Thursday, December 25, 2008

இல. செ. க. வின் கிராமத்து ஓவியங்கள்


தன்னம்பிக்கை இதழின் நிறுவனரும், வளரும் வேளான்மை இதழின் நிறுவன ஆசிரியருமான இல. செ. க. வின் கிராமத்து ஓவியங்கள் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. இந்த நூல் எண்பதுகளின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுரிகளில் துணை நூலாகவும் அமைந்து இருந்த சிறப்புடையது.

ராசிபுரத்திற்கு அருகே பிறந்தவர் இல. செ. கந்தசாமி அவர்கள். பள்ளி ஆசிரியராக துவங்கியவர், பின் நாளில் கோவை வேளாண் பல்கலை துறை தலைவராக பணியாற்றினார். தமிழில் முதன் முயற்சியாக மனித நம்பிக்கையை மீட்டு எடுக்கும் நோக்கில் தன்னம்பிக்கை நூல் உதயமானது.

கிராமத்து ஓவியங்கள் நூலிற்கு வல்லிக்கண்ணன் அவர்கள் முன்னுரை வரைந்துள்ளார். இந்த நூல் நடை சற்றே வித்தியாசப்படுகிறது. இந்த நூலின் கதை மாந்தர்கள் மூலமாக அவர்களின் எண்ணத்தில் கதையை நகர்த்தி சென்றுள்ளார். நூலின் முன்னுரையில், ஆசிரியர், தன் நோக்கத்தை தெரிவிக்கிறார். ஒவ்வொருவரின் காலமும் விலைமதிக்க முடியாதது. என்னுடைய நோக்கம் யாருடைய நேரத்தையும் வீணாக்குவது அல்ல என சொல்லி துவங்குகிறார்.

அவர் படம் பிடிக்கும் கிராமம் இன்றைய நாட்களுக்கும் அப்படியே பொருந்துகிறது. சமூக நாவலாக இந்த நூலை தந்துள்ளார் ஆசிரியர். தனது பாத்திரங்கள் மூலம் நல்லதொரு கிராமம் எப்படி அமைய வேண்டும் என்பதை சொல்லி செல்கிறார். இதில் இடம்பெறும் மாந்தர்கள் அனைவரும் சமகால வாழ்வில் நாம் சந்திக்கும் மக்களே. ஊர் தோறும் தொடரும் குடிப்பழக்கம் என்றும் சக மனிதனின் அடையாளமாகி விட்டது. கிராம பொருளாதாரத்தின் மிகப்பெரும் பங்கு இன்றும் மது அருந்தும் இடத்தில் தான் செலவிடப்படுகிறது. அவர் சுட்டி செல்லும் திரை படங்கள் போன்றே இன்றும் சமூக அக்கறை அற்றவை மலிந்துவிட்டன. சுய லாபத்திற்காக அரசியல் செய்வது நாள்தொறும் பெருகிவருகிறது.

ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்றதாய், தன் தேவைகளை தானே நிறைவேற்றும் வல்லமை கொண்டதாய் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறார். மனிதரிடம் உள்ள பிற்போக்குத்தனம், ஏற்ற தாழ்வுகள், இளைய சமுதாயத்திடம் என்றும் உள்ள தடுமாற்றம் என மனித வாழ்விற்கு தேவையான கொள்கையோடு நாவல் நகர்கிறது. வாழ்விற்கு நல்ல சிந்தையை அறிமுகப்படுத்தும் முனைப்பு ஆசிரியரின் எளிய நடையில் பளிச்சிடுகிறது.

எழுத்துக்கள் மனித வாழ்விற்கு எந்நாளும் உரம் இடுகின்றன. அந்த வகையில் வந்த, வாழ்வின் உன்னதத்தை அறிமுகம் செய்யும் அரிய நூல் இது.

புத்தகத்தில் இடம்பெறும் சில சிந்தனைகள்:

  • அரும்புவதற்கு என்றும், மலர்வதற்கு என்றும், காய்ப்பதற்கு என்றும், கனிவதற்கு என்றும் ஒரு காலம் இருக்கின்றதல்லவா? சிலவற்றை அடைவதற்கு அந்த காலம் வரும் வரை பொறுத்திருக்கவும் வேண்டும்.
  • புகழ்ச்சி மிகப்பெரிய மயக்கத்தை உண்டாக்கிவிடும். அறிவை வேலை செய்ய விடாமல் மழுங்க செய்துவிடும். புகழ்ச்சிக்கு அடிமையாகி தங்களை இழந்தவர்கள் மிகப்பலர்.
  • வாழ்கையில் வருகின்ற துன்பமும், தோல்வியும் தான் மனிதனை முழுமையான மனிதனாக்குகிறது.
  • வாழ்கையில் அழுத்தமான குறிக்கோள் இருந்தால் மனிதன் அதை நோக்கியே சென்று கொண்டிருப்பான். அதனால் தவறுகள் அதிகம் நிகழாது.
  • சிதைந்த கனவின் துணுக்குகளை தழுவிக்கொண்டு சோர்ந்து கிடைப்பதற்காக மனிதன் பிறக்கவில்லை. வெறுமே 'கடந்த காலம்' என்ற இரும்பு சங்கிலி கொண்டு மனதை கட்டி வைக்க முடியாது. ' வருங்காலம் ' என்ற கருட சிறகு மனதுக்கு பெருவரமாக கிடைத்திருக்கிறது. கனவு ஒன்று காண்பது; அதை மலர்விப்பது; நடைமுறையில் அதை உண்மைப்படுத்துவது; அப்படி படுகிற பாட்டில் ஆனந்தம் கொள்ளை கொள்வது. இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக அந்த கனவு சிதைந்து அழிந்தாலும், சிறிதும் சோர்வுறாமல் அதன் துண்டுகளின்களின் மீது, ரத்தம் தோய்ந்த காலால் நடந்து வேறொரு கனவை நோக்கி ஓடுவது. இது தான் மனித மனப்பண்பு - எனும் காண்டேகரின் சிந்தனை.
பதிப்பு: விஜயா பதிப்பகம் - கோவை


No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்