Sunday, August 24, 2008

சிறிய உள்ளம்; பெரிய உலகம்


குழந்தைகள்! இறை தொட்டு ஆசிர்வதித்த மகோன்னதங்கள். ஒவ்வொரு மழலையும் மலரும் போது உலகுக்கு உணர்த்த ஆயிரம் விஷயங்களோடே வருகின்றது. அதற்கு முன்பும் அந்த கலவையோடு எந்த உயிரும் வரவில்லை. அதற்கு பின்பும் அந்த கலவையோடு எந்த உயிரும் பிறப்பதில்லை. அபூர்வமான தனித்துவம் இறைவனால், இயற்கையால் மட்டுமே சாத்தியப்படுகிறது.

வளர்கின்ற பருவத்தில், உலகின் அத்தனை விஷயங்களும் பார்ப்பதும் கேட்பதும் அந்த புதிய உயிர்க்கு புதிது. ஒரு புதிய பொருளை தொட்டு உணர்கிற நிமிடங்கள் அலாதியானவை . ஏன் அழகானவையும் கூட. அது தண்ணீராயினும் சரி, தீயாயினும் சரி பெறுகின்ற பாடங்கள் எந்த ஆசானாலும் கற்று தர முடியாதவையே.

குழந்தைகள் "இக்கணத்தில் வாழ்" எனும் புத்தனின் வார்த்தைகளை சரியாக பின்பற்றுவர். குழந்தைகளின் உலகம் பிடிவாதத்தால் நிரம்பியதே. வளாந்த நம்மில் பலரும் அப்படியேதான் இருக்கிறோம். குழந்தை கடையில் ஒரு பொம்மையை பார்த்தால் உடனே அது தன் கையில் இருக்க வேண்டும் என ஆசைப்படும். அதை பெற அத்தனை சாம பேத தான தண்டத்தையும் முன்வைக்கும். பல தருணத்தில் கண்கள் அருவியாகும் . அடுத்த பத்தாவது நிமிடம் அந்த பொம்மையை வீசிவிட்டு மற்றொரு உலகில் மகிழ்ச்சியோடு சஞ்சரித்து இருக்கும். பத்து நிமிடம் முன் அழுத குழந்தை இது என்பதற்கு அதன் கன்னத்தில் சுடர்விடும் ஒரு சில கண்ணீர் முத்துகளே சாட்சி. புத்தனின் அரிய தத்துவத்தை தம்மை அறியாமலே நடைமுறை படுத்துவபவர்கள்.

வளர்கின்ற தருணங்களில் மனம் விசாலமடையும். அந்த பக்குவம் பெறாத மனிதர்கள் நிறைய பிடிவாதத்துடன் வாழ்நாள் முழுவதும் சிறுவர்களாகவே இருக்கிறார்கள்.


சமீபத்தில் நான் கேட்டுணர்ந்த படம் "தாரே ஜமீன் பர்" . அமீர்கானால் இயக்கி நடிக்கப்பட்ட இந்த படம் கவனிக்காமலே விடப்படும், சிறுவர்களின் தனித்தன்மை பற்றி பேசுகின்றது. எதையும் புரிந்து படிக்க முடியாத நோய்மையும்(dyslexic) இங்கு கோடிட பட்டுள்ளது.



ஒவ்வொரு மனிதனும் அபூர்வமான தனித்தன்மையோடு பிறக்கிறார்கள்; வளர்க்கிறார்கள். நாம் அந்த தனித்தன்மையை கண்டறிந்து ஊக்குவிக்கிறோமா ? என்பதே கேள்வி . இதற்கான பதில் கசப்பனதே! ஒவ்வொரு குழந்தையும் அதன் வெளி தோற்றம் சூட்டிகையை வைத்தே அனைவராலும் அறியப்படுகிறார்கள். அதன் தனித்துவத்தை யாரும் புரிந்துகொள்ள முன்வருவதில்லை.


நம் முன் இருக்கும் பெரும்பாலான சிந்தனையாளர்கள் , சாதனையாளர்கள் தங்கள் தனித்துவம் மூலமே அறியப்பட்டிருக்கிறார்கள். பாடகர்கள், விளையாட்டு வீரர்கள், உலகம் வியக்கும் இசை மேதைகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிற்பிகள், ஓவியர்கள் என அத்தனை பேரும் கால நதி அலையில் நிற்கும் அபூர்வ சாம்பியன்கள்.


ஒரு குழந்தையை அது பெறும் மதிப்பெண்ணை வைத்து அறிவற்றவன் என ஆசிரியராலும் ,மற்றோராலும் முத்திரை குத்தப்படும் நிமிடங்கள் மிக மிக கடினமானவை. அந்த நிமிடம் வரை நம்மோடு நிறைய கனவுகளோடு வலம் வந்த இளம் குருத்துக்கள் அப்போது தான் கூம்பி போகின்றன. அந்த நிமிடத்தில் இருந்து வளர்கிற எல்லா நாட்களிலும் வார்த்தை அம்புகளாலேயே வதைபடுகிறார்கள். தான் அறிவற்றவன் என்ற தோல்வி மனப்பான்மை அங்கே கிளைவிடுகிறது. உண்மை அதற்கு நேர் மாறாக உள்ளது. சிறு வயதில் தனி தன்மையை வெளிப்படுத்த அமையும் ஓரிரு தருணங்களில் கூட ஆசிரியர்கள் கல்வி மட்டுமே அளவுகோலாக எண்ணுகிறார்கள்.


கல்லுரிகளும் பல்கலைகழகங்களும் மிக அதிகம் வளர்ந்து விட்ட இன்றைய நாளில் எத்தனை பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை போதிக்கிறார்கள்! தொடர்கின்ற சிந்தனையாலும், தளராத முயற்சியாலும் மட்டுமே உலகில் அனைத்தும் சாத்தியப்பட்டு இருக்கின்றன எனும் அறிய பாடமல்லவா நம் அனைவர்க்கும் பாலபாடமாய் அமைய வேண்டியது. சலிக்காத உழைப்போடு, உற்சாகம், ஈடுபாடு இவற்றை நாம் போதிக்கின்றோமா? நல்ல சமுதாயத்திற்கு இவை அல்லவா உரமாய் இடப்பட வேண்டியவை. இதை பற்றி கல்வியாளர்களும் பெற்றோரும் ஒருமித்து சிந்திக்க வேண்டிய தருணமிது.


வருங்காலத்தில் தன் குழந்தை மருத்துவன், பொறியாளன் என வரவேண்டும் என திட்டமிடுகிற பெற்றோர் எவ்வளவு துரம் தம் குழந்தைக்கு முயற்சியை கற்று கொடுக்கிறார்கள்? பெற்றோரால் சரியாக செய்ய முடிந்தது ஒப்பிடு மட்டுமே. பக்கத்து வீட்டு குழந்தையோடு மட்டுமே நம் குழந்தையை ஒப்பீடு செய்கிறோம்.

"சித்திரமும் கைப்பழக்கம் ,
செந்தமிழும் நாப்பழக்கம் அல்லவா".

லிங்கனை, எடிசனை, ஏஞ்சலோவை , பீத்தோவன் , பாரதி, தாகூர் ஏன் நம் முன் நிற்கும் எத்தனையோ சாதனையாளர்கள் தடை கற்களை படி கற்களாக மாற்றியவர்கள் மட்டுமே! அவர்களின் வெற்றியை கொண்டாடும் நாம் தோல்விகளால் துவண்டு விடாத அவர்களின் எண்ண முகவரிகளை வெளிச்சமிடலாமே!


வலிவான மன உறுதியே நம் குழந்தைகட்கு வேண்டும். எண்ணங்களே மனிதனை ஆக்கவோ அழிக்கவோ செய்கின்றன. நெப்போலியன் ஹில்லின்(Nepolean Hill) அபூர்வ வாசகம் "What your mind consumes and believes that can be achieved" என் நினைவுக்கு வருகிறது.


பாட புத்தகங்கள் மட்டுமின்றி கற்றல் அதற்கு வெளியேயும் உள்ளது. ஒரு கம்பளி பூச்சி சிறகடிக்கும் வண்ணத்து பூச்சியாய் மாறும் என்பது அது புழுவாய் இருக்கின்ற தருணங்களில் தெரிவதில்லை. அது வண்ணத்து பூச்சியாய் மாறும் என்பதற்கு அதன் தோற்றத்தில் எந்த அடையாளமும் இல்லை. அதே போல் எந்த குழந்தையும் வரலாற்றில் இடம்பெறலாம். அது குழந்தையாய் இருக்கிற தருணத்தில் இருந்து அதன் தனி தன்மையை வளர்த்து வார்த்தெடுப்போம். நம் கனவு வண்ணத்து பூச்சி மட்டுமே.