Friday, December 11, 2009

பதின்மூன்று வருடத்திற்கு பின் ஒரு ஜிலீர் சந்திப்பு

பதின்மூன்று வருடத்திற்கு பின் எனது பள்ளி ஆசிரியரை சமீபத்தில் சந்தித்து அளவளாவி மகிழும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பள்ளி நாட்கள் மனதில் என்றென்றும் பசுமையாக நினைவில் நிற்கின்றன. அன்றைய சீருடை, தினம் தோறும் தொடரும் தேசிய கீத ஒத்திகை, பொரி, கடலை  வாங்கி சுவைக்கும் மாலை நேரம், தனி வகுப்புகள், அந்த நாள் நட்பு வட்டம், பேருந்து காத்திருப்பு, மழை நாட்கள், மாணவர், ஆசிரியருக்கான பிரத்தியேக பெயர்கள் என எவ்வளவு விஷயங்கள் ஞாபகங்களில்..

எனது ஆசிரியரின் நடை பாவனையை வைத்து அவரை இனம் கண்டு கொண்டேன். அவரிடம் என்னை அறிமுகம் செய்வித்து, அவரின் நலம் விசாரித்தேன். அன்புடன் பதில் சொன்னவர், அந்த நாள்களை நினைவுக்கு கொணர்ந்தார். என்னுடன் படித்த சக மாணவர்களை நான் ஒப்பித்தேன். இன்று அவர், தான் பணி ஒய்வு பெற்று   விட்டதாகவும், அவரின் மகன்கள், மனைவி என குடும்ப உறுப்பினர்களை, அவர்களின் இன்றைய நிலை பற்றி, தற்போதைய அவரது பணி பற்றி சொன்னார். 

மற்ற ஆசிரியர்களை விட இவர் எங்களுக்கு மிக மிக முக்கியம்.ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியர்;  பத்தாம் வகுப்பில், ஆங்கில ஆசிரியர். இவர்  நாள்தோறும் பள்ளியை விட்டு கிளம்பும் தருணத்தில், யாரோ ஒரு விடுதி  மாணவரை அழைத்து,  அவனின் இன்றைய படிப்பு, பாடத்தை எப்படி புரிந்து கொள்ளுவது, அடுத்த தேர்வில் சரி செய்யப்பட வேண்டியன என விளக்கி செல்வார். அதே போல் வகுப்பில், பல தருணங்களில் அவரின் கற்பனை உலகும், அதிலிருந்து கட்டாயம் நாரதரும் எட்டி பார்ப்பார்கள். ஓய்வு நேரம், பேருந்துக்கு காத்திருக்கும் தருணத்தில், பாடத்தை,  செய்யுளை, எப்படி ரீகால் செய்வது என சொல்லி தருவார். மழை நாட்கள், இரவு விளக்கு இல்லாத நாட்களுக்கு மெழுகுவர்த்தி வாங்கியாகி விட்டதா என அக்கறையோடு வினவுவார்.
( எனக்கு தெரிந்து எந்த ஆசிரியரும் இது பற்றியெல்லாம் விசாரிக்கிரார்களா?  )

பள்ளியில் நடக்கும் எல்லா கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அவர் பொறுப்பு. சமயங்களில் போடப்படும் மேடை நாடகம், வானொலி நிகழ்ச்சிகள்[ குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் ] என எல்லாவற்றையும் அவர் முன் எடுத்து செல்வார். எப்பொழுதும் ஒப்பனைக்கு தேவையான ஒட்டு தாடி, மீசை கைவசம் இருக்கும்.  அவர் ஒரு தேர்ந்த இசை கலைஞர். புல்லாங்குழல் அவரின் விருப்பத்திற்கு உரியதாய் இருந்தது. அதை போன்றே அவர், ஓர்  அரிய கார்டூனிஸ்ட். இரண்டு கைகளாலும், பலகையில், நிமிடங்களில், கார்ட்டூன்  வரைவார். தினமும் அவரது கார்டூன் ஒன்று அறிவிப்பு பலகையை அலங்கரிக்கும்.நல்ல பாடகர் நல்லதொரு கவிஞர் அவர். பல நாட்களில் அவரது கவிதைகள், இசையோடு வகுப்பறைகளில் அரங்கேற்றத்திற்கு உள்ளாகும். அது புத்தாண்டாக இருக்கலாம், அது சுதந்தர தினத்துக்கு முந்தய நாள், குடியரசு தினத்துக்கு முந்தய நாள் இப்படி எதுவாகினும் இருக்கலாம்.    . மிக மிக ஆச்சர்ய நிமிடங்கள் அவை..

நான் குறிப்பிடும் விஷயம் பத்தாம் வகுப்பில் நடந்தவை. அவர் ஆங்கில இலக்கணம் எடுத்து செல்வார். முதல் மாத தேர்வுக்கு முன் வகுப்பில் ஒரு அடிப்படை தேர்வை நடத்தினார். இருபத்தைந்து வினாக்கள். பதில் எழுதியபின், எங்களின் நோட்டு புத்தகம் இடம் வலமாக பயணிக்கும். நமது பதில்களை இன்னொரு மாணவன் திருத்துவான். நமக்கு வேறொருவரது நோட்டு வந்து சேரும். அப்படி இருக்க, ஒவ்வொருவர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் எழுந்து நிற்க வேண்டும். நான் வாங்கிய மதிப்பெண் மூன்று. என்னையும் சேர்த்து ஐந்து மதிப்பெண்ணுக்கும்  குறைவாக  பெற்றவர் மூன்று பேர். ம்ம்.. எழுந்திரி என்றார். சூதில் அனைத்தையும் இழந்த பஞ்சபாண்டவர் போல், நாங்கள் நிராயுதபாணியாய் தலை தொக்கி நின்றோம்.

அதன் பின், சரி இனிமேல் நீங்கள் வகுப்பில் முன்னாள் வந்து அமர வேண்டும் என சொல்லி சென்றார். எங்களுக்கு தரப்பட்ட அடைமொழி "Future Bright Boys". அதன் பின், தினமும் காலையில் எங்கே அவர்கள் எனும் குரல் கேட்கும். நாங்களும் அகத்தி கீரையை அசைபோட்டபடியே முன் செல்லும் அஸ்வமேத யாக குதிரை போல் முன்னே சென்று தரையில் அமர்வோம். அதற்கு பின் காலாண்டு தேர்வு வந்தது,  காலாண்டு தேர்வில், ஐம்பது மதிப்பெண் எடுத்து இருந்தேன். அவரது சொல்படி ஐம்பது மதிப்பெண் எடுத்தால் எளிய பரிசு உண்டு. மதிப்பெண் வாசித்த தருணத்தில்,  அருகில் இருந்த நண்பன் வசந்த், எளிய பரிசு வாங்கிட்டே என்றான்.. என்னையும் சேர்த்து நான்கு பேர் எளிய பரிசு[ பென்சில் தான் ] பெற்றோம். உண்மையில் அரிதான, உவப்பான தருணம் அது.

அடுத்து வரும் நாட்களில், பள்ளியில் பேச்சு, பாட்டு, கட்டுரை போட்டிகள் நடக்கும். மாலையில் பள்ளியே கூடி அமர்ந்திருக்கும். மைக்கில்,  பேசவும், பாடவும் மாணவர்கள் ஒவ்வொருவராய் வந்து செல்வர். பாட்டு போட்டியில் அந்த ஆசிரியர் தான் நடுவர். அப்படி இருக்க ஒரு மாணவன், "தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு, அங்கே துள்ளி குதிக்குது கன்று குட்டி.. " எனும் தேசியகவி விநாயகம் பாடலை பாடினான். இரண்டு வரிகளுக்கு மேல் பாடல் வரவில்லை. அருகே இருந்த ஆசிரியர், " சொட்டு நீலம் டோய்! ரீகல் சொட்டு நீலம் டோய்.. என்ன வெண்மையோ! ஆஹா என்ன வெண்மையோ! சொட்டு நீலம் என்று கேட்காதீர்கள்! ரீகல் சொட்டு நீலம் என்று கேட்டு வாங்குங்கள்! " என தொடர்ந்தார். பாடிய பையன் தான் பாவம்! விதிர்விதிர்த்து போய்விட்டான்!

அதன் பின்னான வகுப்பு தருணங்களில், " இங்க பாரடா இவனை.. " என ஆசிரியரின் கலவர குரல் எழும். கட்டுரை நோட்டை சரி செய்கிறேன் என சொல்லி, ரப்பரால், பிளேடால் முடிந்தவரை சுரண்டி எழுதியதை திருத்தி இருப்போம். நடுவில் முடிந்தால், நோட்டு கிழிபட்டு ஆசிரியர் இன்னொரு பக்கத்தில் இருந்து பரிதாபமாய் பார்ப்பார். பல சமயங்களில், என்னடா எழுதி இருக்கே, சொல்லி தொலையேண்டா என ஒரு சிலரை கேட்பார். கட்டுரை காண்பிக்கும் அந்த மாணவனும் தலை குனிந்த படியே, அது ஒரு சிலரால் மட்டும் முடிந்த தேவ ரகசியம் என சொல்லி கொள்வான். 

ஆனால் வருடம் முடிந்த அந்த நாளில், "பாடித்திரிந்த பறவைகளே.. பாசம் நிறைந்த நினைவுகளே, பழகி களித்த தோழர்களே! நாம் பறந்து செல்கின்றோம்...   " என அவரோடு சேர்ந்து நாங்கள் பாடிய பாடல் இன்னும் எங்கள் காதில் ரீங்கரிக்கிறது.

.  
.

2 comments:

அன்புடன் அருணா said...

அழகா பகிர்ந்திருக்கிறீர்கள்.

THIRUMALAI said...

அன்புடன் அருணா தங்கள் வருகைக்கும் பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றி..

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்