Saturday, February 12, 2011

கிரிக்கெட் திருவிழா - ஒரு பார்வை


இதோ தொட்டுவிடும் தூரத்தில் கிரிக்கெட் திருவிழா. டீ கடை பெஞ்ச் முதல், வசந்த் அன் கோ ஷோ ரூம்[அட அங்க தானுங்க, பெரிய டீவில கிரிக்கெட் காட்டுறாங்க!  ] வரை கிரிக்கெட் விவாதங்கள் சூடு பிடிக்கும். ஜெயித்து விட்டாலும் சரி, தோற்று விட்டாலும் சரி, ஒரு மூச்சு அத்தனையும் பேசி விட்டால் தான் நம் மனசு ஆறும்..   இந்த பிள்ளையாண்டான் இப்படி விளையாடி இருக்கணும் என அங்கலாய்போம் ..  முடிந்தால் அவனுக்கு, கத்து குட்டி என எண்ணி ஆட்ட நுணுக்கங்களை கற்று தர முன் வருவோம்..


 டாஸ் வென்று பவுலிங் எடுத்து இந்த கேப்டன் கெடுத்தான்?! என பட்டியலை அடுக்கி தள்ளுவோம்... அட! அட! எவ்வளவு நல்ல கேட்ச்.. லட்டு மாதிரி புடிச்சிருக்கணும் அல்ல?( இந்த கிரிக்கெட்டரை,  ஒரு நடை திருப்பதிக்கு அனுப்பினால் என்ன ? அங்க தான் நாள் முழுக்க லட்டு பிடிக்கிராங்களே!  ).. இப்படி கோட்டை விட்டு, நெடுமரம் மாதிரி நிக்கிறான் பாரு? என டோஸ் விடுவோம்..  இந்த பாலை இப்படியா விசுறது.. நான் கூட சரியா வீசுவேன் என சொல்வோம்... ஒரு ரோஷம் இருக்குதா பார்? எதோ வந்தமா வீசி போனோமான்னு நிக்கிறான்.. என வசை பாடுவோம்..

இதை விட நம்மவர்க்கு பெரிய சந்தேகம் வரும். அது எப்படி அவன்( முக்கியமாய் ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்க பவுலர்.. ) வீசுனா மட்டும் தோள்பட்டைக்கு மேல பந்து எகுறி சீறுது? நாம வீசுனா, முழங்கால் வரை கூட எழும்ப மாட்டேங்குது என புலம்பி நம்மை நாமே கேட்டு கொள்வோம்.. அவர்களும்( இந்திய பவுலர் தானுங்க.. ) நாங்க என்ன வெச்சுகிட்டா வஞ்சனை பண்ணுறோம்.. எதோ எங்கனால முடிஞ்சது! இப்படி எங்களை கேட்ட நாங்க என்ன தான் பண்ண முடியும்?   நீங்க எப்பவும் போல "கமான் இந்தியா!", "சக்தே இந்தியா!" சொல்லணும்.. ஆமா!  அப்ப தான் நாங்களும் ஏதோ எங்களால முடிஞ்ச வரை விளம்பரமா நடிச்சு தேர்த்த முடியும் என எண்ணுவார்களோ என்னவோ? 

இந்த முறை, எப்போதும் இல்லாத வகையில்  "டெண்டுல்கருக்காக இந்த உலக கோப்பை" என மகி முதல் மற்றவர் வரை களத்தில் உள்ளனர்.. "தனி நபருக்காக இப்படி எல்லாம் தத்து பித்துன்னு உளறி வைக்க கூடாது..நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பது நினைவில் இருக்க வேண்டும் " என பெரியண்ணன், ஸ்டீவ் வா சொல்லி இருக்கிறார். அவர் சொன்னா, சரியா தான் இருக்கும்..  எப்படியோ, இந்த உலக கோப்பை முடிந்த உடன், மிக பெரிய பட்டாளம் ஓய்வை நோக்கி அடியெடுத்து வைக்கும்..

எனக்கான கிரிக்கெட் மீதான நட்பு, பிரியம், ஈடுபாடு, வெறி ஏறக்குறைய இருபது ஆண்டுகளாய் இருக்கிறது.. இப்போ முன்ன மாதிரி இல்லை( வெறி, வெல்ல கட்டி எல்லாம் தானுங்க.. ).. சூதாட்ட புகார் வந்த பின், தெருவோர கிரிக்கட் ரசிகன் கூட "அட காசு பார்த்துட்டனுகளோ என்னவோ? " என அவ நம்பிக்கை கொண்ட பின் நாம் சுதாகரிக்காமல் விட்டால் எப்படி..   என்னவோ போங்க! காங்கிரசில் தஞ்சம் அடைந்த  அசாரின் ஆட்டம், ஜடேஜாவின் சிக்சர்கள், குரோனியே விட்டு சென்ற கேப்டன் இலக்கணங்கள் நிச்சயம் ஆச்சரியமானவை.. 

என்னை கவர்ந்த உலக கோப்பை நட்சத்திரங்களில், மிக முக்கியமானவர் "மார்டின் குரோ". அவர்கள் நாட்டில் போட்டி நடந்ததை மூலதனமாய் கொண்டு புது உத்திகளை வெளிப்படுத்தி, நியுசிலாந்து அணியை அரை இறுதிவரை 1992 உலக கோப்பையில்  கொண்டு வந்தவர்.  அரை இறுதியில் பாகிஸ்தானுடன் தோற்று வெளியேறினாலும், அந்த உலக கோப்பையை     நியுசிலாந்து உலக கோப்பை என சத்தியமாக சொல்லலாம். அந்த உலக கோப்பையில் அதிக ரன்களை அள்ளிய "க்ரோ", ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு உதாரணம்.. "ஒரு குண்டூசியை எப்படி பயன்படுத்த வேண்டும்" என்பதை க்ரோவிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என அன்று புகழாரம் சூட்ட பட்டார். அந்த அளவு கேப்டன்ஷிப்பை பயன்படுத்தி இருந்தார். முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் "தீபக் படேலை"  வீச வைத்து எதிர் அணிக்கு தண்ணி காட்டினார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. "கிரேட் பாட்சை"  வைத்து, துவக்க ஓவர்களில் அடித்து ஆடி, புது உத்திகளை கொண்டு வந்தார்.

அந்த உலக கோப்பையில், இம்ரான் உலக கோப்பையை வென்றதும், அந்த பணத்தை தன் தாயின் நினைவாய், தான் அமைக்க இருக்கும் கேன்சர் மருத்துவமனைக்கு   செலவு செய்வதை சொன்னதும் நிறைய மனிதர்களின் புருவ உயர்வுக்கு காரணமாய் இருந்தார்..

1999 உலக கோப்பையை நிச்சயம் "தென் ஆப்பிரிக்காவின் "  உலக கோப்பை என சொல்லலாம்.. இந்த உலக கோப்பையில், "லான்ஸ் க்ளுஸ்னர்" ஆடினாரே ஒரு ருத்ர தாண்டவம்.. அது நிச்சயம் ஒரு சிலிர்ப்பான அனுபவம்.. அப்படி ஒரு ப்ளேயரை இதுவரை கண்டதில்லை.. பந்து கையில் இருந்தாலும் சரி, பேட் கையில் இருந்தாலும் சரி! ஒரு கை பார்க்காமல் அவர் விட்டதில்லை..  எதை வீசினாலும்( வேகம், சுழல் தான் ) சரி, பந்து பவுண்டரியில் தான் நிற்கும்.. அவர் ஆடிய 1999 உலக கோப்பை, அரையிறுதி இன்னும் இமை ஓரம் மினுங்குகிறது. அந்த கடைசி ஓவர் அடுத்தடுத்த இரண்டு பந்துகள் பவுண்டரியை தொட்ட தருணம், மனிதர் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் வல்லமை உள்ளவர் என சொன்னது.. அடுத்த பந்துகள், உலக கோப்பையை பறித்தாலும்[ கிப்ஸ் நழுவ விட்டது வேறு விஷயம்..  ], அவரின் ஆட்டம் ஈடு இணை அற்ற  "சாம்பியன்" ஒருவரின் ஆட்டமே..  

ஆஸ்திரேலியா அணியின் இன்றைய எழுச்சிக்கு காரமான ஒரு மனிதரை சொல்லவேண்டும் என்றால் நிறைய பேர் இவரை தயங்காமல், கை காட்டுவார்.. அது ஸ்டீவ் வா. 1994 தருணத்தில், ஆஸ்திரேலிய அணி, மேற்கிந்திய தீவுகளில், டெஸ்ட் தொடரை வென்றது.. இதில் ஸ்டீவ் வா 200 ரன்களை அள்ளி,  முக்கியமான ஆட்டத்தில் வென்றார்.. அந்த ஆட்டமே இவர்களின் இன்றைய எழுச்சி வரை இட்டு வந்திருக்கிறது.. அருமையான மன உறுதியும்,   கள வியூகமும்,  எந்த தருணத்திலும் போட்டியை முன் எடுத்து செல்லும் பக்குவமும்( 1999 அரை இறுதி, அதற்கும் முந்தய லீக் சுற்று நிச்சயம் சாம்பியன் ஆட்டமே! ) இவரின் தனி பாணி.. இவர் உலக கோப்பையை வென்றெடுத்த இரண்டு ஆஸ்திரேலிய அணியில் இருந்திருக்கிறார்..

இவர்களுக்கு சற்றும் குறையாத ஒரு மனிதர் உண்டென்றால் அது "ஆடம் கில்க்ரிஸ்ட்". துறுதுறுப்புக்கும், வேகத்துக்கும் இவரை போல வருமா என யாரும் சொல்வர்.. அப்படி ஒரு ஆட்டக்காரர். இவர் ஆடிய மூன்று உலக கோப்பையில், ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தட்டி சென்றுள்ளது.. பாண்டிங் அண்ணனுக்கு, அமைந்த வரமே அங்கே இருந்த தூண்கள் தான்.. "மெக்ராத், வார்னே!, கில்க்ரிஸ்ட், ஹய்டன்! ". அணி எந்த நிலையில் இருந்தாலும், எந்த இக்கட்டான போட்டி என்றாலும், எதிர் அணி பவுலரை நிலை குலைய வைக்கும் திறமை "கில்லிக்கு"  உண்டு..  அந்த வகையில் அவர் ஆடி கொடுத்த 2007 உலக கோப்பை இறுதி போட்டியும், அவர் அடித்து நொறுக்கிய சதமும் நிச்சயம் சாதனை மயில் கல்லே..     

இந்த வரிசைகளில் முதல் உலக கோப்பையில் சாதித்த "கிளைவ் லாயிட்", இரண்டாவது உலக கோப்பையில் அற்புதமாக ஆடிய "விவ் ரிச்சர்ட்ஸ்", மூன்றாவது உலக கோப்பையை வென்று தந்த "கபில்", ஆறாவது உலக கோப்பையை ரசனை ஆக்கிய  "ஜெயா சூர்யா! ", பல தருணங்களில் அசத்திய மெக்ராத், வார்னே,  இவர்கள் முக்கியமானவர்கள்.

இந்த உலக கோப்பையை பொறுத்த வரையில், என் பார்வையில், இந்த அணிகள் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வல்லவையாய் இருக்கின்றன.. "ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, இந்தியா?! " அடி பட்டு எழுந்து வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி நிச்சயம் பழைய பலத்துடன் இருக்கிறது.. அவர்களின் அசத்தல் ஆட்டம் இந்த உலக கோப்பையிலும் தொடரும்.. அவர்கள் விடாமல் தொடரும்( 1999 உலக கோப்பை முதல்  எந்த போட்டியிலும் தோற்காத பயணம் )  வெற்றி, இன்னமும் தொடர்கிறது. ஒரு நாள் உலக கோப்பையில், நாம் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்கிறோம்.. நாம் ஆஸ்திரேலியாவிடம் வாங்கும் அடியை யாராவது நினைத்தது உண்டா? 1987 க்கு பின் அடுத்தடுத்து நாம் அடி வாங்கியே வருகிறோம்..

சரி இந்த உலக கோப்பையில் இந்திய அணி எப்படி? மட்டயாளர்களில், இரண்டு மூன்று பேரே தற்போது முழு பார்மில் உள்ளனர்( ஷேவாக், பதான், கொஹ்லி ).. நம் ஷாட் பிட்ச், பலவீனத்தையே, பல அணிகள் பலமாய் பிடித்து கொண்டு விட்டன.. எதிர் அணியை அசத்தலாய் வீழ்த்த கூடிய பந்து வீச்சாளர்கள், மிரட்ட கூடிய வேக பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இல்லை.. நம், பலமான சுழல் கூட்டணி சற்றே சுணக்கத்தில்.. 'பாஜி'  நல்லா  தான் மட்டை பிடிக்கிறார்? ஆனா விக்கட்?( ரொம்ப கஷ்டமுங்க... ) . கடந்த உலக கோப்பையை வென்று வந்த அணிகளையும், நம் பலத்தையும் சற்றே தராசில் நிறுத்துங்கள்.. நாம் நிச்சயம் கோட்டை தாண்டவில்லை.      

எந்த ஆட்டத்திலும் இரண்டு ஆட்டகாரர்களின் எழுச்சி, மற்றவர்களின் துணை ஆட்டம், அணியை கரை சேர்க்க கூடும்.. பந்தை சரியாய் தடுக்கும் திறன் இருந்தால், நிச்சயம் அது அணிக்கு அருமையான பலம்.. அப்படி இருக்க நம்மிடம் ஒரு சிலரே தேற கூடியவர்களாய் உள்ளனர்.. ம்ம் .. பார்போம்.. அரை இறுதி வரை அணி வந்தால் அது நிச்சயம் பாராட்ட கூடியதே.. மும்பை வான்கடே மைதானமும், ஏப்ரல் இரண்டும் நிறைய விஷயங்களை சொல்ல கூடும்.. இதோ எதிர்வரும், கிரிக்கெட் திருவிழாவை ஆரவாரமாய் வரவேற்போம். இந்திய அணி சாதித்து காட்ட வாழ்த்துக்கள்:)
.
.           

Sunday, February 6, 2011

வண்ணதாசன் அவர்களின் "அகம் புறம் "


வண்ணதாசன் அவர்களின் "அகம் புறம் " தொகுப்பை மீண்டும் படிக்க நேர்ந்தது. ஒரு தித்திப்பான அனுபவமாய் அது இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் விகடனில் வாசித்தது என்றாலும், மீண்டும் வாசிக்கும் பொழுது தனித்துவமான அழகு அதில் இழையோடி இருந்தது. அவரின் கவிதைகளும், எழுத்தும் அப்படி இருப்பது தான் இயல்பு போலும். வாசித்த நாட்களில் அந்த தொடர் விதைத்த அத்துணை நிகழ்வுகளோடும் நானும் பயணித்தேன்.. நதிக்கரையில், அதற்கே உரித்தான நகர்வோடு பயணித்த உணர்வு   அதன் நகர்வில், அதன் வீச்சில்.. வாழ்வின் எல்லா புள்ளிகளையும் ஒரு தொடர்  தொட்டுவர முடியும் என நிரூபிக்கும் ஒரு  புத்தகம்;

அவரின் தொடரோடு பயணிப்பது ஒரு சுகானுபவம். இந்த தொடர் விகடனில் ஆரம்பிக்கும் முன், அவரோடு ஒரு பேட்டி கண்டு பிரசுரித்து இருந்தனர் விகடன் குழுமத்தினர்.. . "உங்கள் கனவில் தாமிரபரணியும், கல் யானைகளும் தற்பொழுது எல்லாம் வருவதில்லையா" என கேட்டிருந்தனர்.  அவரும் அப்படி கனவு வருவதில்லை என சொல்லி இருந்தார். பின்னர் வந்த நாட்களில், இதே கேள்விக்கு விடையாய்,  தொலைபேசியில் அழைத்திருந்த அவர் " சமீபத்தில் அந்த கனவு மீண்டும் வந்ததை மகிழ்வோடு சொல்லியதாய்" அந்த பேட்டி சென்றது.

இயற்கையோடும், அதன் அழகோடும் அப்படியே பயணிப்பது அவரின் எழுத்துக்கள்.   பி சி ஸ்ரீராம், பாலு மகேந்திரா, ரவி கே. சந்திரன், சந்தோஷ் சிவன் - இவர்களின் கேமரா கண்களை விட வண்ணதாசன் அவர்களின் பேனா படம் பிடித்து, எழுத்துக்கு எடுத்து வந்திருப்பவை, பறித்து வந்திருக்கும் மனோரஞ்சிதங்கள் மிக மிக அதிகம்.

சிந்தாமல், சிதறாமல், வாழ்வை அதன் இருளோடும், ஒளியோடும்  இரு கைகளுக்குள் பொத்தி எடுத்து காட்டும் அற்புத சக்தி அவரின் எழுத்துக்கள். இலையில் சிதறும் மழை துளியாயினும், காற்றில் கரகரத்து உதிரும் ஒற்றை சருகாயினும், புல்லாங்குழல் வழியே நழுவும் ஆழ்ந்த இசைபோலும்    வண்ணதாசனின் வரிகளில் மறு உயிர்ப்பு பெறுகின்றன. கரைந்தோடும் மனம்.. வளர்ந்து வளர்ந்து சிந்தை தொடும் சொல் நயம்.. அவரின் கட்டுரைகள் எங்கெங்கும்.

அவர் உவமையாய் சொல்லி சென்ற மனோ ரஞ்சித  பூ போல்,  அவரின் எழுத்து அத்தனை  வாசனை கொண்டதே. கன்ன கதுப்புகளில் படரும் இளம் புன்னகையோடு,  எண்ணங்களில் உலவுவது சுகமானதே. பக்கத்திற்கு பக்கம், அர்த்தம் சேர்க்கும் ஓவியங்கள், படங்கள்(அந்த சிவப்பு மிளகாய், அந்த சலூன் கடை, வீதியில் சிரிக்கும் பெண்கள், குழந்தைகளோடு ஓடிவரும் ஆட்டுக்குட்டி, அந்த  கிளிகள்,அந்த  மீன்கள், மனநிலை தவறிய மனிதர்கள்,  மர பொந்தில் இருந்து எட்டி பார்க்கும் சிறு குருவிகள் ), தொடரை அற்புதமாக்க போதுமானதாய் இருந்தது. நம் வீதியில் சந்திக்கும் அத்தனை மனிதர்களையும் எழுத்தில் கொண்டுவர இயலுமா? வண்ணதாசன் சாதித்து உள்ளார்;

அந்த தொடரோடு அவர் கண்ட அக உலகம் , புற உலகம் அற்புதமாய் விரிந்து காட்சி தந்தது. விகடனில் வெளி வந்த முதல் கட்டுரை தொடரே, அவரின் வீச்சை பிரதி பலித்தது. அந்த ஊஞ்சலில் நாங்களும் சக தோழராய் சலிக்க, சலிக்க ஆடினோம்.. தொடரில் வரும் பெயர்கள் - பிரம்ம நாயகம், பரமன், ஜான்சி, அருணா இவை எல்லாம் அற்புத அர்த்தம் தருபவை;

அட அந்த பள்ளி  வகுப்பறை, ஜான்சன் சார் - என பள்ளி நினைவுகளை மீண்டும் கண் முன் கொண்டுவரும்  பக்கங்கள்;என்ன ஒரு பசுமையான நினைவுகள் உங்களுக்கு;


" எத்தனையோ இரவுகளில் அசையாமல் தொங்குகிற அந்த ஊஞ்சல் சங்கிலிகளும் ஆள் அற்ற  பலகைகளும் என்னவோ செய்யும்... என்னவோ சொல்லும்"


அந்த தொடர் நகர்ந்த நாட்களில் தான் "லா. ச. ராமாமிர்தத்தின்" மறைவும் சுஜாதா அவர்களின் விடை பெற்ற நிகழ்வும், நடந்தது.. இதோ, அவரின் வார்த்தைகளில்..
"லா ச ரா வின் ஞாபகத்துடன் "அபிதா"வை  படிக்க வேண்டும் போல இருந்தது. புத்தகத்தை காணோம். யாராவது வாங்கி போயிருப்பார்கள். நல்ல புத்தகம் ஆறு மாதிரி. நகந்து கொண்டே இருக்கும். என்னிடம் இருந்து நகந்து போனவை போல, இங்கே நகர்ந்து வந்திருப்பவற்றுக்கும் குறைவில்லை. "ஜமிலா " என் புத்தக அலமாரியில் இருக்க என்னுடைய "அபிதா" வேறு யாரிடமோ இருப்பாள், அல்லது எங்கும் இருப்பாள். இப்படி சொற்களின் பகடை உருட்டி எத்தனை சதுரங்கம்! சொற்களின் அகல் ஏற்றி எத்தனை திருக்கார்த்திகை!    "

"ஒவ்வொரு இலை உதிரும் போதும், அப்பா அது இருந்த மரத்தையும் உதிர்ந்த விதத்தையும் பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறார்.. லா.  ச. ரா. ஒரு இலை, மாமா ஒரு இலை, வேலாண்டி பெரியப்பா ஒரு இலை, சமீபத்தில் சுஜாதா ஒரு இலை.. "

வண்ணதாசனின் சிறுவயதில் அவருக்கே இருந்த கேள்விகள்.... நம்முடைய வாழ்விலும் இப்படி தானே. ..

"சங்கர்லால் என்பது தமிழ்வாணன் அவர்களா, வேறு யாராவதா? ஓவியர் சில்பி எப்படி அச்சு அசலாக வரைந்து விடுகிறார்? எப்படி இவ்வளவு சின்ன வயதில், ரயில்வே பிடர் ரோடு கூட்டத்தில், நா காமராசனும், காளிமுத்துவும் இவ்வளவு அருமையாக பேசுகிறார்கள்.. ட்ராபால்கர் சதுக்கத்தில் மட்டும் ஏன் அவ்வளவு புறாக்கள்? சப்போட்டா பழ விதைக்கு, கருப்பு எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது?   "

சிறுவர்களின் உலகத்து பறவைகள் தொலையும; இறகுகள் ஒருபோதும்,  தொலையாது;

"கண்ணுக்கு தெரிபவற்றை  காட்டிலும், மண்ணுக்குள் புதையுண்டு போன கல் ரதங்கள்  தான் பார்க்கப்பட வேண்டியவை.. "

"எல்லா முகங்களையும் நான் ஏற்று கொள்கிறேன். என் முகத்தையும் அவர்கள் ஏற்று கொள்ள கூடும். நிராகரிப்பதற்காக அல்ல, ஏற்று கொள்வதற்காகவே இந்த வாழ்வு, இந்த மனிதர்கள்..  இந்த நதி. இந்த படி துறை. இந்த கல்மண்டபம்..

இந்த நதி ஓடும் பொது, இந்த படித்துறையில் குளிக்கிற நேரத்தில், இந்த கல்மண்டபத்தில்,   அமர்ந்து இருக்கையில், நான் அழகாக இருக்கிறேன். உள்ளும் வெளியும் அழகு. உள் தான் வெளி. அகம் தான் புறம். நான் தான் நீங்கள்..   "

அவர்களுக்குள் அப்படி ஒரு நல்ல  நட்பு;நட்பில் என்ன ; நட்பே நல்லது தானே;

இங்கே சொடுக்கவும்.. அவரின் அற்புத உலகில் சில முத்துக்கள்..
 உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?
அபிதா

இந்த தொடர் முடிந்த பின், வண்ணதாசனுக்கு நன்றி சொல்லி, என் ஆழ்ந்த நேசிப்பை, வாசிப்பை அர்த்தப்படுத்தி கொடுத்தமைக்காய், ஒரு  கடிதம் எழுத வேண்டும் என்னும் எண்ணம் என்னுள் முளைத்தது. அது தான் இப்படி பதிவை உருமாறி உள்ளதோ?

 தொடரின் முதல்  பக்கத்தில், புத்தகத்தை அபிதாவுக்கு சமர்ப்பித்திருந்தார்; மீண்டும் அந்த பக்கத்தை புரட்டும் தருணங்கள், கண்கள் நீர் திரைக்கட்டும்;

.
.

தாய்மைக்கு வணக்கம் - ஒரு சிறு பகிர்தல்

தாய்மைக்கு வணக்கம் - ஒரு சிறு பகிர்தல்
                   கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்த இந்த விழா நிகழ்வை, எதேச்சையாக   காண நேர்ந்தது. டி. டி.  ரங்கராஜனின் இந்த பேச்சு உண்மையில் நெஞ்சை தொட்டது. இதோ சிறு பகிர்வு.. ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணம்..




இதோ ரஹ்மானின் வார்த்தையில்