Friday, February 14, 2014

ஒரு மறக்க முடியாத ஒளி கலைஞனின் நினைவுகள் - பாலு மகேந்திரா




சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குடும்பம் விகடன் மூலம் தன் ஆசையை வெளிப்படுத்தியது. அது பாலு மகேந்திரா அவர்களிடம் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்பதே. அதை அவர் அழகாக நிறைவேற்றவும் செய்தார். அவரின் தனித்துவம், மிக சிறப்பான ஒளி கலைஞன் என்பதில் இருந்து துவங்குகிறது.

சில நாட்களுக்கு முன் பாலு அவர்களின் பழைய பேட்டியை கண்டேன். அதில் அவரின் ஆளுமையும் தனித்துவத்தையும் கண்டேன். அவரின் ஒரு சில படங்களை மட்டும் கண்டிருக்கிறேன்.. அவரின் திரைப்படத்தில் விரியும் இயற்கையும், சிதறுகிற ஒளியும் தனித்துவமானவை.. படங்களை காட்சி படுத்துகிற வித்தை அற்புதமானது.. 

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன், மும்பை நகரில் என் மராட்டிய நண்பனுடன், தங்கி இருந்தேன். நான் 'மூன்றாம் பிறை' படத்தின் பாடலான, "கண்ணே கலை மானே " பாடலை ஹம் செய்ய, என் அறை நண்பன், அதை இந்தியில் முடித்து வைத்தான். அந்த தருணம், அவனும் நானும் ஒரே புள்ளியில் சந்தித்த மகிழ்ச்சி. அவனின் மூலம் கண்ணதாசனும், பாலு மகேந்திராவும், இசை ஞானியும் அடைந்த தொலைவை எண்ணி வியந்தேன்... அவன் சொல்லி தான், பாலு மகேந்திராவின் "சாத்மா" படத்தை அறிந்தேன்..

பாலு மகேந்திரா அவர்களை பற்றிய ஆக பெரிய பிம்பத்தை ஏற்படுத்தியவர்கள், இயக்குனர்கள் பாலா மற்றும் சுகா அவர்களே. இவன் தான்  பாலா தொடரில், அவர் துவங்கி வைக்க, சுகா தன பங்குக்கு, மூங்கில் மூச்சிலும், தாயார் சந்நிதி புத்தகத்திலும் விவரித்து இருந்தார்.. 

அவர் இயக்குனர்கள் மகேந்திரன், மணி ரத்னம் இவர்களுக்கு ஒளி பதிவாளராய் அமைந்தது ஆச்சர்யம்.. தன படங்களுக்கு இசை ஞானியின் இசையை பெரிய பலமாய் நம்பியவர். தன்னை என்றென்றும் ஞாபகம் வைக்க கடைசி கடைசியாய், தலைமுறைகள் படத்தில் நடித்து தந்துவிட்டு போயுள்ளார்.. அவரின் முள்ளும் மலரும் ஒளி அமைப்பு, மூன்றாம் பிறை காட்சிகள், ராமன் அப்துல்லா படத்தில் வரும் இடங்கள் கண்களுக்கு விருந்து படைப்பவை.. ஒரு படத்தை எந்த செலவும் இல்லாமல் எளிமையாக முடிக்க அவரால் முடிந்து உள்ளது..

அவரின் ரசனையில் கருப்பு கதா நாயகிகள், அழகு பெறுகிறார்கள்.. தன சொந்த வாழ்க்கையில் பிறர், மூக்கை நுழைப்பதை விரும்பாத மனிதராய், தன் சுய கௌரவத்தை விட்டு விலகாதவராய்   இருந்துள்ளார்..


பாலு மகேந்திரா அவர்களுக்கு  ஊட்டியின் ஒவ்வொரு இடமும் அத்துபடி என அறிந்தேன். ஒவ்வொரு புல்லும், அவரின் கேமரா பார்வையில், அழகுபடுவது ஆச்சர்யம்..அவரின், ஒவ்வொரு படமும் இன்னொரு முகம்.    ஒரு யதார்த்தமான கலைஞனாய் வாழ்ந்த மனிதரை தமிழ் சினிமா  இழந்து விட்டது.. அவர் விட்டு சென்ற அவரின் சீடர்கள், அவரின் இடத்தை நிரப்பட்டும்.. beggers are not choosers - இது சுகா அவர்கள், அவர்களின் நிலை பற்றி வருத்தப்பட்ட போது, பாலு மகேந்திரா சொன்னவை..

அவரின் அற்புதமான படைப்பு திறனுக்கு இனிய பூங்கொத்துகள்..