Sunday, July 26, 2009

அம்மா சொன்ன எட்டு பொய்கள்


வாழ்வின் எல்லா நாட்களிலும் போற்றுதலுக்கு உரியவர்கள் பெற்றோர். அதில் தாய் பெரும் முக்கியத்துவம் உலகில் எதற்கும் இல்லை. ஒரு மனிதன் தாழ்ந்தாலும், உயர்ந்தாலும் தாயின் வளர்ப்பையும், வழிகாட்டுதலையும் உலகம் முன் வைக்கிறது. குடி போதையில் தள்ளாடி, குழப்பம் செய்பவரையும், வழிக்கு கொணர அவனை பெற்ற தாயையே அணுகுகிறோம். அவளின் ஒற்றை வார்த்தை, இந்த மனிதனை நிலை கொள்ள செய்திடும் என்பது நம்பிக்கை.

தொடரும் இந்த கதை என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது., இதுவே பின் ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. இந்த கதை ஒரு மனிதனின் உணர்வாகவே சொல்லப்பட்டு உள்ளது. தன அன்னைக்கும் தனக்குமான நிகழ்வுகளை இங்கே சொல்லி சென்றுள்ளார். இது முற்றிலும் அவரவர்களை சார்ந்த கதை போல், அவரவர் வாழ்வு போல் விரிகிறது.
இனி அந்த மனிதனின் வார்த்தைகளில்..

1. இந்த கதை நான் குழந்தையாய் இருக்கும் பொழுது துவங்குகிறது. நான் ஒரு ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் பிறந்தேன். நிறைய தருணங்களில் உண்ணும் உணவுக்கு கூட சிரமப்பட வேண்டி இருந்தது. உணவு உண்ணும் பொழுது பல நாட்களில், என் தாய் தனக்கான உணவை தந்து வந்துள்ளார். அப்படி உணவை என் தட்டுக்கு மாற்றும் பொழுது, சொல்லும் வார்த்தை.. "இந்த உணவை எடுத்துக்கொள்; எனக்கு பசி இல்லை" என்பதே. இது எனது தாயின் முதல் பொய்.

2. நான் வளரும் பருவத்தில், என்றும் முயற்சியுடைய எனது தாய், தன் ஓய்வு நேரத்தில், வீட்டுக்கு அருகில் செல்லும் ஆற்றில் மீன் பிடிப்பாள். அவள் பிடிக்கும் மீனை கொண்டு எனக்கு சத்துள்ள ஆகாரத்தை ஓரளவுக்கு கொடுக்க இயலும் என்பது அவள் நம்பிக்கை. சமைத்த மீன்களை எனக்கு பரிமாறுவாள்; அந்த நிலையில் நான் உண்டு வைக்கும் மீனின் மிச்ச துண்டுகளை அவள் எடுத்து உட்கொள்வாள்; குற்ற உணர்ச்சி தோன்ற என்னிடம் இருந்த மீனை எடுத்து உண்ண அவளிடன் நீட்டினேன். நான் பொதுவாக மீன் உண்ணுதலை விரும்ப மாட்டேன் என மறுதலித்த அவள் என்னையே உண்டுகொள்ள சொன்னார். அது அவர் உதிர்த்த இரண்டாவது பொய்.

3. நான் நடுநிலை பள்ளியில் படித்த நாளில் எனக்கு படிக்க ஆகும் செலவை சமாளிக்க உபயோகித்த தீ பெட்டிகளை ஒட்டி தரும் வேலையே எடுத்து கொண்டார். இது புதிய செலவுகளை சமாளிக்க உதவியாய் இருந்தது. பனி காலங்களில், நள்ளிரவில் சில தருணங்களில் எனக்கு விழிப்பு வரும். அந்த தருணத்திலும், ஒரு சிறு மெழுகுவர்த்தியின் துணையுடன் தீ பெட்டிகளை ஓட்டும் பணியை கர்ம சிரத்தையுடன் செய்வாள். அதிர்ச்சி அடைந்த நான், அம்மா இப்பொழுது நீ உறங்க செல்; நாளை உனக்கு வேலை இருக்கிறது; அதிக நேரம் கண் விழிக்காதே என்பேன். அந்த நிலையிலும், உனக்கே உரித்தான சிரிப்புடன், "நீ தூங்கு; நான் ஒன்றும் களைப்பாய் உணரவில்லை" என்பாய் - அது நீ உதிர்த்த மூன்றாவது பொய்.

4. நான் எனது பள்ளி இறுதி தேர்வுகளை எதிர்கொண்ட நாட்களில் என்னுடன் துணையாய் வருதல் பொருட்டு, என் தாய் தன் வேலையில் இருந்து விடுப்பு எடுத்தார். தேர்வு தருணத்தில், பகல் பொழுதில், தேர்வு மையத்துக்கு வெளியே வெயிலில் காத்திருப்பார். தேர்வு முடிந்து, கடைசி மணி அடித்த உடன் என்னை வரவேற்று தன் கையால் தயாரித்து இருந்த தேநீரை கொடுப்பார். அந்த அடர்த்தியான தேநீர் கூட என் தாயின் அளவுகடந்த அன்புக்கு ஈடாக இல்லை. வேர்வை ஆறில் குளித்தபடி நிற்கும் என் அம்மாவை கண்ட நான் எனது ஒரு கோப்பை தேநீரை கொடுத்து அவளையும் அருந்த சொன்னேன். அதற்கு அவர் "நீ அருந்து; நான் தாகமாய் உணரவில்லை" என்றார். அது எனது தாய் சொன்ன நான்காவது பொய்.

5. நோய்வாய்பட்ட என் தந்தை இறந்த பின், எனது தாய் என்னை, குடும்பத்தை காக்கும் முழு பொறுப்பையும் எடுத்து கொண்டார். எங்கள் வாழ்வு அந்த நிலையில் நிறைய சிக்கல் உடையதாய் மாறியது. எங்கள் நிலையை கண்டு மனமிரங்கிய ஒரு அன்பர், எங்களுக்காக சிறிதும் பெரிதுமான பல நல்ல உதவிகளை செய்திட்டார். எங்களின் போதாத நிலையை அறிந்து வருந்திய எங்களின் வீட்டுக்கு அருகே வசிப்போர் எனது தாயிடத்தில், இன்னொரு திருமணம் செய்து கொள்ள யோசனை தந்தனர். அதற்கு என் தாய், "நான் அன்பை எதிர்பார்க்கவில்லை" என் பதில் சொன்னார். அது எனது தாயின் ஐந்தாவது பொய்.

6. நான் படிப்பை முடித்து வேலையும் கிடைத்த தருணம், என் தாய் ஓய்வு கொள்ள வேண்டும் என எண்ணினேன். அந்த நிலையில் எனது கருத்தை அவர் ஏற்றுகொள்ளவில்லை, மாறாக ஒவ்வொரு நாளும் தனது தேவைகளுக்காக காய்கறிகளை விற்று அதில் வரும்படி ஈட்டி வந்தார். அந்த தருணத்தில், இன்னொரு நகரத்தில் வசித்த நான், அவரின் அன்றாட தேவைகளுக்காக பணம் அனுப்பி வந்தேன். அந்த நிலையிலும், உறுதியாக அந்த பணத்தை வாங்க மறுத்து வந்தார். சில சமயம், பணத்தை எனக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அவர் சொல்லும் வார்த்தை " எனக்கு போதுமான பணம் உள்ளது" என்பதே . அது அவரின் ஆறாவது பொய்.

7. கல்லூரியில் இளங்கலை முடித்த நான், அதன் பின் முதுகலை பட்ட படிப்பை தொடர்ந்தேன். அமெரிக்க பல்கலை கழகம் அளித்த உதவி தொகையில் எனது படிப்பு சென்று கொண்டிருந்தது. இறுதியில் ஒரு நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் பணியில் அமர்ந்தேன். அந்த நிலையில் என் தாயை அமெரிக்க வாழ்வை அறிமுகப்படுத்தவும், நல்ல நிலையில் வைத்து கொள்ளவும் விரும்பினேன். அந்த நிலையில் "அது எனக்கு பழக்க படாதது " என மறுதலித்தார். அது எனது தாயின் எழாவது பொய்.

8. முதுமையை தொட்டிருந்த எனது தாய் புற்று நோயால் பீடிக்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். கடல் கடந்த இருந்த நான் புறப்பட்டு வந்து எனது தாயை சந்தித்தேன். அறுவை சிகிச்சை முடிந்து, நிறைய பலவீனத்துடன் படுக்கையில் படுத்திருந்தார். நிறைய முதுமை தோற்றம் பெற்றிருந்த தாய், என்னை கண்டு தன் நோயை மறைத்தபடி புன்முறுவல் பூத்தார். நோய் இருந்த பிடியில் அவரால் முடியவில்லை. முகம் கடின நிலையில் இருந்தது. நோய் அவரை எந்த அளவு பாதித்து உள்ளது என எனக்கு புரிந்தது. மிகவும் மெலிந்து போய் இருந்த என் தாயை கண்டு நான் கண்ணீர் விட்டேன். ஆனால் என் தாய் தன் பலத்தை எல்லாம் திரட்டியபடி "அழாதே மகனே! நான் வலியை உணரவில்லை" என்றார். அது எனது தாயின் எட்டாவது பொய்.
இதை சொன்ன எனது தாய் இறுதியாக தன் கண்களை மூடினார்.
.
.
.

மறைந்து போன விஷயங்கள்/ கடந்து போன நாட்கள்


பால்யத்திலும், பதின் வயதுகளிலும் ஆடி மாதம் நிறைய குதூகலத்துடன் கடந்து போயிருக்கிறது. அதிலும் ஆடி பதினெட்டாம் நாள் சிறப்பானது. நாங்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட ஆடி மாதத்தையும், ஆடி பதினெட்டையும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். ஊரை விட்டு நகரத்தில், படிக்கவும், பணிபுரியவும் வந்த பின், உள்ளூர் திருவிழாக்கள், இல்லத்தில் நடைமுறையில் இருந்த விழாக்கள் யாவும் மறந்து வருகின்றன. வீட்டில் உள்ளவர்கள் சொன்னால் மட்டுமே, அட ஆமாம்! என ஞாபகம் வருகிறது.

பள்ளி நாட்களில், ஆடி மாதம் துவங்கிய உடன், ஒரு சில விஷயங்கள் உடனே நினைவில் வந்து விழும். முதல் விஷயம் - பட்டம். இன்று ஊர் முழுக்க காற்றாலைகள் வந்து விட்டன. ஆனால் நாங்கள் அன்று பெரிதும் விரும்பியதும், ஆச்சர்யம் கொண்டதும் - பட்டங்கள் [காற்றாடிகள்] தான். சுழன்றடிக்கும் ஆடி காற்று அதற்கு தூது விடும்.. ஆடி மாதத்தில் முதல் தீர்மானம், ஒவ்வொரு வருடமும் கூட; இந்த வருடம் எப்படியாவது பட்டம் பறக்க விட வேண்டும் என்பதே. ஆனால் எங்கள் அதிர்ஷ்டம், இறுதி வரை பட்டம் சரியாக கட்ட வரவில்லை.

எதிர்ப்படும் எல்லா மனிதர்களையும் எப்படியாவது பட்டம் கட்டி தர கேட்டு வந்துள்ளோம். அவர்களும் ஆகட்டும் பார்க்கலாம் என சொல்லி வந்துள்ளனர். அதே நாட்களில் சிறுவர்கள், காகிதம், ஈர் குச்சிகள், அடர் நூல், பட்டம் ஒட்டிட மைதா மாவு - [அட அன்று முதல் இன்று வரை அதை அடிக்க ஆள் இல்லை] என திரிவார்கள். அந்த நாட்களில் பட்டம் கட்ட படுவதை நிறைய ஆவலோடு கண்டு உள்ளோம் [ கப்பல் கட்டுவதை விட இது எங்களுக்கு ஆச்சர்யம் நிறைந்தது. ]. ஆனால் இறுதி வரை எங்களுக்கு அந்த கம்ப சூத்திரம் வரவே இல்லை.

அன்று எங்கள் கிராமத்தில், ஆடி முதலில் இருந்து ஆடி இறுதி வரை தலையை உயர்த்தினால் , நிறைய பட்டங்கள் வானில் பறப்பதை காணலாம் . ஊரின் எந்த இடத்திலிருந்தும் பட்டங்கள் காண கிடைக்கும். மீன் பட்டம் , சதுர பட்டம் என நிறைய பெயர்களில், வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு வடிவில்.. குறைந்தது ஒரு பட்டத்திற்கு இரு சிறுவர்கள் இருப்பார்கள். பட்டம் கீழே சரிந்தால், அதன் வால் பகுதியை சரி செய்து தூக்கி விட ஒரு சிறுவன், கயிற்றை பிடிக்க ஒரு சிறுவன் என இந்த நிகழ்வுக்கு நிச்சயமாய் இருவர் வேண்டும் . 'விர்ர்' என வீசும் காற்றில் நிறைய ரீங்காரம் இட்டபடியே பறக்கும் பட்டம் அற்புதமானதே. ஆடி பதினெட்டுக்கு அடுத்தநாள், பள்ளியில் தாங்கள் பறக்க விட்ட பட்டம் பற்றிய பெருமையே, நிறைய சிறுவர்களின் விவாதத்தில் நிறைந்திருக்கும்.

இப்படியான நாட்களில், அன்று ஆடி பதினெட்டாம் நாள். முன் காலை பொழுதில் வாய்க்காலை வலம் வந்த எங்கள் கைகளில் ஒரு பட்டம் சிக்கியது. பொதுவாய் தண்ணீர் வரும் வாய்கால் அன்று எங்கள் பொருட்டு பட்டத்தை எடுத்து வந்திருக்கிறது. ஆர்வமாய் அதை ஆராய்ந்த நாங்கள் கைகளில் இருந்த நூல் கொண்டு பறக்க விட்டோம். அதுவும் போக்கு காட்டி படுத்து விட்டது. அந்த வழியாக வந்த இன்னொரு நண்பன், எங்களின் கையறு நிலைகண்டு உதவிகரம் நீட்டினான். சற்றே பட்டத்தில் மாறுதல் செய்திட்ட அவன், அழகாக பட்டத்தை பறக்க விட்டான். அதன் பின் பட்டம், எங்கள் கைகளுக்கு வந்தது. அன்று நாங்கள் அடைந்த மகிழ்ச்சி வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.

இந்த பத்து ஆண்டுகளில் யாரும் பட்டம் விடுவதை காணவில்லை. பட்டம் சிறுவர்கள் உலகில் இருந்து முற்றிலுமாய் விடைபெற்று விட்டது போல் தோன்றுகிறது.

அதே போல் ஆடி பதினெட்டில், தவறாமல் கடைபிடிக்க படும் இன்னொரு விளையாட்டு - ஊஞ்சல் விளையாட்டு [ எங்கள் வழங்கு மொழியில் தூரி ] . சிறுவர்களுக்கு எப்படி பட்டம் கைகளில் தர பட்டதோ , அதே போல் சிறுமிகளுக்கு தூரி. மரத்தின் ஏதாவது நீளும் கிளை, வீடுகளின் குறுக்கு சட்டம் இவை போதும். கயிறுகளில் உருவாகும் தூரி அந்த மாதம் முழுதும் அவர்கள் உலகை வசீகர படுத்தும். வரிசை நீண்ட படியே அடுத்து தான் என கூட்டம் இருந்த படி இருக்கும். சிறுவர்கள் மாலை ஆனவுடன் ஆட்டத்தில் அவர்களும் சேர்ந்து கொள்வர். தூரி மேல் நோக்கி செல்லும் பொழுது வரும் உற்சாகம் வேறு எதிலும் இல்லை. க்ரீச் ஒலி தொடர்ந்தது ஒலித்தபடி இருக்கும் . இன்றும் யாரும் தூரிகள் ஆடுகிறார்களா என தெரியவில்லை. ஒரே விதிவிலக்கு, எல்லா பண்டிகை காலத்திலும், கோயில் திருவிழாக்களில், ராட்டின தூரி முன் நிறைய கூட்டம் கூடுகிறது.

எப்பொழுதும் கதை கேட்கும் ஆவலில் உள்ள நாங்கள், இந்த ஆடி பதினெட்டை நாம் எதற்காக கொண்டாடுகிறோம் என பெரியவர்களை கேட்டு வந்துள்ளோம். அவர்களும், ஆடி பதினெட்டில், அந்த நாட்களில் [ பன்னெடும் காலத்திற்கு முன்] காவிரியில் புது வெள்ளம், இரு கரையை தொட்டபடி ஓடும். அன்று காவிரியில் கூடும் ஆண்களும் பெண்களும், கொண்டு வந்த உணவு பண்டங்கள் உண்டு முடித்த பின், குதூகலமாய் பொழுதை களிப்பர். ஆற்றின் கரை ஓரமாய் நிறைய ஆல மரம் வளர்ந்து இருக்கும். அந்த ஆல மர விழுதுகளில் ஊஞ்சல் கட்டி அந்த நாளை இனிமையாய் போக்குவர். அதன் தொடர்ச்சியாகவே நாம் என்றும் இந்த நாளை கொண்டாடுகிறோம் என்றனர். பின்னாட்களில் கல்கியின் " பொன்னியின் செல்வன் " - முதல் பாகம் படித்த பொழுது அவர்கள் சொன்னது அவ்வளவும் உண்மை என புலப்பட்டது.

ஆடி பதினெட்டாம் பெருக்கு திருநாள் வளமையின் துவக்கம். கொட்டி தீர்த்த பருவ மழை, அந்த வருடமும் பொய்க்காத நீர்நிலை, வரும் ஆண்டின் புது நம்பிக்கை விதைப்பு என இயற்கைக்கு மனதார நன்றி பெருக்கை செலுத்தும் நல்ல நாள். அன்று பொங்கும் புது வெள்ளம் போல், வாழ்வு என்றென்றும் சிறப்புற வேண்டும் எனும் எதிபார்ப்பே அந்த நாள். ஆடி பட்டம் தேடி விதை என்பது பழமொழி. புது பட்டம்; புது விதைப்பு; புதிய நம்பிக்கை ஒளி கீற்று எல்லாவற்றிற்குமான துவக்கம் அன்று. நம் மூதாதையர் அரிதான கண்டுபிடிப்பு பண்டிகைகள், விழாக்களே.

காவிரி நடைபயிலும் ஊர்களில் இன்றும் - அன்றைய நாளில் தலையில் காசுகளை வைத்து நீரில் முங்கி குளித்தல் உள்ளதை அறிந்துள்ளேன். அந்த குதூகலம் என்றென்றும் தொடரட்டும். இந்த ஆண்டும், பருவமழை பொய்க்காது பெய்து புது நம்பிக்கையை கொடுத்து உள்ளது.

அனைவர்க்கும் இனிய ஆடி பதினெட்டாம் பெருக்கு திருநாள் நல்வாழ்த்துக்கள். அனைவர் வாழ்விலும் பொங்கும் புது புனலாய் மலர்ச்சி வந்து சேரட்டும்.
.
.
.

Saturday, July 18, 2009

விடைபெற்ற கான சரஸ்வதி - டி. கே. பட்டம்மாள்



இதோ விடைபெற்று விட்டார் கான சரஸ்வதி டி. கே. பட்டம்மாள். முதிய வயதிலும், எந்த தளர்ச்சியும் இல்லாமல், பொலிவான முகத்துடன், தொலை காட்சிபெட்டியில் முகம் காட்டி சிரிக்கும் பட்டம்மாள் அவர்கள் இன்று இல்லை. தான் என்றென்றும் சுவாசிக்கும் இசையுடன் இரண்டற கலந்து விட்டார். இசைக்கு மகுடமாய் வழங்க பெரும் சங்கீத கலாநிதி பட்டம் , பத்ம பூசன் , பத்ம விபூசன் பட்டங்கள் அவரை அலங்கரித்தவை. பாரதியின் தேச பக்தி பாடல்களை மேடைக்கும், சாதாரண மனிதருக்கும் அறிமுகம் செய்திட்டவர் பட்டம்மாள். அந்த வகையில், தேச பக்தி பாடல்களும், இறை பாடல்களும் அவர் நாவில் நர்த்தனம் புரிந்து வந்துள்ளன.

கல்வியில் சிறந்த காஞ்சியில் பிறந்தவர் பட்டம்மாள். தன் பத்தாவது வயதில் முதன் முதலில் சென்னை வானொலியில் அவரின் இனிய குரல் ஒலித்தது., அதன் பிறகான மூன்றாவது வயதில் மேடையேறியது அவரது குரல். அதன் பின்னர் ஏறக்குறைய அறுபது ஆண்டு அவர் இசை ஆட்சி நடந்து உள்ளது. அவர் சம கால இசை அரசிகளான எம். எஸ். சுப்புலக்ஷ்மி, எம். எல். வசந்த குமாரி, இவர்களுடன் மதிக்க படுபவர். மூவரும், அரிதான இசை பாரம்பர்யத்தை, இசை பரம்பரையை இந்த மண்ணுடன் விட்டு சென்றுள்ளனர்.

திரையில் அவரது பாடல் முதன் முதலில் கல்கியின் அமர காவியமான "தியாக பூமியில் " ஒலித்தது. இசை மூவரில் ஒருவரான முத்து சாமி தீட்சிதரின் பாடல்களை அதிகம் மேடை ஏற்றிய இவர், பாபநாசன் சிவனின் பாடல்களையும் முன் நிறுத்தினார். பாபநாசன் சிவன் அவரை திரையில் அறிமுகம் செய்திட்டவர். மேடை கச்சேரியில் நிறைய புதுமைகளை புகுத்திய பெருமை பட்டம்மாள் அவர்களை சாரும். சாதாரண மனிதனை, அவன் இதயத்தை தொட்டவை பட்டம்மாள் குரல்கள் .

அவரின் பேத்தி "நித்ய ஸ்ரீ மகாதேவன்" ஆவார்கள். அவர் பட்டம்மாள் அவர்களின் இனிய இசை வாரிசு. சுதா ரகுநாதன் அவர்கள் தமது குருவாய் வசந்த குமாரியை வரித்து கொண்டவர் போல்,. நித்ய ஸ்ரீ அவர்கள் பட்டம்மாள் அவர்களை கொண்டாடுபவர்.

பாரதியின் பாடல்கள் அதுவரையில் பாமரனை அடையாத தருணம். "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", "விடுதலை விடுதலை", "தீராத விளையாட்டு பிள்ளை" பாடல்கள் அவரின் அரிதான பொக்கிஷம் - அவரால் மேடைக்கு இடம் பெயர்ந்தவை.. . தேசம் விடுதலை அடைந்த தருணம், அவரின் பாடல் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே.." வானொலியில் அதீத குதூகலத்துடன் ஒலித்திட்டது. இன்றும் எல்லா மேடைகளிலும், "கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை " பாடல் ஒலிக்கிறது . அதன் ஒவ்வொரு நிறைவிலும் பட்டம்மாள் நின்று ஒளிர கூடும்.

அது மூன்று நான்கு வருடத்திற்கு முந்தய தொலைக்காட்சி பேட்டி. அது நித்ய ஸ்ரீ , பாட்டியின் இயல்பான உரையாடலாய், ஒலித்தது. எப்பொழுதும் போல், பாரதி, அவருடன் சுடர்விட்டான் . அவர் விவரித்த ஒரு சம்பவம் நினைவில் உள்ளது. அது முன் ஒரு நாளைய மேடை நிகழ்ச்சி.. அவரும், எப்பொழுதும் போல், பாரதியின் பாடல்களை உணர்ச்சி ததும்ப பாடுகிறார். அதை பார்த்து கொண்டிருந்த முதல் வரிசையில் இருந்த பெண் தொடர்ந்து அழுத வண்ணம் உள்ளார். கச்சேரி முடிந்த பின் பட்டம்மாள் அந்த பெண்ணை சந்திக்கிறார். அது பாரதியின் பிரிய மனைவி செல்லம்மாள். . பட்டம்மாள் அவர்களால், அவரது வியப்பை அடக்கிட முடியவில்லை. அவரின் பாடல்களை அற்புதமாய் படுகிறீர்கள் என அந்த முதிய அம்மையார் வாழ்த்தி உள்ளார். பாரதியும், அவரின் வாழ்வு எதற்காக இயங்கியதோ அதன் முழு பொருளும் அடைந்து விட்டதாய் விண்ணுலகில் இருந்தபடியே வாழ்த்தி இருக்க கூடும்..

எங்களின் பணிவான வணக்கமும், நன்றிபெருக்கும், உங்கள் பாத கமலங்களில்..

போய் வாருங்கள் பாட்டி. உங்களின் ஒவ்வொரு தேச பக்தி கானமும் எங்களுக்கு, தேச பக்தியையும், புது உத்வேகத்தையும் கொடுத்து கொண்டே இருக்கும். உங்கள் குரலும் சூரிய சந்திரர் போல் சாஸ்வாதமானதே.

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று .. "
.
.
.

Saturday, July 4, 2009

சாதனை பயணத்தில் - இன்னுமொரு சிகரம் தொடல் - ரோஜர் பெடெரெர்


இது ரோஜர் காட்டில் அடைமழை காலம். பின்னே! ஒரு மாத இடை வெளியில் இரண்டு கிராண்ட் ஸ்லாம்கள் ரோஜர் கைகளில் தவழ்கின்றது . இந்த டென்னிஸ் இளவரசனின் மட்டை தொட்டதெல்லாம் பொன்னாய் துலங்குகிறது. பிரெஞ்சு ஓபன் வெற்றியை கொண்டாடி முடிக்கும் முன் இதோ விம்பிள்டன் இறுதியில் ஆண்டி ரோடிக்கை வீழ்த்தி ரோஜர் சாம்பியன்.

தனது நீண்ட டென்னிஸ் பயணத்தில் புதியதொரு அத்தியாயத்தை துவங்கும் முனைப்பில் ரோஜர் இந்த விம்பிள்டன் தொடரில் காலடி வைத்தார் . தன் இருபத்து ஏழுவயதில் , ஏழாவதுவிம்பிள்டன் இறுதி போட்டியில் ஆரவாரமாக களம் கண்டார் . அட என்னவொரு ஆச்சர்யமான, அலட்டல் அதிகம் இல்லாத பயணம்.. அதுவும் தொடர்ச்சியாக ஏழாவது விம்பிள்டன் இறுதியில். ஏழுவிம்பிள்டன் பயணத்தில் ஆறில் சாம்பியன். தான் ஒரு தன்னிகரற்ற சாம்பியன் என்பதை நேற்றைய போட்டியில் அழுத்தமாக நிரூபித்துள்ளார்.
இந்த விம்பிள்டனை கைப்பற்றிய ரோஜர், பீட்சாம்ப்ரசின் பதினாலு கிராண்ட் ஸ்லாம் சாதனையை முறியடித்து , பதினைந்தாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற பிரபஞ்சத்தின் முதல் வீரர் என்ற தனிப்பெரும் சிறப்புக்கு முன்னேறி இருக்கிறார் . சென்ற ஆகஸ்டில், உலகின் முதல் நிலை வீரர் என்ற பட்டத்தைஇழந்தார்[தொடர்ந்து 237 வாரம்]. இழந்த முதல் இடத்தை, இந்த கிராண்ட் ஸ்லாம் வெற்றி மூலம் மீட்டு இருக்கிறார். தன் வாழ்நாளில் நிச்சயம் இந்த நாளை மறக்க மாட்டார் . இந்த விம்பிள்டன் ஞாயிறை நிச்சயம் வரலாறு தன் குறிப்பேட்டில் அழுத்தமாக இன்னொரு சாம்பியனை குறிப்பெடுத்து கொள்ளும். பாரம்பரியம் மிக்க விம்பிள்டன் மைதானம், எவ்வளவோ போட்டிகளை கண்ட அந்த பச்சை புல்தரை இன்னொரு அறிய பொக்கிசத்தை சப்தத்துடன் உலகுக்கு அறிவித்து தனக்கு புகழ் தேடி கொண்டது . இதோ இங்கொரு சாதனை சிகரம் என..

இந்த ஆண்டின் இதுவரையில் நடந்த மூன்று கிராண்ட்ஸ்லாம் இறுதியிலும் ரோஜர் இருந்தார். ஆஸ்திரேலிய ஒபனில், இறுதி வரை போராடி ரபெல் நடாலிடம் தோற்ற ரோஜர் பிரெஞ்சு ஓபெனில் புது எழுச்சியோடு களம் கண்டார். கோப்பையை வென்று எடுத்தவர் முகத்தில் அளவிட முடியாத ஆனந்தம்.. தன்னை எப்பொழுதும் தொடர்ந்தது கொண்டிருந்த நெருக்கடியில் இருந்து மீண்டவராய் பெருமூச்சு விட்டார். இனி தன்னை இன்னும் இவர் பிரென்ச்சு ஓபன் போட்டியை வென்றெடுக்க முடியாதவர் என கை நீட்ட முடியாது என்பது அவர் கருத்து. இந்த நிமிடமே டென்னிஸ் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுவது என்றாலும் தனக்கு பூரண சம்மதம் என அறிவித்தார்.

தன் பெரிய கனவை அடைந்தவருக்கு அதை கொண்டாட நேரம் இல்லை. இதோ விம்பிள்டன் இறுதியில் அசாத்திய மன உறுதியுடன் போராடி ஆண்டி ரோடிக்கை பின் தள்ளி புன்னகைக்கிறார் பெடரர். பிரென்ச்சு ஓபன் வென்றவருக்கு உலகம் ஆனந்தமாய் அன்பு ததும்பும் நீருற்றாய் மாறி போனது. இதோ அவரது எண்ணிலடங்கா ரசிகர்கள் அடுத்த ஒரு ஆனந்த தருணத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள். இதோ அவரது சுவிஸ் இல்லம் பழைய குதூகலம் மறையாமல் அடுத்த கொண்டாட்டத்துக்கு ரெடி. பேஸ் புக் மூலம் தன்னை இணைத்து கொண்டவருக்கு இதுவரையில் இரண்டு மில்லியன் விசிறிகள். அதன் மூலமே தன் அன்பு ரசிகர் வட்டத்துடன் பதிலளிக்கிறார்.

இந்த விம்பிள்டன் துவக்கத்திலேயே ரோஜரின் பெரிய போட்டியாளரும், சென்ற ஆண்டைய சாம்பியனும் முதல் நிலை வீரருமான நடால், மூட்டு பிரச்சனையால் விலக நேர்ந்தது. அப்படியே அவர் இந்த முறை ஆடி இருப்பினும் சிங்கம் எந்த சவாலுக்கும் ரெடி என தன் பிடரியை சிலுப்பி கொண்டே நின்றது. இதுவரையில் இவர்கள் இருவரும்,விளையாடும் ஆட்டங்களே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. சென்ற முறை ரோஜர் நடால் இடையே நடந்த போட்டி ஐந்து - அரைமணி நேரம் நடந்ததே இதற்கு சாட்சி. அவ்வளவு நேரம் நீண்ட ஒரு போட்டியை விம்பிள்டன் அது நாள் வரையில் கண்டதில்லை. அதற்க்கு சற்றும் குறையாமல் நேற்றைய போட்டியும் நீண்டு கொண்டே போனது வேறு விஷயம். இது நாள் வரையில், இருபது இறுதி போட்டிகளை கிராண்ட் ஸ்லாம் மூலம் தொட்டு உள்ளார் . அதில் பதினைந்து முறை வெற்றி. இருபத்து ஒரு முறை தொடர்ந்தது அரை இறுதியை தொட்டு உளார்.

விம்பிள்டன் ஒரு கனவு மைதானம். பச்சைபுல்தரை, வெண்மை உடை, விம்பிள்டன் போட்டிக்கே உரித்தான பாரம்பர்யம். டென்னிஸ் ராக்கெட் பிடிக்கும் ஒவ்வொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும், புதிய மைல் கல்லை புதிய சிகரத்தை தொடும் நம்பிக்கையை ரோஜர் தோற்றுவித்து உள்ளார் . நேற்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமிலாமல், சென்று கொண்டே இருந்தது. இருவரும் தொடர்ந்து போராடினர். யாரும் களைப்பு அடையவே இல்லை - பார்வையாளர் உட்பட தான் ... முதல் செட்டை இழந்த ரோஜர் அடுத்த செட்டையும் இழக்கும் தருவாயில் இருந்தார். ஆட்டம் முழுதுமாய் ரோடிக் ஆதிக்கம் செலுத்தும் நிலை அந்த நிமிடம் இருந்தது.அந்த நிலையில் இருந்து மீண்ட ரோஜர் அந்த செட்டில் வென்று அடுத்த செட்டையும் தனது ஆக்கினார் . நான்காவது செட்டை முழுதும் ரோடிக் ஆதிக்கம் செலுத்தினார்.

பட்டத்தை வெல்வது யார் என்பதை ஐந்தாவது செட் முடிவு செய்வதாய் இருந்தது. கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரம் நீண்டது. முடிவில் ரோடிக்கின் சர்வை அதுவரையில் முறியடிக்க முடியாத ரோஜர் அந்த முறை முறியடித்தார். போட்டியும் அவர் வசம் வந்தது. இறுதியில் ரோடிக் அதிகம் வருத்தமுற்றவராய் தனது இருக்கையில் இருந்து எழ எண்ணமிலாமல் இருந்தார். மொத்தத்தில் இருவருக்கும், இடையில் மயிர் இழை வித்தியாசமே இருந்தது. ரோடிக்கும் நேற்று கோப்பையை வெல்ல கூடியவராய், ஏன், வென்றவராய் தோன்றியது. மூன்று முறை விம்பிள்டன் இறுதிக்கு முன்னேறி, மூன்று முறையும் ரோஜரின் கைகளில் கோப்பையை தவற விட்டார். நேற்றைய ஸ்கோர் கணக்கு இப்படி பிரதிபலித்தது. [5-7 7-6 (8-6) 7-6 (7-5) 3-6 16-14] கடைசி செட் ஏறக்குறைய மூன்று செட்களை விளையாடியது போல் இருந்தது.
முடிவில், ரோஜரின் பதட்டம் இல்லாத ஆட்டம், அவரின் தளராத மன உறுதி, புதிய சிகரத்தை உறுதி செய்தது,. ஆட்டத்தை தவிர அவர் எதிலும் கவனம் குவிப்பவர் அல்ல ரோஜர். அதே போல், என்றும், வெற்றியை தலைக்கு ஏற்றி கொள்ளாதவர் . என்றும் தவழும் அமைதி அவரின் இன்னொரு பரிணாமம். இன்னும் சாதிக்க வேண்டும் எனும் துடிப்பு அவரை முன்னெடுத்து செல்கிறது. நல்வாழ்த்துக்கள் ரோஜர். சாதனை தொடரட்டும்..

.

.
.