலாய் இருக்கட்டும், இவரின் எழுத்து புரியவே இல்லை என சொல்வதாய் இருக்கட்டும், இந்த கதை எங்கே திருடினாய் - நாம் சரியான ராயல்டி தந்து விடலாம் என பத்திரிகை ஆசிரியர் கலாய்த்ததாய் இருக்கட்டும் - அத்தனையும் ஒரு பகடியாய் கடந்து விடுவார்;

அவரின் சிந்தா நதி, பாற்கடல் இரண்டும் வாழ்வின் பயணங்களை இளமை, முதுமை அனுபவம் என சொல்லி செல்கிறது; அவரின் அபிதா அற்புதமான படைப்பாய் விரிகிறது; எழுத்து எங்கும் சக்தியின் வழிபாட்டை தரிசிக்கலாம்;

ஒரு முறை ஜெயகாந்தனும், ல ச ரா அவர்களும் ஒரே மேடையில்; என்ன நீ இப்போ எழுதறாதே இல்லை என ஜெயகாந்தனிடம் கேட்டு விட்டார் ல ச ரா; அதற்கு ஜெ கே - எல்லாம் எழுதி முடிச்சாச்சு ல ச ரா என்றிருக்கிறார்; அதற்கு இவர் - 'என்ன நீ இப்படி சொல்றே? சரஸ்வதியே இன்னும் புஸ்தகத்தை கீழே போடாமே வெச்சிருக்காளேப்பா ' என்று சொல்லியிருக்கிறார் ;  ஜெயகாந்தன் வாஞ்சையுடன் ல ச ராவின் கைகள் மேல் கை வைத்து வாஸ்தவம் தான் என்றார்;

http://en.thamizhagam.net/nationalized%20books/La%20Sa%20Ramamirtham.html

(நன்றி - விகடன், தினமணி கதிர், கல்கி)